வடநாட்டுத் திருப்பதிகள் - 12

1. திருவேங்கடம் (திருப்பதி)
தானே சரணமுமாய்த் தானே பலமுமாய்த்
தானே குறைமுடிக்குந் தனமையான் - தேனேய்
திருவேங் கடந்தொழுதேந் தியவிபூ திக்குள்
மருவேங் கடந்தனெமிவ் வாழ்வு. (96)
2. திருச்சிங்கவேள்குன்றம் (அகோபிலம்)
வாழ்குமரன் மேற்கனக வஞ்சகன்மே லோர்முகத்தே
சூழ்கருணை யும்முனிவுந் தோன்றியவால் - கேழ்கிளரும்
அங்கவேள் குன்ற வழல்சரபத் தைப்பிளந்த
சிங்கவேள் குன்றத்தி னார்க்கு. (97)
3. திருவயோத்தி
ஆர்க்குமிது நன்றுதீ தானாலு நெஞ்சே!நீ
பார்க்கும் பலகலையும் பன்னாதே - சீர்க்கும்
திருவையோத் திப்பயலைச் சீரியமெய்ஞ் ஞானத்
துருவையோத் திற்பொருளை யோர். (98)
4. திருநைமிசாரணியம்
ஓரறிவு மில்லாத வென்போல்வார்க் குய்யலாம்
பேரறிவுண் டேனும் பிறர்க்கரிது - பாரறிய
நைம்மிசா ரண்ணியத்து நாதரடி யாரோடும்
இம்மிசார் வுண்டாயி னால். (99)
5. திருச்சாளக்கிராமம்
உண்டா முறைமை யுணர்ந்தடிமைப் *பேர்புண்டேன்
பண்டாங் குடிகுலத்தாற் பன்மதத்தால் - கொண்டாட்டால்
ஆளக் கிராமத்தா லல்லற்பேர் பூணாமல்
சாளக் கிராமத்தார் தாட்கு. (100)
6. திருவதரியாச்சிரமம்
தாட்கடிமை யென்று தமையுணாரார்க் கெட்டெழுத்தும்
கேட்கவெளி யிட்டருளுங் கேசவனை - வேட்கையொடு
போவதரி தானாலும் போய்த்தொழுவோ நெஞ்சமே!
மாவதரி யாச்சிரமத் து. (101)
7. திருக்கங்கைக்கரைக்கண்டம்
மத்தாற் கடல்கடைந்து வானோர்க் கமுதளித்த
அத்தா! எனக்குன் னடிப்போதில் - புத்தமுதைக்
கங்கைக் கரைசேருங் கண்டத்தாய்! புண்டரிக
மங்கைக் கரைசே! வழங்கு. (102)
8. திருப்பிருதி
வழங்கு முயிரனைத்தும் வாரிவாய்ப் பெய்து
விழுங்குங் கவந்தன் விறற்றோட் - கிழங்கைப்
பொருப்பிருதிக் குங்கிடந்தாற் போற்றுணிந்து வீழ்த்தான்
திருப்பிருதிக் கென்னெஞ்சே! செல். (103)
9. திருவடமதுரை
செல்வ முயுருடம்பு சேர வுரித்தாக்கி
வல்வினையி னீங்குமினோ மாந்தர்காள்! - தொல்லை
வடமதுரை யான்கழலே வாய்த்தஞ்ச மென்று
திடமதுரை செய்தான் றிறத்து. (104)
10. திருத்துவாரகை
திறந்திறமாத் தாந்துய்க்குந் தீஞ்சுவையை நாடி
அறந்திறம்பிப் பாதகரோ ரைவா - நறுந்துளவ
மாதுவரை யோனே! மனந்துணையாக் கொண்டென்னைக்
காதுவரை யோ!மெய் கலந்து. (105)
11. திருவாய்ப்பாடி (கோகுலம்)
கலந்தமர ரோடுங் கலைகண்டா ரோடும்
பொலிந்துதிரு நாட்டிருக்கப் போவீர்! - மலிந்தபுகழ்
அண்டராய்ப் பாடி யமலரடி யாரடியார்
தொண்டராய்ப் பாடித் தொழும். (106)
12. திருப்பாற்கடல்
தொழும்பாய நானல்ல சூதறிந்து கொண்டேன்
செழும்பா யலைமுத்தஞ் சிந்தி - முழங்கும்
திருப்பாற் கடலான்றாள் சேர்ந்தா ரடிசேர்ந்
திருப்பாற் கடலா மிடர். (107)
வடநாட்டுத் திருப்பதிகள் முற்றும்.