மலைநாட்டுத் திருப்பதிகள் - 13

1. திருவனந்தபுரம்
கோளார் பொறியைந்துங் குன்றியுட லம்பழுத்து
மாளாமு னெஞ்சே! வணங்குதியால் - கேளார்
சினந்தபுரஞ் சுட்டான் றிசைமுகத்தான் போற்றும்
அனந்தபுரஞ் சேர்ந்தா னடி. (59)
2. திருவண்பரிசாரம்
[பிரிவாற்றாது வருந்துந் தலைவியின் நிலை கண்ட செவிலி இரங்கல்]
அடியுங் குளிர்ந்தா ளறிவுங் குலைந்தாள்
முடிகின்றாண் மூச்சடங்கு முன்னே - கடிதோடிப்
பெண்பரிசா ரங்குப் பிறப்பித்து மீளுவார்
வண்பரிசா ரங்கிடந்த மாற்கு. (60)
3. திருக்காட்கரை
மார்க்கமுந் தாந்தாம் வழிபடுந் தெய்வமும்
ஏற்க வுரைப்பார்சொ லெண்ணாதே - தோற்குரம்பை
நாட்கரையா முன்னமே நன்னெஞ்சே! நாரணனாம்
காட்கரையாற் காளாகாய்! காண். (61)
4. திருமூழிக்களம்
காண்கின்ற வைம்பூதங் கட்கு மிருசுடர்க்கும்
சேண்கலந்த விந்திரற்குந் தேவர்க்கும் - மாண்கரிய
பாழிக் களத்தாற்கும் பங்கயத்து நான்முகற்கு
மூழிக் களத்தான் முதல். (62)
5. திருப்புலியூர்
[தலைவி தோழியர்க்கு அறத்தொடுநிற்றல்]
முதல்வண்ண மாமே முலைவண்ண முன்னே
விதிவண்ண நீங்கி விடுமே - சதுரத்
திருப்புலியூர் நின்றான் றிருத்தண் டுழாயின்
மருப்புலியூர் தென்றல் வரின் (63)
6. திருச்செங்குன்றூர்
வரவேண்டுங் கண்டாய் மதிகலங்கி விக்குள்
பொரவே யுயிர்மாயும் போழ்து - பரமேட்டி!
செங்குன்றூர் மாலே! சிறைப்பறவை மேற்கனகப்
பைங்குன் றூர் கார்போற் பறந்து. (64)
7. திருநாவாய்
பறந்து திரிதரினும் பாவியே னுள்ளம்
மறந்தும் பிறிதறிய மாட்டா - சிறந்த
திருநாவாய் வாழ்கின்ற தேவனையல் லாலென்
ஒருநாவாய் வாழ்த்தா துகந்து. (65)
8. திருவல்லவாழ்
உகந்தார்க்கெஞ் ஞான்று முளனா யுகவா
திகந்தார்ககெஞ் ஞான்று மிலனாய்த் - திகழ்ந்திட்
டருவல்ல வாழுருவ மல்லவென நின்றான்
திருவல்ல வாழுறையுந் தே. (66)
9. திருவண்வண்டூர்
தேவி முலகு முயிருந் திரிந்துநிற்கும்
யாவும் படைத்த விறைகண்டீர் - பூவில்
திருவண்வண் டூருறையுந் தேவாதி தேவன்
மருவண்வண் டூர்துளவ மால். (67)
10. திருவாட்டாறு
மாலைமுடி நீத்து மலர்ப்பொன் னடிநோவப்
பாலைவன நீபுகுந்தாய் பண்டென்று - சாலவநான்
கேட்டாற் றுயிலேன்காண் கேசவனே! பாம்பணைமேல்
வாட்டாற்றுக் கண்டுயில்கொள் வாய். (68)
11. திருவிற்றுவக்கோடு
வாய்த்த கருமமினி மற்றில்லை நெஞ்சமே!
தோய்த்த தயிர்வெண்ணெய் தொட்டுண்ட - கூத்தன்
திருவிற் றுவக்கோடு சேர்ந்தாற் பிறவிக்
கருவிற் றுவக்கோடுங் காண். (69)
12. திருக்கடித்தானம்
காண விரும்பமெண்கண் கையுந் தொழவிரும்பும்
பூண விரும்புமென்றன் புன்றலைதான் - வாணன்
திருக்கடித்தா னத்தான் றிகிரியான் றண்டான்
திருக்கடித்தா னத்தானைச் சென்று. (70)
13. திருவாறன்விளை
சென்று புனன்மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
வென்றுபுல னைந்தடக்கி விட்டாலும் - இன்றமிழால்
மாறன் விளைத்த மறையோதார்க் கில்லையே
ஆறன் விளைத்திருமா லன்பு. (71)
மலைநாட்டுத் திருப்பதிகள் முற்றும்.