நச்சுப்புல் களையெடுப்பு

bookmark

பயிர் வளர வேண்டுமானால் நச்சுப்புல்லை நறுக்கித் தள்ளவேண்டும். நன்மை வளர வேண்டுமானால் தீமை ஒழிக்கப்படவேண்டும். இதில் சமரசமேயில்லை. நமது புராணங்கள்,நாட்டுக் கதைப் பாடல்களெல்லாம் இதைத் தானே கூறுகின்றன; கண்ணன் நரகாசுரனைக் கொன்றான்; முருகன் சூரபத்மனைக் கொன்றான். நீதிக்கும் அநீதிக்குமிடையே சமரசமேது?

பயிர் வளர வேண்டுமானால் நச்சுப்புல் அழகாக இருந்தால் கூட, அவை அல்லியும் தாமரையுமாக இருந்தால் கூட அவற்றைப் பிடுங்கி எறிந்து விட வேண்டும். விவசாயி இவ்வுண்மையை அறிவான்.

பழமரத் தோட்டத்தைப் பாதுகாக்கும் உழவன் தனக்கு துணையாக உழைக்கும் உழவர்களிடம் களை வெட்டச் சொல்லுகிறான்.

ஆத்துக்குள்ளே ஏலே லோ
அத்திமரம் அகில கிலா
அத்திமரம்

அளவு பாத்து ஐலப்பிடி
அறுக்கித் தள்ளு அகிலகிலா
அறுக்கித்தள்ளு

குளத்துக் குள்ளே ஏலேலோ
கொய்யாமரம் அகிலகிலா
கொத்தித் தள்ளு

சேத்துக் குள்ளே ஏலேலோ
செம்பகப்பூ அகிலகிலா
செம்பகப்பூ

செம்மையாக ஐலப்பிடி
சேத்தெடுக்க அகிலகிலா
சேத்தெடுக்க

நாத்துக்குள்ளே ஏலேலோ
நச்சுப் புல்லு அகிலகிலா
நச்சுப் புல்லு

நச்சுப் புல்லை ஐலப்பிடி
நறுக்கித் தள்ளு அகிலகிலா
நறுக்கித் தள்ளு

உதவியவர்: ஜானகி; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: முத்துகாபட்டி,சேலம்.
---------