பாஷை வேறுபடுமாறு

bookmark

பேச்சு வழக்குள்ள பாஷைகளெல்லாம் எப்பொழுதும் பலவகையிலும் வேறுபட்டுக் கொண்டே யிருக்கின்றன. வேறுபடுதலின்றி யொரு நிலைப்பாடு அடைந்துள பாஷைகளுக்கு அழிவு வெகுதூரத்தில் இல்லை. ஆகவே பேச்சு வழக்குள்ள பாஷைகள் அழியாது நீடித்தகாலம் இயங்க வேண்டுமாயின், அவற்றிற்கு வேறுபாடு இன்றியமையாதது. தமிழும் பேச்சு வழக்குள்ளதோர் சிறப்புடைப் பாஷையாமாதலின் இஃதும் வேறுபட்டியங்குவது நியாயமே. அவ்வாறே யாரென்ன தடுத்தபோதிலும் தமிழ்ப் பேராறு தனக்கெதிருள்ள தடைகளனைத்தையும் உந்தியெறிந்து சுழிகொண்டு விளையாடிச் செல்லா நின்றது.

உயிர் நூலோர் 'இயற்கைப் பிரிநிலை' யென்று கூறும் சுபாவ நியமம், பாஷை வளர்ச்சியிலுங் கொள்ளப்படும். பாஷைவளர்ச்சிக்குத் தடைபயப்பனவும் பயனற்றனவு மாகியவைகளனைத்தும் பயிற்சிக் குறைவான் வழக்காறற்றுப்போக, மற்று அதன் வளர்ச்சிக்குத்தடை பயவாதனவும் பயனுள்ளுனவுமாகிய யாவையும் பயிற்சி மிகுதியான் வழக்காற்றில் நிலைபெறுகின்றன. இது பாஷை நூலிற் கொள்ளப்படும் 'இயற்கைப் பிரிநிலை'.

இனிப் பொச்சாப்புக் காரணமாகவும் சோம்பல் காரணமாகவும் மக்கள் சொற்களைத் தக்கபடி யுச்சரிக்காமையால் அவை தம்முடைய முன்னை யுருவங் குலைந்து சிதைகினறன. மிகவும் நீளமான சொற்களை மக்கள், காலச் சுருக்கமும் முயற்சிச் சுருக்கமும் கருதிக் குறுக்கியும் மாற்றியும் வழங்குதலால், அவை தம் முன் னுருவத்தினின்றும் வேறுபடுவன வாகின்றன. இவ்வாறு தொன்றுதொட்டு வருதலின்றி, அவ்வக் காலங்களில் இடையிலே சிலவெழுத்துக் கெட்டும் சில வெழுத்துத் திரிந்தும் சில வெழுத்துத் தோன்றியும் இலக்கணத்திற் சிதைந்து முன்னுருவம் மாறித் தாமே மருவி வழங்குவனவற்றை யெல்லாம் 'மரூஉ' என்பர் இலக்கண நூலார். 'அருமந்தபிள்ளை', 'ஆச்சு', 'இருக்குது' என்பன முதலாயின இதற்கு உதாரணமாம். 'கற்று' 'சுற்று' 'நேற்று' என்பன போன்ற றகர வொற்றிடையிலுள்ள சொற்கள், தகர வொற்றிடையிலுள்ள சொற்களாக உச்சரிக்கப்படுகின்றன; 'வைத்து' 'தைத்து' 'பாய்த்து' என்பன போன்ற சொற்களின் தகரங்கள் சகரங்களாகின்றன. இனிச் சாமானியத் தமிழ் மக்களிடை வழங்கும் மரூஉ மொழிகளி னியல்புகளை முற்ற வெடுத்துக் காட்டுதலரிதாம். எனினும் தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலைமாறுதலென்னும் ஐந்துவகைகளாக மரூஉவைப் பிரித்துத் தக்க வுதாரணங்கள் கண்டு கொள்க. 'யாவது', 'மாசி' 'ஆனை' 'பேர்' 'விசிறி' என்பன முறையே அம்மரூஉவமைகட்கு உதாரணங்களாமாறு அறிக.

"அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்"
"ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
ஞஃகா னுறழு மென்பரு முளரே"
என்ற நன்னூலார் கூறிய மொழிமுதற் போலியும் மொழியிடைப் போலியும் வகுத்துரைக்குஞ் சூத்திரவிதிகள் யாம் மேற்கூறிய முயற்சிச் சுருக்கவியல் பினையன்றே வலியுறுத்திக் காட்டுகின்றன. 'ஐந்து' 'உய்ந்தனன்' என்ற சொற்களை யுச்சரித்தலிற் சிறிதளவு கஷ்ட மிருத்தலாற் சுகபுருஷராகிய தமிழ் மக்கள் அவற்றை 'அஞ்சு' 'உஞ்சனன்' என்று வழங்குவாராயினர்.

தெளிவு கருதியும் உச்சரிப்பு நலங்கருதியும், தமிழ்மக்கள் சில சொற்களை மாற்றி வழங்குகின்றனர். உதாரணமாகப் 'பெண்' என்ற சொல்லைப் 'பெண்டு' என்றும் 'நிலம்' 'கலம்' என்பவற்றை 'நிலன்' 'கலன்' என்றும் முறையே எழுத்துக் கூட்டியும் ஓரெழுத்தைப் பிறிதோ ரெழுத்தாக மாற்றியும் உபயோகிக்கின்றனர். குறிவினை மொழியிறுதியில் மகரம் தெளிவாகச் செவிப் புலனுறாமையின் இவ்வேறுபாடு வேண்டப் படுவதாயிற்று. இதைத்தான் மொழியிறுதிப் போலியென நன்னூலார்,

"மகர விறுதி யஃறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே"
என்ற சூத்திர விதியின்கட் கூறுவா ராயினார். சில குற்றுகரவீற்று அஃறிணை மொழிகளுந் தெளிவு கருதி, இறுதி யுகரங்கெடுத்து 'அர்' ஏற்றி யுச்சரிக்கப் படுகின்றன. 'வண்டர்' 'சுரும்பர்' என்ற மென்றொடர்க் குற்றுகர மொழியினும், 'சிறகர்' என்ற வுயிர்த்தொடர்க் குற்றுகர மொழியிலும், 'இடக்கர்' என்ற வன்றொடர்க் குற்றுகர மொழியினும் இவ்வுண்மை காண்க. 'பூ' வைப்'பூவர்' என்றாரு முளர்.

ஒன்றைப் பிறிதொன்று போலு மெனப் பிழைபடக் கருதலானும், இஃது இவ்வாறிருந்தால் அழகுடைத்தாமெனக் கருதலானும், தமிழ்மக்கள் சொற்களை மாற்றி வழங்குவர். இலக்கணமில்லையாயினும், இலக்கண முடையதுபோல் அப்படிப்பட்ட சான்றோராலே தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வருகின்ற 'இலக்கணப் போலியும் இக்கருத்துகள் பற்றியே யுண்டாயிற்றுப் போலும். 'இல் முன்' என்பதை 'முன்றில்' என்பதும், 'மரநுனி' என்பதை 'நுனிமரம்' என்பதும் இவற்றிற்கு முறையே உதாரணமாம். 'முற்றம்' என்ற சொல்லொடு போலி யொப்புமை கொண்டு 'இல்முன்' 'முன்றில்' எனத் திரிக்கப்பட்டது. 'நுனிமரம்' என்று கூறுதற்கண் உச்சாரண சுகமுண்மை காண்க.

தமிழ்மக்களது நாகரிகநிலை முதிர்ச்சிக்கேற்றபடி, தமிழ்ப்பாஷையும் முதிர்ச்சி யடைதல்வேண்டும். நன் மக்களிடத்தே சொல்லத்தகாத சொல்லை, அவ்வாய்பாடு மறைத்துப் பிறவாய்ப்பாட்டாற் சொல்லும் 'இடக்கரடக்கல் வழக்கு'ம், மங்கலமில்லாததை யொழித்து மங்கலமாகக்கூறும் 'மங்கலவழக்கு'ம்' நாகரிக நிலை முதிர்ச்சியா னேற்பட்டனவாம். 'ஆப்பி' என்றசொல் நாகரிக நிலை நன்கு முதிராத காலத்திலெழுந்து பின்னர் நன்மக்களா னிறுதி குறக்கப் பட்டது.

