மலடு இண்ணும் சொன்னாங்க

bookmark

தூர தேசத்தில் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டனர் அவளது பெற்றோர். அதனால் அவள் தாய் வீட்டிற்கு அடிக்கடி வரமுடியவில்லை. தந்தை இறந்த செய்தி கேட்டு, வருகிறாள். குழந்தைப் பேறு பெறாத அவள் தான் `மலடு` என்னும் பட்டம் பெற்று,தாய் தந்தையரையும் அடிக்கடி பார்க்க முடியாத தூர தொலைவில் இருந்து வாடுவதாகக் கூறுகிறாள். தந்தையின் சடலத்துக்கருகில் அழுது ஒப்பாரி பாடும்பொழுது “என்னை உள்ளூரிலேயே மணம் முடித்துக் கொடுத்தால் நான் அரிசி, பருப்பு முதலியவை கடன் கேட்டுத் தொல்லை கொடுப்பேன் என்றா வெகு தூரத்தில் மணம் செய்து கொடுத்தீர்கள்?” என்று கேட்டு அழுகிறாள்.

ஆத்துக்கு அந்தாண்ட
அன்னக்கா பின்னமரம்
அஞ்சியாறு தாண்டி-நீ பெத்த
அல்லியை ஏன் வெலை மதிச்ச
அண்டையிலே கொடுத்தாலே
அரிசி கடன் கேட்பனிண்ணும்
பக்கத்திலே கொடுத்தாலே
பருப்பு கடன் கேட்பனிண்ணும்
பத்தாறு தாண்டி-நீ பெத்த
பாங்கில வெலை மதிச்ச
ஆத்துக்கு அந்தாண்ட
எங்கப்பன் வீட்டு
ஆனை வண்டி சத்தம் கேட்டு
கொளத்துக்கு அந்தாண்ட
எங்கப்பன் வீட்டு
குதிரை வண்டி சத்தம் கேட்கும்
கோவைக்காய் நாருரிப்பேன்
கூட்டரைச்சி பொரி பொரிப்பேன்
தங்கச் சம்பா நெல் குத்தி
தயிர் சாதம் நான் சமைப்பேன்
மத்தங்கா புல்லறுத்து
மலையோரம் சாத்துனா
மலையோரம் போறவங்க
மலடு இண்ணும் சொன்னாங்க
கொடியருகன் புல்லறுத்து
கொளத்தோரம் சாத்துணா
கொளத் தோரம் போறவங்க
கொட்டு இண்ணும் சொன்னாங்க

வட்டார வழக்கு: அந்தாண்ட-அந்தப் பக்கம் ; கொளம்-குளம் ;
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி மாவட்டம்.
-------------