மங்கல வாழ்த்து

bookmark

சேலம் மாவட்டத்தில் வேளாளர் திருமணங்களில் கீழ்வரும் மங்கல வாழ்த்து பாடப்படும். வடமொழி மந்திரங்கள் உழைப்போர் குடும்பங்களில் நடைபெறும் திருமண வினைகளில் இடம் பெறுவதில்லை. இதற்கு முன்னர் இரு மங்கல வாழ்த்துக்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. தாலி கட்டியவுடன் பாடப்படும் பாடல் இது.

புராண புராண வேதம்
வைய சாங்கியம்
காராள வேதருக்கும்
பாலா புளியாக்கா
ஈண தொரு மல்லி
இன மல்லி
நன்றாய் வேற்றம்
செம்பக மல்லி
நல் மாட்டுச் சாணம் கொண்டு
நல் சதுரம் வழிச்சு
சர்க்கரை குத்தி
சம்பா அரைத்து
வளமுள்ள தோட்டி
கொள மாளித்து
மாமன் கொடுக்கிற
வரிசையைக் கேளு
நாக மோதிரம்
புல்லை சரப்பளி
மேல் காது வாளி
வெள்ளை வெத்திலை
வீராணம் பாக்கு
பத்து விரலுக்கும்
பசியாணி மோதிரம்
எட்டு விரலுக்கும்
எணியாண மோதிரம்
மூங்கில் போல் சுற்றம்
முசியாமல் வாழ்ந்து
அருகுபோல் வாழ்ந்து
ஆல் போல் தழைத்து
இரு பேரும் பிரியாமல்
காராள வம்சம்
சுகமாக வாழ

குறிப்பு : வேளாளர்களுக்கு சாங்கியம் வேதம் என்று குறிப்பிடப் படுகிறது. தழைத்துக் கிளை விடுவதற்கு மூங்கில், அருகு, ஆல் இவை போல் செழித்து வளர வேண்டும்.

சேகரித்தவர் : சடையப்பன்
இடம் : அரூர்.