பாஷையின் சிறப்பியல்பு

bookmark

இவ்வுலகின்கணுள்ள பாஷைகளுள் எவையேனும் இரண்டு பாஷைகளாயினும் தம்முள் முற்றும் ஒத்திருப்பதில்லை. வழிமொழிகளும் நாய் மொழியினின்று வேறுபடுகின்றன். சொல்லமைப்பும் கருத்தின் பரப்பும் இல்கணவமைதியும் பாஷை தோறும் வேறுபடுகின்றன. பல பாஷைகளிற் பயின்று அவற்றின்கண் ஒருமைப்பாடு காணப் புகுவார்க்குப் பாஷைகளின் சிற்பியல்புகள் பெரும்பாலுந் தோன்றுவதில்லை; அகஸ்மாத்தாய் ஏற்பட்ட இரண்டோ ரொற்றுமைப் பண்புகள் அவர்களுடைய கண்களை மறைக்கின்றன. அதுபற்றி அவர்கள் மயங்குகின்றனர்.

தமிழும் மலையாளமும் தாய் மொழியும் வழிமொழியுமா யொற்றுமைப் பட்டனவே யாயினும், 'செய்யும்' என்னும் வினைமுற்றைத் தமிழ்ப் படர்க்கையிற் பலர்பாலொழிந்த மற்றை நான்கு பாலினும் வழங்குவதாக, மலையாளமோ அதனை இருதிணை யைம்பான் மூவிடத்திலும் வழங்கா நின்றது.இஃதுணர்ந்த வீரமாமுனிவர் தமிழின்கண் மலையாள வழக்கத்தைக் கொணர்ந்து புகுத்துவார் தமது 'தேம்பாவணி' யென்ற நூலின்கண் மேற்கொண்டு செய்யுட் செய்துளர். இன்னும் மலையாளம் திணைபாலுணர்த்தும் வினைவிகுதிகளை யொழித்து விட்டதாகத் தமிழ் அவையனைத்தையும் ஒழித்து விடாது போற்றிக் கொண்டுளது.

இவ்வாறு மிகநெருங்கிய மொழிகளே வேறுபடும்போது மற்றையவற்றின் வேறுபாட்டினைக் குறித்து எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. பிறப்பு முறையானும் வரலாற்று முறையானும் ஏற்பட்டமொழிப் பாகுபாடுகளில் நிகழக்கூடிய பிழைகளைப் போக்குவதற்குப் பாஷைகளின் அமைப்புமுறை யொருபெருங்கருவி யாகுமாறு அறிக.

இனித் தமிழின் செடுங்கணக்கு மிகவும் விநோதமானது; பன்னீருயிரும் பதினெண் மெய்யும் ஓராய்தமுமாக முப்பத்தோ ரெழுத்துகளுடையது. இவையே தமிழின் முதலெழுத்துக்களாம்; இவற்றுள்: 'ற, ழ, ன' என்ற மூன்றெழுத்துக்களும் தமிழ்ப் பாஷையின் சிறப்பெழுத்துக்களாம். தமிழின் வழிமொழிகளல்லாத பிறபாஷைகளின் கண்ணே இவ்வெழுத் தொலிகளில்லை.

உயிர்மெய்யெழுத்துக்கள், பன்னீருயிரும் பதினெண்மெய்யும் உறழப் பிறக்கும் இருநூற்றுப் பதினா றெழுத்துக்களுமாம். ஆங்கிலம் முதலிய பிறபாஷைகளிற் போலாது தமிழில் உயிரெழுத்துக்களின் வைப்பு முறையும்,மெய்யெழுத்துக்களின் வைப்பு முறையும் ஆகிய இவ்விரண்டும் மிக நேர்த்தியான ஒழுங்குடையனவாய், ஓசை நூன்முறை அணுகளவும் பிறழாமல் ஏற்பட்டிருக்கின்ற தன்மை யாவரும் வியக்கத்தக்கதே. தமிழ்மொழியிற் கூட்டெழுத்துக்களே யில்லை. கூட்டொலி யுண்டெனினும் வரிவடிவின் அவை தனித்தனி யெழுத்துக்களா லெழுதப்படுவனவாம். தமிழில் எல்லா வெழுத்துக்களும் மொழிக்கு முதலிலே வாரா; பற்பலவரும். எல்லாவெழுத்துக்களும் மொழிக்கிறுதியிலும் வாரா; பற்பல வரும். இனி மொழிக் கிடையிலே எல்லா வெழுத்துக்களும் ஒன்றி யுடனியங்கா. பற்பல தம்மு ளொத்தியங்குவனவாகும். நன்னூலார் இவை யனைத்தையுந் தெளிவுபெற எழுத்தியலில் கூறியிருத்தல் காண்க.

