பூசை முடிஞ்சு போச்சோ

bookmark

கணவன் இறந்து விட்டான். மனைவி அவனுடைய பழக்க வழக்கங்களைச் சொல்லி அழுகிறாள். அவன் காலையில் குளித்து மிக ஆசாரமாக பலகையில் அமர்ந்து பூசை செய்வான். விரதங்கள் அனுஷ்டிப்பான்.

அவற்றை நினைத்துப் பொருமியவளாய்த் துக்கம் தாளாமல் `பூசை முடிந்துவிட்டதென்று பொன்னு ரதம் ஏறி விட்டீர்களோ? தவசு முடிந்து விட்டதென்று தங்க ரதம் ஏறி விட்டீர்களோ?` என்று கூறிப் புலம்புகிறாள்.

பொன்னு விசுப்பலகை
பூசப் பொன்னா ஆசாரம்-உங்களோட
பூசை முடிஞ்சு போச்சோ
பொன்னு ரதம் ஏறினீங்க
தங்க விசுப்பலகை
தவசு பண்ணும் ஆசாரம்-உங்களோட
தவசு முடிஞ்சிடுச்சோ?
தங்க ரதம் ஏறினீங்க

குறிப்பு: பொன் ரதம், தங்க ரதம்-இறந்து போனவர்கள் அதில் ஏறிச் செல்வதாகக் கற்பனை.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
------------