பதினான்கு வருஷங்கள்

bookmark

அவளது காதலன் தண்டிக்கப்பட்டு சிறைக்குபோய் விட்டான். பதினான்கு வருஷம் தண்டனை. அவள் மணம் செய்துகொள்ளாமலே இருந்தாள். அவள் சோறு தண்ணிர் இல்லாமலே சுக்குப்போல் உலர்ந்து விட்டாள். அவன் கவலையில்லாமல் மதுரைச் சிறையில் வாழ்ந்து வருகிறான். அவனுக்கு எட்டுமாறு என்ன பாட்டுப் பாடுவது என்று அவள் யோசிக்கிறாள்.

சாமி எனக்காகுமா? 
சதுரகிரி பொட்டாகுமா? 
நெலாவும் பொழுதாகுமா? 
நெனச்ச சாமி எனக்காகுமா? 
ஆசை தீர அணைஞ்ச கையி 
அவரு மேல போடும் கையி 
பன்னீரளைஞ்ச கையி 
பதினாலுவருஷ மாச்சே! 
சுக்குப் போல நானுலர்ந்து 
சோறு கறி செல்லாம-மதுரையில 
கொக்குப் போல் அவரிருக்க-நானு 
சோலக் கிளி வாடுதனே! 
சாலையில சமுத்திரமே 
சாமி கையில் புஸ்தகமே 
என்னத் தொட்ட மன்னவர்க்கு 
என்ன கவி பாடட்டும்?

சேகரித்தவர்: S.M. கார்க்கி 
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
--------------