தமிழெழுத்துக்கள் முப்பத்தொன்றே யாகத், தமிழொலிகள் அவற்றினும் மிகுகின்றன. மெல்லெழுத்துக்களுக்குப் பின்னே யடுத்து வருகின்ற வல்லெழுத்துக்க ளெல்லாம் தம் வல்லோசை யிழந்து தாமும் மெல்லோசை யுடையனவாகின்றன. உதாரணமாக, 'அங்கு', 'பஞ்சு', 'வண்டு', 'வந்தாள்', 'பம்பி', 'அன்று' என்ற சொற்களை யுச்சரித்துக் காண்க. மெல்லெழுத்துக்களை மகளிராகவும் வல்லெழுத்துக்களை ஆடவராகவுங்கொண்டு, இல்லற வாழ்க்கையுற்ற ஆடவர் இளகிய சிந்தையராதல் போல, மெல்லெழுத்துக்களை யடுத்துவரும் வல்லெழுத்துக்களும் இளகி மென்மைத்தன்மை மேவினவென்று உவமை கூறுதலு மேற்புடைத்தாம். எனவே வல்லெழுத்தாலும் தம்மோசை யாறும் பிறவோசை யாறுமுடையனவாம். 'உகுதல்', 'பசித்தான்', 'படர்ந்தது', 'பதிவு', 'செய்பவன்' என்ற சொற்களில் முறையே க, ச, ட, த, பக்கள் தம் மோதையின் வேறுபட்டுப்போயின. இவ்வைந்து சொற்களில் மூன்றாவதிலும் நான்காவதிலுமுள்ள ட, த வோசைகள் முற்கூறிய மெல்லோசைகளேயாக, எஞ்சிய மூன்று சொற்களிலுமுள்ள க, ச, ப வோசைகள் வேறு புத்தொலிகளாமாறு உச்சரித்தறிக. எனவே முன்னர்க் கூறிய ஆறு ஓசைகளோடு இந்த மூன்று புதிய வோசைகளையுங் கூட்டவெழும் ஒன்ப தோசைகளும் தமிழெழுத்துக்களின் மிக்க தமிழோசைகள். ஒவ்வோரெலிக்கும் ஒவ்வோ ரெழுத்திருத்தலே நியமம். அவ்வாறன்றி ஓரெழுத்தால் இரண்டு மூன் றொலிகளைக் குறித்தல் நேரிதன்று. அது பாஷையின் குறைவே. தமிழின்கண் நாற்பதொலிகளிருப்பவும், அவற்றை வரிவடிவிற் குறித்தற்கு முப்பதோ ரெழுத்துக்களேயுள. முப்பத்தோ ரெழுத்துக்களுக்கும் முப்பதேதோரொலிகள் போக மிகுதியான ஒன்பதொலிகளுக்கும் ஒன்பது தனிவே றெழுத்துக்களின்மை தமிழ்ப் பாஷைக்குக்; குறைவாமாறு காண்க. ஆதியில் தமிழ் மொழியில் முப்பானோ ரொலிகளேயிருந்தன. வரவர நாளாவட்டத்தில் மக்களது உச்சாரண பேதத்தில் ஒன்பானொலிகள் மிகுவனவாயினவென்று அமைவு கூறித் தமக்குள்ளே மகிழ்வாரு முளர் அன்னார்மகிழ்ச்சியும், உற்று நோக்குமிடத்து, ஓராற்றா னேற்புடைத்தேயாம்.