இராஜ்யங்களின் மாறுபாட்டாற் பாஷைகளும் வேறு படுதலுண்டு. உதாரணமாகத் தமிழ்மொழியின் கண்ணே மகம்மதிய அரசு ஓங்கியதனால் எத்துணையோ 'இந்துஸ்தானி பாஷைச்சொற்கள் இடம் பெறுவனவாயின. உதாரணமாகச் 'சலாம், சபாசு' என்ற சொற்கள் தமிழிலக்கியங்களிலு மேறி விட்டன.

"சுராதிபமா திமாலய னுலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமாளே"
என்று அருணகிரி நாதர் தமது 'திருப்புகழ்' நூலின்கட் கூறியதும்

"குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு
குமரனை முத்துக் குமாரனைப் போற்றுதும்"
என்று குமரகுருபர சுவாமிகள் தமது 'மீனாக்ஷியம்மை பிள்ளைத் தமிழ்' நூலின்கட் கூறியதுங் காண்க.

"கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென
சுட்ட வெங்கொடு சூர்கிளை வோற விடும்வேலா."
என்றார் அருணகிரிநாதரும். இன்னும் இதனைக் குறித்துப் பிறிதோரமயத்திற் பேசுதற் கிடலுண்டாதலின் இதைவிடுத்து மேற்செல்வா்ம்.

நெட்டுயிருங் குற்றுயிரும் வெவ்வேறு விதிகள் பற்றி வேறுபடுகின்றன. 'சந்தியக்கரங்க'ளாகிய ஐகார ஔகாரங்கள் விசேஷமாக நிலைபேறுடையனவல்ல. ஆதலா னன்றே அவைகளிரண்டும் தம்மாத்திரையிற் குறுகி யொலிப் பனவாயின. ஐகார ஔகாரக் குறுக்கங்கள் தமிழிலக்கணங்களிற் பெரிதும் விரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. ஆண்டுக் கண்டுகொள்க. தனிக் குற்றெழுத்திற்குப் பின்னேயடுத்து வரும் நேரசைகளெல்லாம் தம்மளவிற் சிறிது குறுகி, நிரையசையாகின்றன. குற்றெழுத்துகள் வீழ்ந்துபடி மியல்பின; எனினும் அவை நெட்டெழுத்துக்களினும் மிக்க நிலைபேறுடையன. இரண்டு மாத்திரை யளவுகாலம் வரையில் நாவை ஒருநிலைக் கண்ணே நிறுத்தி வைத்தல் மிகவும் அரியதோர் செயலாதலின் நெட்டுயிர்கள் அத்துணை நிலை பேறுடையன வல்லவாயின.

இனித் தமிழ்மக்கள் வேற்றுமக்களொடு வாணிக நிமித்தமாக ஊடாடுங் காலத்தும் அவர்கள் இவர்களொடு வந்து கலக்குங் காலத்தும் புறத்தடைகள் எவையு மில்லாமையாற் பிற பாஷைகளினொலிகள் தமிழின்கட் புகுவனவாயின. இத்தகைய கலப்பினால் தமிழ்ப்பாஷையின் கண்ணே ரகர, றகர வேறுபாடு காண்டலும் ழகர, ளகர வேறுபாடு காண்டலும் அரியவாயின. ஆரியர் கலப்பினால் ரகர றகரங்கள் எல்லாம் ஒரே ரகரமாகவும், ழகர ளகரங்களெல்லாம் ஒரே ளகாரமாகவும் உச்சரிக்கப்படுவனவாயின. தமிழ்ப்பண்டிதராயினார் இவ்வுச்சாரண விஷயமாக மாணாக்கர்களை எவ்வளவு திருத்தியும் அவர்கள் திருந்துதல் அரிதாயிருக்கின்றது. ழகர ளகர வேறு பாட்டை அறவே யொழிக்கக் கருதி வீரசோழியமுடையார் ஈரெழுத்துக்களையும் ஒன்றுபோல் வைத்துக் காரிகை செய்தனர்.. அவர் விதியின்படி 'புகழ்+தீபம்=புகடீபம் எனவும் 'பாழ்+நரகு=பாணரகு எனவும் வரும்.

