நடுகை-2

விவசாய வேலைகளில் மிகவும் கடினமானது, நாற்று நடுவதுதான். இவ்வேலையைச் செய்வது,பள்ளர், பறையர் குலப் பெண்களே. வரப்பைச் சுற்றி ஆண்கள் நின்று கொண்டு நாற்றுக் கட்டுக்களைச் சுமந்து வயல் வெளியில் நிற்கும் பெண்களை நோக்கி வீசி எறிவர். பெண்கள் குனிந்த முதுகு நிமிராமல் விரைவாக நாற்று முடிகளை எடுத்து நடுவார்கள். தற்காலத்தில் நடுகை நடும் பெண்கள் மனதிற்குள்ளேயே ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொள்கிறார்கள். ஆனால் 30,40 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் பாடிக் கொண்டே நடுவார்கள்; வரப்பிலுட்கார்ந்து கொண்டு ஆண்களும் பாடுவார்கள். பாடல் இனிமையில் தங்களை மறந்து அதன் சந்தத்திற்கேற்ப கைகளும் விரல்களும் அசைய பெண்கள் நாற்று நடுவார்கள். இப் பாட்டுகளையும் காட்சிகளையும் ரசித்த தமிழ்க் கவிஞர்கள் முக்கூடற்பள்ளு முதலிய பிரபந்தங்களில் நடுகைக் காட்சிகளைச் சிறந்த சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர். தற்பொழுது நடுகைப் பாடல்கள் அபூர்வமாகவே பாடப்படுகின்றன. சுவைமிக்க இப்பாடல்கள் அனைத்தும் சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.
பள்ளன்: உள்ளார் உழவடிக்க
ஊர்க் குருவி நாத்தரிக்க
நார மரமடிக்க
நட்டு வாடி கட்டப் புள்ளே
நாலு மூலை சமுக்க வயல்
அதிலே நடும் குட்டப் புள்ளே
நான் போடும் நாத்துக்களை
நீ சேர்ந்து நட்டாலாகாதோ?
நாத்து நடும் கட்டப் புள்ளே
நட்டு வாடி கோயில் களம்
குத்துக் கல்லு மேலிருக்க-நீ
கூப்பிடடி நான் வருவேன்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி,நெல்லை மாவட்டம்.
---------------