முகவுரை

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"
என்ற திருவள்ளுவனார் திருவாக்கின்படி, இந்நூலை அறிவிடையோர் காணலுற்றால் அவர் இதன்கட் பொதிந்துள விஷயங்களின் செவ்வியை உள்ளவாறு அறிந்து தக மதிப்பர் என்னுந் துணிவு கொண்டெழுந்தே யாம் இச்சிறுநூல் வகுக்கப் புகுந்தனம்.
ஒருபாஷையின் வரலாறு என்றாலென்னை? இதன் பொருள் யாது? இது மேற்பார்வைக்குத் தெளிவான பொருள் கொண்டதுபோல் தோன்றாமலிருந்த போதிலும், உய்த்துணருமிடத்து இதற்கு இது தான்பொருளென்று வரைந்து சுட்டலாகும் படியிருக்கின்றது. தேசசரித்திரம் போலப் பாஷைவரலாறு கூறல் இயலாது.
இன்னவிஷயம் இக்காலத்தில் நிகழ்ந்ததென்றும் அதன்பயன் இன்னதென்றும் நிச்சயமாகத் தேசசரித்திரங்கூறும். பாஷைவரலாற்றிற் காலவரையதை கூறுவதெல்லாம் உத்தேசமுறை பற்றியேயாம். மற்று, நிகழ்ச்சிவரலாறும் பயனும் சிறிதளவு தெளிவாகக்கூறலாம்.
நூல்களின் வரலாறும் நூலாசிரியர்களின் வரலாறும் பாஷை வரலாற்றொடு நேரே சம்பந்தப் பட்டனவல்ல. எனினும் ஓராற்றாற் சிறிதளவு இயைபுண்டு. அவ்வியைபு நினைவிலிருக்கவேண்டும். பொருள் அறிவுறுக்கும் ஒலிகளின் தோற்றமும் சொல்லாக்கமும் பேச்சுவழக்கும்- அது பரவியவாறும் பாஷையாயினமையும், பாஷையின் நெடுங்கணக்கும், எழுதப்படுமாறும், ஏட்டுவழக்கும், இலக்கண வரம்பும், பாஷையமைப்பும், சொன்மரபும், நூன்மரபுமாகிய இவையனைத்துமே பாஷை வரலாற்றின் விஷயங்களாம். இவைகளே இந்நூலின்கண் ஆங்காங்கு விரித்துக் கூறப் படுகின்றன. இந்நூலின் பொருளடக்கத்தை ஒருமுறை உற்றுநோக்கின் இந்நூலினியல்பு இன்னதென விளங்கும்
இத்தன்மையான நூல்கள் ஆங்கிலம் முதலிய பிறபாஷைகளிற் பல விருக்கின்றன. மற்றுத் தமிழ்மொழிக்கோ ஒன்றேனுமில்லை. ஆங்காங்கு வந்தவரும் போனவரும் தமிழைப் பற்றித் தத்தமக்குத் தோன்றியவைகளை வாய்க்கு வந்தபடி யெல்லாம் ஆங்கிலத்தில் மூலைக்குமூலை பல புத்தகங்களுள் எழுதி வைத்தவைகளே *நிலதலாய்க் கிடந்தன. அவற்றைஆராய்ந்து பதர்களைந்து பணிகொள்வார் அரியராயினர். 'தமிழ்ப் பாஷைச் சரித்திரம்' என்பது தமிழிற் கலாகாயகப் பட்டப் பரீஷைப் பாடங்களு ளொன்று. இதற்குத் தக்க நூல்கள் அகப்படாது மாணாக்கர்கள் தவிப்பது கண்டிருக்கின்றோம். காலஞ்சென்ற தீ. மீ. சேஷகிரி சாஸ்திரியாரவர்களது 'திரவிட சப்ததத்துவம்' என்ற நூல் முன்னரே யேற்பட்டுள தமிழிலக்கணங்களைப் பாஷைநூ லமைதிகட்குத் தக்கபடி மாற்றிப் புத்திலக்கணமாக வகுத்ததொன்றாம். அது பொதுநோக்கமாய்ச் செல்லுதலின்றிச் சிறப்பு நோக்காய்ச் சொன்மரம்புஞ் சொல்லிலக்கணமுமே கூறிச்சென்றது. ஆகவே யாம் மேற்கூறியவாறு ஒரு நூல் செய்ய விரும்பித் 'தமிழ் மொழியின் வரலாறு' என்னும் இந்நூலைப் புனைந்து வெளியிடுகின்றேம். இதன்கண்ணே, மேற்புல விஞ்ஞானிகள் கண்ட பாஷை நுன்முறைகளின்படி தமிழ் மொழியின் தன்மை இஃதென வகுத்துக் கூறப்படுகின்றது.
யாம் எமது ஆங்கிலக் கல்வியின் பயனாகப் பழைய தமிழ் நூற்கருத்துகள் சிலவற்றொடு *மூரணிப் புதுக்கருத்துகள் சில ஆங்காங்குக் காட்டியிருத்தல் பற்றிப் பேரறிவாளர் எம்மை யிகழாது நூன்முழுவதும் உற்றுநோக்கி இஃது அமையும் அமையாதென இறுதியிற் கூறுக.
தமிழ் நூலினிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பின்றி விடுத்தனம். உதாரணங்களால் நூலைப் பெருக்கியவழிப் பொதுவாகப் படிப்பார்க்குச் சுவை குறையுமென்றெண்ணி ஆங்காங்கு வேண்டிய விடங்களில் இரண்டொருகாரணமே காடடியிருக்கின்றேம். இன்னும் இந்நூலை விரிக்கும் அமயம் நேர்ந்துழி விரித்தெழுதுவாம். இஃது எழுதுமிடத்து எமது 'இயற்றமிழ் மாணவர்' செய்தவுதவி யொருபொழுதும் மறக்கற்பாலதன்று.
"அறிவெனப்படுவது மேதையார் சொன்னோன்*நல்" என்ற பெரியோர் வாக்கின்படி, அறிவுடையார் எம்மைப் பொறுத்தருளுவர் என்னுந் துணிவுபற்றி இந்நூலை வெளியிடுகின்றேம்.