திருவெழுகூற்றிருக்கை

bookmark

பாடல் 1326

ராகம் – தர்பாரிகானடா, தாளம் – ஆதி, (எடுப்பு 3/4 இடம்) 

ஓருரு வாகிய தாரகப் பிரமத் 
தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி 
ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை 
இருபிறப் பாளரினொருவ னாயினை 
ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
நான்முகன் குடிமி இமைப்பினிற் பெயர்த்து 
மூவரும் போந்து இருதாள் வேண்ட 
ஒருசிறை விடுத்தனை 
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின் 
முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை 
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி 
ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை 
ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய 
மும்மதன் தனக்கு மூத்தோ னாகி 
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள் 
அறுகு சூடிக் கிளையோ னாயினை 
ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து 
முக்கட் சுடரினை இருவினை முருந்துக் 
கொருகுரு வாயினை 
ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி 
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் 
ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென 
எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை 
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் 
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட் 
டன்றி லங்கிரியிருபிள வாக ஒருவேல் விடுத்தனை 
காவிரிவடகரை மேவிய குருகிரிஇருந்த 
ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற 
ஏரகத் திறைவ னென இருந்தனையே.