புத்தி கெட்ட அண்ணா!

பெண்கள் பெரிய மனுசி (புஷ்பவதி) ஆனால் தீட்டுக் காலம் தாண்டும் வரையில், தங்குவதற்கென்று ஒரு பச்சைக் குடிசை கட்டுவார்கள். அந்தக் குடிசையை மாமன்மார்கள் கட்டிவைத்து அழித்து விடுவார்கள். வீட்டுக்கு அழைக்கும் போது சுற்றத்தாரையெல்லாம் அழைத்து விருந்து நடத்துவார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் "எங்கள் வீட்டில் திருமணத்திற்குப் பெண் தயாராகி விட்டது"என்று வெளியாருக்கு சொல்லாமல் சொல்லித் தெரிவிக்கப்படும்.
ஒரு ஏழை வீட்டுப் பெண், கூலி வேலைக்குச் சென்றவள். வேலைமுடிந்து ஒரு தோப்பில் அமர்ந்திருக்கிறாள். தன்னைப் பெண் கேட்கச் சிலர் வந்து போனது அவளுக்குத் தெரியும். அவளைக் கட்டிக் கொடுக்க பெற்றோர் கையில் காசில்லை. இதை நினைத்து தனது குடும்பத்தைச் சேர்ந்த தன்னொத்த வாலிபனிடம் கூறுகிறாள். (ஒரே குலதெய்வத்திற்கு-அதாவது கோயிலுக்குப் போகிறவர்கள் அனைவரும் அண்ணன், தம்பி, தங்கை முறைதான். கொள்வினை கொடுப்பனை கிடையாது.) அப்பொழுது செங்காத்தும் செம்மழையும் வருகிறது. குலம் கோத்திரம் பார்க்காத இந்தக் காலத்து மைனர் ஒருவன் தனக்குத் தங்கை முறை ஆகிற அப்பெண்ணைப் பார்த்து, "மாமரம் பூஞ்சோலை இருக்கும், வாடி, போயி ஒண்டிக்கலாம்" என்று முறை வைக்காமல் கூப்பிடுகிறான். இதைக் கேட்ட அவளுக்கு ஆத்திரம் பிரிட்டு வருகிறது. "புத்தி கெட்டவனே குலம் கோத்திரம் கூட உனது மோகவெறியில் மறைந்து விட்டதா? இதைப் பூமாதேவி கேட்டாளென்றால் புலம்பிக் கண்ணிர் விடுவாள்"என்று அவனுக்குச் சூடு கொடுக்கிறாள். அதை அவள் வாயாலேயே சொல்லக் கேளுங்கள்.
(குறிப்புரை - சடையப்பன்)
பெண்:
ஒரு கட்டு மூங்கில் வெட்டி
மலையோரம் சாத்தி
அதுக்கு ரெண்டு மலையாளத்தா
ஏலங் கூறி வருவா
அதுக்கு ரெண்டு காசு பணம்
நாங்கள் எங்கு போவோம்
செங்காத்தும் செம்மழையும்
வருகுதடி அம்மா
ஆண்:
மாமரந்தான் பூஞ்சோலை
ஒண்டிக்கலாம் பொண்ணே
பெண்:
பொண்ணே பொண்ணே! எங்காடாதே
புத்தி கெட்ட அண்ணா
பூமா தேவு கண்டா லென்றால்
புலம்பிடுவாள் இப்போ
வட்டார வழக்கு: மூங்க-மூங்கில்; ரெண்டு - இரண்டு; ஒண்டிக்கலாம்-ஒளிந்து கொள்ளலாம்.
உதவியவர்: C. செல்லம்மாள்
சேகரித்தவர்: சடையப்பன்
இடம்: பொன்னேரிப்பட்டி, அரூர், தருமபுரி மாவட்டம்.
---------------