இனித் தமிழ் நெடுங்கணக்கின்கண் இன்னொரு விசேஷ முளது. அது குற்றுகர முற்றுகரப் பாகுபாடாம். குற்றுகரமாவது குறுகிய ஓசையுடை யது; அரை மாத்திரை யளவிற்று. முற்றுகரமோ குறுகாது. ஒருமாத்திரையுடையதாவது. நன்னூலார் குற்றுகரத்திற்குக் கூறிய விதியும், குற்றுகரப் புணர்ச்சிக்குக் கூறியவிதிகளும் மிகச் சிறப்புடையனவாம்.தனித் தமிழ்ச் சொற்களுள் உகரவீற்றன வெல்லாம், இக்காலத்திலுள்ள தமிழ்மக்களாற் குற்றுகரவீற்றுச் சொற்களாகவே யுச்சரிக்கப்பட்டு வருகின்றன. முற்றுகரமென்றதோர் பாகுபாடு அத்துணை வேண்டுவதன்று. தமிழர்கள் முற்று கரத்தையுங் குற்றுகரமாகவே யுச்சரிக்கின்றனர். தமிழ்மக்கள் தமிழ்ச்சொற்களாகிய 'கதவு', 'பசு', முதலிய முற்றுகரமொழிகளை உச்சரிக்கு மாற்றையும், வடசொற்களாகிய 'இந்து', 'சம்பு' முதலிய குற்றுகர மொழிகளை உச்சரிக்கு மாற்றையும் உற்றுநோக்குக. நோக்கின் முற்றுகரங்கள் குற்றுகரங்களாகவும் குற்றுகரங்கள் முற்றுகரங்களாகவும் உச்சரிக்கப்படுகின்றன வென்பது புலனாம். இதுகண்டு இவ்வுகரப் பாகுபாடு தமிழ்ச் சொற்களுக்கேயன்றி வட சொற்களுக்கில்லை யென்று கொள்வாராயினர் பலரும். தெலுங்கிற் குற்றுகர மின்மையைக் கவனிக்குமிடத்து அது தமிழினின்று பிரிந்தபின்னரே தமிழின் கண் இக்குற்றுகர வுச்சாரணம் புகுந்திருத்தல் வேண்டுமென்பது துணியப்படும். இவ்வுகரப் பாகுபாட்டின் இன்றியமையாமை தமிழ்ச் சொற்கள் புணருமிடத்து வெளிப்படும்.

இசை நலமும் ஓதை நலமுஞ் சான்ற பாஷைகள் விசேஷமாக உயிர் வருக்கத்தில் நன்கு வேறுபட்ட ஒலிகள் சிலவே யுடையனவாமெனவும் உயிர் வருக்கத்தில் விசேஷமாக மிக்க ஒலிகளுள்ள பாஷைகள் இசைகலம் வேறுபட்டுத் தெளிவின்றி ஏகரீதியின் இயங்குவனவாமெனவும் பாஷைநூல் வல்ல பண்டிதர் கூறுகின்றனர். இவரது கூற்றை யொட்டித் தமிழ்ப் பாஷையை ஆராயுமிடத்துத் தமிழ் முதற்கட்கூறிய பாஷைகளின் வருக்கத் திற் சேருமேயன்றிப் பின்னர்க் கூறிய வருக்கத்திற் சேராது.

