தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22

1. திருக்கச்சி - அத்திகிரி
பொருளாசை மண்ணாசை பூங்குழலார் போகத்
திருளாசை சிந்தித் திராரே - அருளாளன்
கச்சித திருப்பதியா மத்தியூர்க் கண்ணன்றாள்
*-ச்சித் திருப்பதியா யென்று. (74)
2. திருவட்டபுயங்கம்
என்றுத் துயருழக்கு மேழைகாள்! நீங்களிளங்
கன்றுபோற் றுள்ளிக் களித்திரீர் - அன்றுநடம்
இட்ட புயங்கத் திருசரண மேசரணென்
தட்டபுயங் கததர்க்கா ளாய். (75)
3. திருத்தண்கா
[பிரிந்து ஆற்றாளாய தலைவி தலைமகன் பக்கல் தனக்கு உள்ள
அன்புறுதியைத் தோழிக்குக் கூறுதல்]
ஆட்பட்டே னைம்பொறியா லாசைப்பட் டேனறிவும்
கோட்பட்டு நாணங் குறைபட்டேன் - சேட்பட்ட
வண்காவை வண்டுவரை வைத்த விளக்கொளிக்குத்
தணகாவைச் சேர்ந்தான் றனக்கு. (76)
4. திருவேளுக்கை
தனக்குரிய னாயமைந்த தானவர்கோன் கெட்டான்
உனக்குரிய னாயமைந்த னுய்ந்தான் - நினைக்குங்கால்
வேளுக்கை யாளரியே! வேறுதவி யுண்டோ?உன்
தாளுக்கா ளாகாத வர்க்கு. (77)
5. திருப்பாடகம்
தவம்புரிந்த சேதனரைச் சந்திரனா தித்தன்
சிவன்பிரம னிந்திரனாச் செய்கை - உவந்து
திருப்பா டகமருவுஞ் செங்கண்மா றன்மார்
பிருப்பா டகவுரை யாலே. (78)
6. திருநீரகம்
ஆலத் திலைசேர்ந் தழியுலகை யுட்புகுந்த
காலத்தி லெல்வகைநீ காட்டினாய்? - ஞாலத்துள்
நீரகத்தாய்! நின்னடியே னெஞ்சகத்தாய்! நீண்மறையின்
வேரகத்தாய்! வேதியர்க்கு மீண்டு, (79)
7. திருநிலாத் திங்கட்டுண்டம்
மீண்டுந் தெளியார்கண் மேதினியோர் நின்னடிப்பூப்
பாண்டரங்க மாடி படர்சடைமேல் - தீண்டிக்
கலாத்திங்கட் டுண்டத்தின மீதிருப்பக் கண்டு
நிலாத்திங்கட் டுண்டத் தானே! (80)
8. திருவூரகம்
நேசத்தா லன்றுலகை நீர்வார்க்க வைத்தளந்த
வாசத்தா ளென்றலைமேல் வைத்திலையேல் - நாசத்தால்
பாரகத்து ளன்றிநான் பாழ்நரகில் வீழ்ந்தென்கொல்?
