பாம்பு ரெண்டு சீறுது

அண்ணன்மார்கள் வீட்டுக்குப் போகிறாள் தங்கை. ஆனால் அவளுடைய அம்மாவும் அப்பாவும் உயிரோடு இல்லை. அண்ணிமார்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் நாத்தியை அண்ட விடவில்லை. எங்கே தங்களின் உரிமைகளுக்கு இடைஞ்சலாக இருப்பாளோ என்று அவளைக் கொடுமைப் படுத்துகிறார்கள். தன் பிறந்த வீட்டையும், தாய் தந்தையரையும், தாகத்திற்கு உதவும் நல்ல தண்ணீராகவும், அத்தகைய நல்லவர்கள் இருந்த இடத்தில் இப்பொழுது இருக்கும் அண்ணன்மார்களின் மனைவியர் அட்டை, பாசி முதலியனவாகவும்,அவர்களது குணங்கள் ஆமை, பாம்பைப்போல் சீறும் தன்மையுடையனவாகவும் இருப்பதை ஜாடையாக வருணித்து அழுது புலம்புகிறாள்.
அஞ்சி கிணற்று தண்ணி
அருங்குளத்து நல்ல தண்ணீ
அள்ளிக் குடிக்க போனா
அட்டை மிதக்குது
ஆமை ரெண்டு சீறுது
பத்து கிணற்று தண்ணீ
பாங்கிணற்று நல்ல தண்ணீ
பார்த்துக் குடிக்கப் போனா
பாசை மிதக்குது பாம்பு ரெண்டு சீறுது
வட்டார வழக்கு: அஞ்சி-ஐந்து ; பாசை-பாசி.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்:அரூர், தருமபுரி மாவட்டம்.
------------