"திகட சக்கரச் செம்முக மைந்துளான்"
என்று காப்பிலுரைத்தார் கந்தபுராணம் செய்த கச்சியப்ப சிவாசாரியரும்.

வளர்மொழிகளெல்லாம் தனித்தனி நால்வேறு நிலைகளுடையனவாம். அவைதாம் 'தனிநிலை' 'தொடர்நிலை' 'உருபு நிலை' 'பிரிவுநிலை' யென்பனவாம். தனிநிலைப் பாஷைகளெல்லாம் சில நூற்றாண்டுகளில் தொடர்நிலைப் பாஷைகளாக மாறிவிடும்.தொடர்நிலையன உருபுநிலை யுற்றன. இறுதியிற் பிரிவுநிலை யனவாய் விளங்கும். தமிழ்மொழியோ தனிநிலை கடந்து தொடர்நிலையில் இருக்கின்றதென்று பலருங் கூறுவர். ஆனால்தமிழ் மகள் தொடர்நிலையில் ஒருதாளையூன்றியும் மற்றைத்தாளை உருபு நிலையில் வைக்குமாறு எடுத்தும் நிற்கின்றனள் என்று கூறுதலே யேற்புடைத்தாம்.

பாஷை வேறுபடுமாற்றில் யாவரும் கருதத்தக்கதோ ருண்மையுண்டு. அஃதாவது பாஷைகளெல்லாம் சில சமயங்களில் மிகவும் விரைந்து வேறுபட்டும்,வேறு சிலசமயங்களில் மிகவுந் தாமதமாக வேறுபட்டுஞ் செல்லும் இயல்புடையன. இவ்வுண்மைக் கிணங்கியே தமிழ்ப்பாஷையும் பரந்த கொள்கைகள் மேவி விரிந்து வேறுபடுகின்றது.சிலகாலம் மிக விரைந்தும் சிலகாலம் வேறுபாடுதோன்றாமல் அமைந்தும் சிலகாலம் மந்தமாக மெல்லென நின்று நின்றும் வேறுபட்டுச் செல்லாநின்ற தமிழ்மகளின் செலவு ஒரு பேராற்றின் இனியவொழுக்கம் போலும்.எப்பொழுதும் ஏட்டு வழக்குத் தமிழும்,பேச்சு வழக்குத் தமிழும் வேறுபட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. ஆதியில் இவ்விரண்டும் அதிக வேறுபாடின்றி ஒத்தன வெனினும் ஏட்டுவழக்குத் தமிழ் வேறுபாடுறுவதுமிகமந்தமான நடையிலேதான்.மற்றுப் பேச்சுவழக்குத் தமிழ் வேறுபடுவதே மிகவிரைவான நடையிலேயாம். எனவே ஏட்டுவழக்குத் தமிழ்க்கும் பேச்சுவழக்குத் தமிழ்க்கும் இக்காலத்திலுள்ள பேதம் மிகவதிகமாம். இதுவும் அதுவும் வெகுதூரத்தில் நிற்கின்றன. இவ்விரண்டும் தமக்குள்ளே அதிகமாக வேறுபட்டு வெகுதூரத்தில் நிற்கவொட்டாது முயல வேண்டுவது இலக்கண நூலார்க்கு உற்றதொழிலாம். இனி இத்தகைய வேறுபாடுகளினால் உண்டாகும் பயன்கள் யாவை என்ற விஷயத்தைக் குறித்து ஆராய்வாம்.