தமிழ் உச்சாரண பேதங்கள் மூன்றாம். அவைதாம் எடுத்தல், படுத்தல், நலிதல் என்பனவாம். தமிழ்ச்சொற்களை யுச்சரிக்கும்போது பொருள் சிறந்து நிற்கும் பாகத்தி னெழுத்துக்களை யெடுத்தும் அயலெழுத்தைப் படுத்தும் மற்றையவற்றை நலிந்தும் உச்சரிக்க வென்பதே முறை. தமிழர்களது உச் சாரணமுறை நாளுக்குயாள் சிறிதுசிறிதாக வேறுபட்டுக்கொண்டே வருகின்றது.இவ்வாறு தமிழுச்சாரணம் வேறுபட்டுக்கொண்டே செல்லுமானால் தமிழெழு த்துக்களின் பிறப்பிடங்களும் வேறுபடுதல் வேண்டுவது இன்றியமையாத தாகும். ஆனாற் பாஷைகளி-னொலிகளினும், அவற்றின் பிறப்பிடம்களும் உச்சாரண பேதங்களும் மிகவும் நிலை பேறுடையனவாம். இவ்விஷயம் பாஷை நூல்களிற் பெரிதும் முழங்குவதாகும்.

தமிழ்ப் பாஷையின் கண்ணேயுள்ள மொழிகளைப் பகுபதம் பாகாப்பதமென விருகூறாக்கி, அவற்றுட் பகுபதங்களைப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களு ளடங்குமாறு பகுத்து முறைப்படுத்திருக்கும் நன்னூலாரது செயல், பாஷை நூலிற் கூறப்படும் மொழியாக்க முறையைப் பெரிதும் ஒட்டிச் செல்லுகின்றதெனினும் அவர் கூறிய பகாப்பத விலக்கணத்திலும் இடுகுறிப் பெயரிலக்கணத்திலும் ஆக்ஷேபிக்கத் தக்க அமிசங்களிருக்கின்றன. தமிழ்ப் பகுதிகளும் அவற்றினின்று சொல்லாகுமாறும் மிகவும் நேரிய ஒழுங்குள்ளனவாம். தமிழ்ப்பகுதிகளின் ஒழுங்கைக் குறித்துப் பிறிதோரிடத்திற் பேசுதல் கருதி, இப்போது அதை விடுத்து மேற்செல்லுகின்றோம்.

இனித் தமிழ்ச் சொற்களெல்லாம் வாக்கியத்தின் பகுதிகளாம். அவை நால்வகைய, பெயர் வினை இடை உரியென. பிறபாஷைகளிலுள்ள சொற்பாகுபாடுக-ளெல்லாம் இந்நான்கனு ளடங்குமென்க. இடைச் சொற்களும் உரிச்சொற்களும் முன்னொரு காலத்திற் பெயர் வினைகளா யிருந்தன. அவைகளனைத்துங் காலக்கிரமத்தில் அத்தன்மைக ளிழந்து இப்போதுள்ள இடையுரிப் பண்புகள் அடைவனவாயின. பெயரும் வினையும் முதனிலைகளாகிய தனிப் பகுதிகளினடியாகப் பிறந்தன. அம் மூலப் பகுதிகள் தாமுந் தனித்தனி வாக்கியங்களின் மரூஉக்களாம். எனவே வாக்கியங்கள் பகுதிகளாய்க் குறுகி முதனிலைத் தன்மைப்பட்டுத் தம்மினின்றும் பல சொற்களாக்கி அவற்றை மீட்டும் வாக்கியங்களின் தொடர்பு படுத்தனவென்பது கேட்போருக்கு நகை விளைப்பதோர் கூற்றேயாமாயினும் அது பாஷைநூல்வல்ல பண்டிதராயினார் யாவர்க்கும் ஒப்ப முடிந்ததோர் கோட்பாடேயாம்.

தமிழிலக்கண முடையார், பாலையும் எண்ணையும் வேறு வேறு கூறாது, இரண்டையும் 'பால்' என்ற ஒன்றிலே போற்றி, 'ஆண், பெண், பலர், ஒன்று, பல' என ஐம்பால் வகுத்தார். அவ் வகுப்பிலும் ஆண் பன்மைக்கும் பெண் பன்மைக்கும் வேறுபாடு காட்டாது 'பலர்பால்' என்றதன்கண் அடக்கினார். உயர்திணையிலாவது ஆணொருமை பெண்ணொருமை கொண்டார்; அஃறிணை யில் அதுவுமில்லை. அஃறிணைப்பாற் பகுப்பெல்லாம் ஒருமைப் பன்மைகளேயாம், அஃறிணைச் சொற்களில் ஆண் பெண் பாகுபாடு பாஷை நடையிலிருக்கவும் அதனை யிலக்கண நூலுடையார் கவனியாது பராமுகமாய் சென்றது யாது காரணம் பற்றியோ?

