புத்தரை மறத்தல்

bookmark

சீனத் துறவி ஹான் ஜிங் என்பவர் பிரசித்தி பெற்ற காமாகுரா மடாலயத்திற்கு வந்திருந்தார். அவர் மிகவும் வயதான துறவி. பறவைகளின் கீச்சொலி, இலைகளின் சரசரப்பு, நீரோடையின் மெல்லிய ஓசை தவிர அமைதியாக இருந்த அந்த இடத்தைப் பார்த்ததும் ஹான் ஜிங்கிற்கு மிகவும் பிடித்துவிட்டதால், இந்த இடம்தான் தான் தியானம் செய்ய ஏற்ற இடம் என்று நினைத்து அங்கேயே தங்க எண்ணினார். ஆனால் அந்த மடாலயத்தில் ஒரு ஈ இருந்தது. அவர் தியானம் செய்தபோது அந்த ஈ ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. அவரால் மனதை புத்தரிடம் செலுத்த முடியவில்லை. தினமும் தியானிக்க முயன்று முயற்சியைக் கைவிட்டார் ஹான் ஜிங். பிறகு ஒரு நாள் துறவிக்கு ஒரு யோசனை தோன்றியது. புத்தரைக் குறித்து தியானம் செய்வதைக் கைவிட்டு ஈயின் ரீங்காரத்தைக் குறித்து தியானித்தார். அது அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு செய்த மிக ஆழ்ந்த தியானமாக இருந்தது. அதன் பிறகு அவர் புத்தரை நினைக்கவேயில்லை.