புலித்தோல்

நர்மதை நதிக்கரையில் வண்ணான் ஒருவன் கழுதை ஒன்றை வளர்த்து வந்தான். வண்ணான் மிகவும் வறுமையில்
வாடினான். அதனால் அவன் தன் கழுதைக்கும் சரிவர உணவு கொடுக்கவில்லை. ஒரு நாள் அவன் காட்டுக்கு
அருகாமையில் சென்று கொண்டிருக்கும்போது அங்கே ஒரு புலித்தோலினைக் கண்டெடுத்தான். அதனைப் பார்த்ததும்
அவனுக்கு ஒரு யோசனை வந்தது. அதனைக் கொண்டுவந்து தன் கழுதையின் மீது போர்த்தினான். இரவில்
அதனை வெளியில் நடத்திச்சென்று அக்கம் பக்கத்தில் உள்ள தோட்டங்களில் அதனை அனுப்பிப் பயிர்களை
மேயவைத்தான். தோட்டக் காவலர்கள் இதனைப் புலி என்று நினைத்துப் பயந்து ஓடினர். கழுதையும் எந்தத்
தொந்தரவும் இன்றி தனது பசி தீர பயிர்களை ஆசையாகச் சாப்பிட்டு வந்தது. ஒருநாள் வழக்கம்போல
அந்தக் கழுதை வயலில் மேய்ந்து கொண்டிருக்கும்போது, தூரத்தில் ஒரு பெண் கழுதையின் குரல் கேட்டது. உடனே
புலித்தோலைப் போர்த்தியிருந்த இந்தக் கழுதையும் கத்தத் தொடங்கியது. பயந்து ஒதுங்கியிருந்த தோட்டக்
காவலர்கள், இது புலி அல்ல, கழுதை என்பதனைப் புரிந்து கொண்டார்கள். அதன் மேலிருந்த புலித்தோலைப்
பறித்துக்கொண்டு, கழுதையை அடித்து விரட்டினார்கள்.