" ஆண் பெண் பலரென முப்பாற் றுயர்திணை"
" ஒன்றே பலவென் றுருபாற் றஃறிணை"

என்ற பெயரியலிற் சூத்திரங்கள் வகுத்த நன்னூலார் தம்மையும் மறந்து.

"நூலுரை போதகா சிரியர் மூவரும்
முக்குண வசத்தான் முறைமறைந் தறைவரே"

என்ற கூற்றிற்கு இலக்கியமாய்ப் பொது வியலின் தொடக்கத்தே,

"இருதிணை யாண்பெணூ ளொன்றனை யொழிக்கும்
பெயரும் வினையுங் குறிப்பி னானே"

என்ற சூத்திரத்தில் அஃறிணைக் கண்ணும் ஆண்பெண் பாகுபாடுண்மை கூறி விட்டனர். என் செய்வார்? அவரால் அதனை அறவே யொதுக்க முடியவில்லை.

தமிழில் வினைச்சொற்களுட் சில, பகுதி யொற்றிரட்டியும்; பல, இடை நிலைகளானும்; வேறுசில, விகுதிகளாலும் காலங்காட்டுகின்றன. இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனக் காலங்கள் மூன்றாக வழங்குகின்றன வெனினும், ஆதி காலத்தில் நிகழ்காலமென்றதொன்று ஏற்படவேயில்லை. ஒரு நிமிஷம் முந்தினால் இறந்தகாலமும் ஒரு நிமிஷம் பிந்தினால் எதிர்காலமுமாய்ப் போதலின் நிகழ்காலத்திற்கு இயக்கமின்றி யொழிதல் காண்க. இதுபற்றியன்றே தொல்காப்பியனாரும் நிகழ்காலத்திற் கெனத் தனிவேறிடை நிலைகள் கூறாது சென்றனர். பாஷையோ நாடோறும் முதிர்ந்து முக்காலமும் அவற்றிற் சில பாகுபாடுகளும் வேண்டி நிற்பதாயிற்று. இது கண்ட நன்னூலார், பாஷை நடையை முற்றிலும் உற்றுநோக்காது ஒருபுடைநோக்கமாய் 'ஆநின்று, கின்று, கிறு'என்று மூன்று நிகழ்கால விடைநிலைகள் வகுத்து, அவ்வளவில் அமைவாராயினார். தமிழ்ப் பாஷையின் போக்கோ, பின்வருமாறு காலப் பாகுபாடுகள்
வேண்டா நின்றது:-

{ i இறப்பிலிறப்பு; (உ-ம்) செய்திருந்தான்.
I. இறந்தகாலம் { ii இறப்பில்நிகழ்வு; (உ-ம்) செய்திருக்கிறான்.
{ iii இறப்பிலெதிர்வு; (உ-ம்) செய்திருப்பான். 

{ i நிகழ்விலிறப்பு; (உ-ம்) செய்யாநின்றான்.
II. நிகழ்காலம் { ii நிகழ்வில்நிகழ்வு; (உ-ம்) செய்யாநிற்கிறான்.
{ iii நிகழ்விலெதிர்வு; (உ-ம்) செய்யாநிற்பான்.

III. எதிர்காலம்:-- ஒன்றே; (உ-ம்) செய்வான்

இப் பாகுபாட்டினாற் பெருநலம் வினைதலின் இலக்கண நூலுடையார் இதனைக் கடிதின் மேற்கொள்வாரென்பது திண்ணம்.