ஊரகத்து ணின்றாய்! உரை. (81)
9. திருவெஃகா
உரைகலந்த நூலெல்லா மோதி யுணர்ந்தாலும்
பிரைகலந்த பால்பேரற் பிறிதாம் - தரையில்
திருவெஃகா மாயனுக்கே சீருறவாந் தங்கள்
உருவெஃகா வுள்ளத்தி னோர்க்கு. (82)
10. திருக்காரகம்
ஓராதார் கல்வி யுடையேங் குலமுடையேம்
ஆரா தனமுடையேம் யாமென்று - சீராயன்
பூங்கர ரகங்காணப் போதுவார் தாடலைமேல்
தாங்கா ரகங்காரத் தால். (83)
11. திருக்கார்வானம்
தாலேலோ வென்றாய்ச்சி தாலாட்டித் தன்முலைப்பா
லாலேயெவ் வாறுபசி யாற்றினள்?முன் - மாலே!பூங்
கார்வானத் துள்ளாய்! கடலோடும் வெற்போடும்
பார்வான முண்டாய்!நீ பண்டு. (84)
12. திருக்கள்வனூர்
பண்டேயுன் றொண்டாம் பழவுயிரை யென்னதென்று
கொண்டேனைக் கள்வனென்று கூறாதே - மண்டலத்தோர்
புள்வாய் பிறந்த புயலே! உனைக்கச்சிக்
கள்வாவென் றொதுவதென் கண்டு? (85)
13. திருப்பவளவண்ணம்
கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால்
உண்டறிந்து மோந்தறிந்து முய்யேனே - பண்டைத்
தவளவண்ணா! கார்வண்ணா! காமவண்ணா! கச்சிப்
பவளவண்ணா! நின்பொற் பதம். (86)
14. திருபரமேச்சுரவிண்ணகரம்
பதத்தமிழாற் றன்னையே பாடுவித்தென் னைத்தன்
பதத்தடியார்க் கேயாட் படுத்தான் - இதத்த
பரமேச் சுரவிண் ணகரான் பலவான்
வரவேச் சுரலணைந்த மால். (87)
15. திருப்புட்குழி
மால்வே ழமுமரவு மாயையும்வெற் புங்கடலு
மேல்வீழ் படையும் விடமும்போய்ப் - பாலன்
நெருப்புட் குழிகுளிர நின்றதுங்கேட் டோதார்
திருப்புட் குழியமலன் சீர். (88)
16. திருநின்றவூர்
[தலைவி தோழியர்க்கு அறத்தொடுநிற்றல்]
சீரறிந்து தோழிமீர்! சென்று கொணர்ந்தெனக்குப்
போர முலைமுகட்டிற் பூட்டுமினோ! - நேரவுணர்
பொன்றவூர் புட்கழுத்திற் பொன்னைமா ணிக்கத்தை
நின்றவூர் நித்திலத்தை நீர். (89)
17. திருவெவ்வுளூர்
நீர்மைகெட வைதாரு நின்னோ டெதிர்த்தாரும்
சீர்மைபெற நின்னடிக்கீழ்ச் சேர்க்கையினால் - நேர்மையிலா
வெவ்வுளத்த னேன்செய் மிகையைப் பொறுத்தருளி
எவ்வுளத்தனே! நீ யிரங்கு. (90)
18. திருநீர்மலை
இரங்கு முயிரனைத்து மின்னருளாற் காப்பான்
அரங்க னொருவனுமே யாதல் - கரங்களால்
போர்மலைவான் வந்த புகழவாணன் காட்டினான்
நீர்மலைவா ழெந்தையெதிர் நின்று. (91)
19. திருவிடவெந்தை
நின்று திரியும் பிறவியெல்லா நேர்வித்துக்
கொன்ரு திரியுங் கொடுவினையார் - இன்று
வெருவிடவெந் சைக்கே விழுமியதொண் டானேன்
திருவிடவெந் தைக்கே செறிந்து. (92)
20. திருக்கடன்மல்லை
செறிந்த பணைபறித்துத் திண்களிற்றைச் சாடி
முறிந்துவிழப் பாகனையு மோதி - எறிந்து
தருக்கடன்மல் லைக்குமைந்தான் றஞ்சமென்று நெஞ்சே!
திருக்கடன்மல் லைக்குட் டிரி! (93)
21. திருவல்லிக்கேணி
திரிந்துழலுஞ் சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப்
புரிந்து *பகனமின்? புகன்றால் - மருந்தாம்
கருவல்லிக் கேணியா மாக்கதிக்குக் கண்ணன்
திருவல்லிக் கேணியான் சீர். (94)
22. திருக்கடிகை
சீரருளா னம்மைத் திருத்திநா முன்னறியாக
கூரறிவுந் தந்தடிமை கொண்டதற்கே - நேரே
ஒருகடிகை யம்மனமே! உள்ளுகிலாய் முத்தி
தருசடிகை மாயவனைத் தான். (95)
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் முற்றம்.