சொற்களும் சொற்றொடர்களும் வாக்கியங்களும் சொல்லின் பாகங்களும் தத்தமக்குரிய பொருட்பெற்றி விரிந்துங் குறைந்தும் முற்றிலும் வேறுபட்டும் போகின்றன. பொதுவாகப் பலபொருள்களைக் குறித்துநின்ற சொற்கள் சிறப்பாகச் சிலவற்றையேனும் ஒன்றையேனுங் குறிக்கும் நிலைமையை யடைகின்றன. இதனைப் 'பொதுப்படை நியமம்' என்னலாம். உதாரணமாக, 'நெய்' என்ற சொல்லைக் காண்க. இஃது ஆதியிற் பசுவின்நெய், வேப்பநெய், எள்ளின் நெய் ஆமணக்கு நெய், இலுப்பைநெநய் முதலிய பலவற்றிற்கும் பொதுவான சொல். அஃது இப்பொழுது பசுவினெய் எருமைநெய்களையே சிறப்பாகக் குறிக்கின்றது. மற்றுச்சிறப்பாக ஒவ்வொரு பொருளையே குறித்துநின்ற சொற்கள் பொதுவாகிப் பல பொருள்களையும் குறிக்கும். நிலைமையை யடைதலுமுண்டு. இதனைச் சிறப்புடை நியமம் என்னலாம். ஆதியில் எள்ளினின்று போந்த நெய் என்ற ஒரே பொருளைக் குறித்த எண்ணெய் என்ற சொல் இப்போது பொதுவாகி, 'வேப்பெண்ணெய்,' 'விளக்கெண்ணெய்,' 'இலுப்பெண்ணெய் என்பனவாதிய பலபொருள்களையுங் குறிக்கின்றது. 'ஓலை,' 'மரக்கால்' என்னுஞ் சொற்கள் தம்பொருட்பெற்றி முற்றிலும் வேறுபட்டனவாமாறு காண்க.

தமிழ்மகளிர் பனையோலைச் சுருளும் தென்னோலைச் சுருளும் தங் காதணியாகக் கொண்டமை பற்றி அக்காதணியும் 'ஓலை' யென்னப்பட்டது. இப்போது பொன்னாலும் மணியாலுமியன்ற காதணிகளும் அந்த ' ஓலைச்' சொல்லாலேயே குறிக்கப்படுதரலுணர்க. ஆதியில் மரத்தினாற் செய்யப்பட்ட உழக்கிற்கு 'மரக்கால்' என்று பெயர். இப்பொழுது இரும்பினாலாகிய குறுணியளவு கருவியையே குறித்தலுமுணர்க. சில சொற்கள் ஆதியில் இழிபொரு ளுணர்த்தி இப்போது அவற்றை இழந்து உயர்பொரு ளுணவர்த்துவனவாம். 'களிப்பு' என்றசொல் முதலிற் கள்ளுண்டு களித்தலையே யுணர்த்திற்று; இப்பொழுது 'மகிழ்ச்சி' என்ற உயர் பொருள் பெற்றது. விளையாட்டு என்ற சொல் ஆதியிற் கள்ளுண்டு ஆடுதலைக் குறித்தது. இப்பொழுது அது கள்ளுண்ணாமல் ஆடுகின்ற பலவகை விநோதமான ஆட்டங்களையுங் குறிக்கின்றது. இவ்வாறு வரும் நியமத்திற்கு 'உயர் பொருட்பேறு' என்னும் பெயரிடலாம். இனி இதுபோலவே இழிபொருட்பேறு முண்டு. அஃதாவது சொற்கள் முதலில் உயர்பொருள் உணர்த்திப் பின்னர் இழிபொருள் தருமென்பது. உதாரணமாக நாற்றம் என்ற சொல்லைக்காண்க.

"ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி
யாகு பெயரன் மொழிவினைக் குறிப்பே
முதறொகைக் குறிப்போ டின்ன பிறவுங்
குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை"
என்ற 'நன்னூற்' சூத்திரவிதியிற் கூறப்பட்டுள்ள குறிப்புச் சொற்களெல்லாம்
பொருட்பெற்றி வேறுபடுமாறு காட்டுகின்றன.

இனிமக்களாவார் உணர்ந்துகொண்டே சிலவேறுபாடுகள் செய்தலுண்டு. ஒவ்வொரு கூட்டத்தார் யாதேனும் ஒரு பொருளை மறைத்துக் கூறவேண்டி, அதனது சொற்குறியை யொழித்து வேறொரு சொற்குறியால் அதனைக் கூறும் 'குழூஉக்குறி' என்பதும் 'பிறிதினவிற்சி,' 'புனைவிலி புகழ்ச்சி' முதலிய அணி வகைகளும் அறிந்து செய்வேறுபாட்டின்பாற் படுமென்க.