ஒவ்வொரு பாஷையிலும், அஃதுடையார் முன்பின் பயின்றறியாத பொருள்களுக்குங் கருத்துக்களூக்கும் உற்ற தகுசொற்கள் நாடுதல் நேரிதன்றாம். யாவருக்குந் தெரிந்திருக்க வேண்டிய கருத்துக்களிலுமே சிற்சில வேறுபாடுகள் உண்டாகுமானால் மற்றைய விஷயங்களைக் குறித்துப் பேசவும் வேண்டுமோ? பாஷையியல்பு இவ்வாறாயிருக்கத் தமிழின்கண்ணே இதற்குத் தக்க சொல்லில்லை; அதற்குத் தக்க சொல்லில்லை யென்று பலவாறாக வீண்மொழி பிதற்றி வாய்ப்பறை யறைவதனால் யாது பயன்? ஒரு சொல்லுக் கொரே சொல்லாய்த்தா னிருத்தல் வேண்டுமென்பது என்ன நியாயமோ? ஒரு சொற் பொருளைப், பல சொற்களாற் கூறின் அது குற்றமாதலெப்படி? 'சுருங்கச் சொல்லல்' என்ற அழகில்லையென்று கூறிக் கூறலாம். அன்றியும் இவ் விஷயத்தில் ஒருவரும் துணிந்து கூறுதலியலாது; நூற்பரப்பினுள் யாங்கேனும் தக்க சொற்கள் கிடைப்பினுங் கிடைக்கலாம். அவ்வாறு கிடைத்த தனித்தமிழ்ச் சொற்களும் பலவுள.

ஒருகாலத்தில் யாம் வடமொழிப் புலவரொருவரொடு சல்லாபஞ்செய்து கொண்டிருந்தபோது, அவர் திடீரென்று "மெய், வாய், கண், மூக்கு, செவியென்ற வைம்பொறியாலும் சிறந்துவிளங்கி யாக்கை நலம் வாய்ந்த தமிழ்மகள், தான் சம்ஸ்கிருத நாயகனை யெதிர்ப்பட்டு மணக்குங்காறும், முகங் காட்டாது தலைகவிழ்ந்து நின்றனள்! இஃதென்னே!" என்று கூறிப் புன்னகை செய்தனர். அஃதுணர்ந்த யாமுங் காலந் தாழ்த்தலின்றி, அவர் எதிர்பாராத வண்ணமாய், "எல்லாவாற்றானும் யாக்கை நலன் வாய்ந்தொளிருந் தமிழ்மகள் தன்னை மணக்குமாறு போந்த வடமொழிநாயகன் மூங்கையாய் வாய் திறத்தலின்றி முகத்தினாற் பல சைகைகள் செய்து நின்றமைகண்டு, முகஞ்செய்து புறக்கணித்து நின்றனள்! இஃதென்கொலோ!" என்று கூறி இளநகை யரும்பினம்.

இச்சம்பாஷணையின் பொருளாவது, அவர் தமிழில் முகத்திற்குத் தக்க சொல்லில்லையென்றார். யாம், 'முகம்' தமிழ்ச்சொல்லே என்பாரோடிணங்கி அதனை வலியுறுத்திச் சொல்லு முகத்தால், வடமொழியில் முகத்தின் சொற்களைத் தவிர்த்து வாய்க்குத்தக்க சொல்லின்மை காட்டி, அது பேச்சு வழக்கற்ற பாஷையென்று குறித்தனம். இச்சல்லாபத்தை அறிவுடையோர் விநோதார்த்தமாகக் கொண்டு எம்மைக் கடைக்கணிப்பாராக.

தமிழ்ச்சொற் பரப்போ ஒரு பெருங்கடல் போன்று விளங்குகின்றது. தமிழ்ச்சொற்க ளனைத்தையுங் கோவைசெய்து வகுத்த நிகண்டுகளும் அகராதிகளும் குறைபாடுடையனவாய் நிற்கின்றன. ஒரு நூலேனும் சொற்பொருளாராய்ச்சிசெய்து கூறவில்லை. யாவும் சொற்பொருள் மட்டிற் கூறுகின்றன; சொல்லின் பகுதிகளாவன இவை யென்றுஞ் சுட்டிற்றில. ஆதித் தமிழர்க்கு ஒன்று முதல் நூறாயிரங்காறும் எண்ணத் தெரிந்திருந்தது; ஏனெனில் இவற்றைக் குறிக்குஞ் சொற்களெல்லாந் தனித்தமிழ்ச் சொற்களாம். ஆழாக்கு, உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலன் என்ற முகத்தலளவைக் கணக்கும், சாண், அடி, முழம் என்ற நீட்டலளவைக்கணக்கும், பலம், வீசை, மணங்கு, என்ற எடுத்தலளவைக்கணக்கும் , கால், அரைக்கால், மாகாணி, மா, அரைமா,காணி, முந்திரி, இம்மி என்ற கீழ்வாய்க் கணக்கும் அவற்றின் குறியீடுகளும் தமிழரது கணக்கறிவின் உயர்வை விளக்குகின்றன. 'தொண்ணூறு', 'தொள்ளாயிரம்' என்ற சொற்களைக் குறித்துப் பலப்பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள. எனினும் அவற்று ளொன்றேனும் எமக்கு மன அமைதி தரவில்லை. 'தொண்டு' என்பது ஒன்பதிற்குப் பெயராய் நிகண்டிலும், இலக்கியங்களிலும் பயின்று வருவதனால், அச்சொல்லை 'ஒன்பது' என்ற விடத்தில் நிறுத்தித், 'தொண்டு+நூறு=தொண்ணூறு' எனவும், 'தொண்டு+ ஆயிரம்=தொள்ளாயிரம்' எனவுஞ் செய்கை செய்து முடித் தமைக்கலாமென்பது எமது துணிவு.

தமிழ்ப் பாஷையில் நாட்பெயர், கோட்பெயர், மதிப்பெயர் என்பவற்றுட் பெரும்பாலன தமிழ்ச் சொற்களேயாம். சிறுபாலன சந்தேகத்தெற்கு இடந்தருகின்றன. அவை, 'புதன், சனி என்பனவும், பிறவும் போல்வன. இத்தகையன வடசொற்க ளென்று கூறினும் படுவதோ ரிழுக்கில்லை யென்னலாம்.

'கடவுள்' என்ற சொல்லுண்மையானால், தமிழர் 'கடவுளுண்டு' என்ற கொள்கை யுடையாரென்க. தமிழில் முருகக் கடவுளைக் குறிப்பதற்குப் பல சொற்களிருப்பவும், ஏனைய கடவுள்களைக் குறிப்பதற்குத் தக்க சொல் ஒன்றேனு மின்மையால் முருகக் கடவுளொருவரே தமிழ்க்கடவுள், மற்றைக் கடவுள்கள் தமிழ்க்கடவுளரல்லரென்று வாதிப்பார் பலருளர். சிலர் சிவபிரானையுந் தமிழ்க் கடவுளென்பர். அவரது கொள்கைப்படி 'சாஸ்தா' சைவக் கடவுளுந் 'திருமால்' ஆரியக்கடவுளுமாவர். சில்லோர் தமிழ்ப் பாஷைக்குள்ளே 'விக்கிரகம்' என்றதைக் குறிப்பதற்குத் தக்க தனித்தமிழ்ச் சொல்லில்லை யெனவும், அதனால் தமிழர்கள் விக்கிரகாராதனம் செய்பவர்களல்ல ரெனவும் துணிந்து கூறுவாராயினர். அவர் கூற்றுப் 'படிவம், வடிவம்' என்ற தனித்தமிழ்ச் சொற்களாற் போலியென்று ஒதுக்கப்படுவதாயிற்று. அன்றியுந் தமிழர் முதுமரங்களிற் கடவுளை ஆரோபித்துத் தொழுதனரென்பது பண்டைத்தமிழ் நூல்களான் ஏற்படுகின்றது.

"கட்புல ளில்லாக் கடவுளைக் காட்டுஞ்
சட்டகம் போலச் செவிப்புல வொலியை
உட்கொளற் கிடுமுரு வாம்வடி வெழுத்தே"
என்ற இலக்கண நூலார் கூற்றையும் உய்த்துணர்க.

பாஷையின் சிறப்பியல்பு முற்றிற்று