இவ்வாறு நிகழ்கின்ற வேறுபாடுகள் நிகழவும் வேண்டும்; அவ்வேறுபாடுகள் அளவிறந்தனவாகாமல் அடக்கவும் வேண்டும். ஆதலாற் பாஷையின் வேறுபாடுகளை யடக்குதற் பயன் கருதியே இலக்கணங்க ளேற்பட்டன. இவ்விலக்கணங்கள் தாமும் பாஷையின் இயக்கத்திற்குத் தக்கபடி இயங்காதிருத்தல் பாஷைக்கே கேடுவிளைக்கும். இவ் வுண்மையைத் தமிழ் நூலார் சிலகாலங்களில் நன்குணர்ந்து நடந்துவந்தனர். பேச்சுத் தமிழ்ச் சொற்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் தமிழிலக்கிய நூல்களிலேறின. அவ்வாறு இலக்கியங்கண்ட சொற்களுக்கு இலக்கணமும் நாளேற நாளேற இயம்பப்படுவன வாயின. இலக்கியங்கண்ட சொற்களெல்லாம் நிகண்டுகளிலும் புகுந்தன.

நிகண்டு வகுத்த புலவர்களில் சிலர் சொற்பொருளாராய்ச்சிக் குறைவாற்பிழைபோன விடங்களுமுண்டு. உதாரணமாகச் 'சூடாமணிநிகண்டு' என்ற நூலிற் காணப்படும் பல பிழைகளுள் ஒன்று காட்டுவாம். 'சரகம்' என்ற சொல்லுக்குத் 'தேனீ' என்ற பொரு ளில்லையாகவும், இந்நூலின்கட்

"சரகஞ்சா கிளிவெள்ளாடு தேக்கெனுந் தருவு தேனீ"
என்று கூறப்பட்டுள்ளது. இதற்குற்ற காரணமென்னை? 'சரகம்' என்ற சொல்லுக்கே அப்பொருளுண்டு; ஆகவே 'சரகம்' என்றதிலுள்ள ரகாரத்தைச் சகர ஆகாரத்தின் அறிகுறியாகிய காலென வரிவடிவிற்கண்டு மருண்ட மருட்சியே அப்பிழைக்குற்ற காரணமாமாறு தேற்றம்.

இவ்வாறு ஆராய்ச்சிக் குறைவால் நிகழ்ந்த மேற்கூறிய வழு பிற்றை நாளிலக்கியங்களிலும் இடம் பெற்று விட்டது. இலக்கண விலக்கியத் தெழுவரம் பிசைத்த சிவஞான முனிவரது மாணாக்கருட் சிறந்தவரும் 'தணிகைப் புராணம்' முதலிய பல அரிய நூல்களின் ஆசிரியருமாகிய கச்சியப்ப முனிவர் தமது 'வண்டுவிடுதூது' என்ற நூலின்கண் "ஏக்குலங்க, டாங்கியுகையாத சாகமே" என்று வண்டை விளிக்கின்றனர்.

ஆகவே நிகண்டேறி இலக்கியங்களிலும் பயின்று வருஞ் சொற்கள் தவறுடையன வென்பது, பின்னர் நிகழும் ஆராய்ச்சிகளிற் புலப்பட்டாலும் அவற்றைத் திருத்தப்புகுதல் ஒருநாளும் ஓராற்றானுஞ் சாலாது. பிழை பிழையாகவோதான் இருத்தல் வேண்டும். மாற்றுதல் பாஷையின் வரலாற்றிற்குத் தீங்கு பயக்கும். இப்படிப் பிழைபோன விடங்கள் ஆங்கிலம் முதலிய பிறபாஷைகளில் எத்தனையோ உள.

இலக்கியமும் இலக்கணமும் ஒன்றனை ஒன்றுவிடாமற் பற்றி நிற்கின்றன. இவற்றின் வளர்ச்சிக்கும் இவை தம்முள்ளே காரணங்க ளாகின்றன. ஆதி காலத்திலேயே இவ்வருமைசான்ற உண்மையை நன்குணர்ந்த ஆசிரியர் அகத்தியனார்,

"இலக்கிய மின்றி யிலக்கண மின்றே
யிலக்கண மின்றி யிலக்கிய மின்றே;
எள்ளினின் றெண்ணெ யெடுப்பது போல
விலக்கி யத்தினின் றெடுபடு மிலக்கணம்"
என்று சூத்திரஞ் செய்ததனை அறிவுடையோர் உய்த்து நோக்குக.

பாஷை வேறுபடுமாறு முற்றிற்று