முறை மாப்பிள்ளே

தமிழ் நாட்டில் திருமண முறைகளின் வளர்ச்சி சமூக மாறுதல்களை ஒட்டியே நிகழ்ந்திருக்கிறது என்பதை நமது இலக்கியங்களும், புராதனக் கதைகளும் மறைந்து போன சமுதாயங்களின் எச்சமாக நிலைத்து நிலவும் சடங்குகளும் பழக்கவழக்கங்களும் காட்டுகின்றன.
வரன்முறையற்ற குழு-மணமுறை தமிழ் நாட்டில் இருந்தது என்று காட்ட ஆதாரங்கள் இல்லை. ஆனால் உறவுப் பெயர்களில் சில அப்பா, சிற்றப்பா, பெரியப்பா, அம்மா, பெரியம்மா, சித்தி ஆகியனவும், கணவனது சகோதரர்களை மைத்துனன், கொழுந்தன் என்று அழைப்பதுவும் இம் மணமுறையின் எச்சங்களாக தோன்றுகின்றன, இது சொத்துரிமை தோன்றுமுன் கூட்டங்களாக வாழ்ந்து வேட்டையாடி வந்த மக்களது மணமுறையாகும்.
வேட்டையாடியும், புன்செய்ப் பயிர் செய்தும் வாழ்ந்த சிறு குடியினர் களவும், கற்புமாகிய ஒருதார மணத்தைக் கொண்டிருந்தனர். வேட்டையை ஆண் மக்களும், பயிர்த் தொழிலைப் பெண் மக்களும் நடத்தினர். இருவரும் சமூக உற்பத்தியில் பங்கு கொண்டனர். இருவருக்கும் ஏறக்குறைய சமமான உரிமைகள் இருந்தன.
விலங்குகளைப் பழக்கி உழவுக்கும், பால் முதலிய உணவுப் பொருள்கள் பெறவும் பயன்படுத்த மனிதன் கற்றுக் கொண்டான். மாடுகளைப் பழக்கத் தெரிந்த வலிமை மிக்கவன் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவன். எனவே பெண்கள் மாட்டை எதிர்த்து வெற்றி கொள்ளுபவனையே மணந்து கொள்ள விரும்புவார்கள். ஒருவனே பலரை மணந்து கொள்வும் கூடும். கிருஷ்ணன், கோபியர் கதை இவ்வளர்ச்சிக் கட்டத்திலிருந்த சிறு குடியினரிடையே தோன்றியதே. இம்முறைகளில் ஒரே தொழில் செய்பவரிடையே மணம் நடைபெறுவதில்தடை அதிகமில்லை. நிரை காப்பவனாதலால் நாலைந்து பெண்களை மணம் செய்து கொண்டு அவர்கள் கொண்டு வரும் பசு நிரைகளைக் காத்து பெருக வைத்துப் பெருமையடைவான்.
நிலப்பிரபுத்துவம் தோன்றிய பின்னர்தான் சாதிப் பிரிவுகள் கடுமையாயின. இதன் அடிப்படை, வர்க்கப் பிரிவினையே. உயர்நிலை வர்க்கங்களில் பெண்கள் அடிமையாயினர். சமூக உற்பத்தியில் அவர்கள் பங்கு பெறவில்லை. தாழ்நிலை வர்க்கங்கள், அடிமை நிலைக்குத் தாழ்ந்தன. அவர்களிடையே ஆண்களும் பெண்களும் பழகுவதற்கு தடைகள் பல இல்லையாயினும் நில உடைமையே வாழ்க்கையை நிர்ணயித்தது. எனவே சொத்து,சொந்தத்தில் உள்ளவர்களுக்குச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் உறவு முறை மணம் தோன்றியது; இதிலும் கூட அண்ணன் தங்கையாயினும், தனித்தனியாகச் சொத்து இருந்தால்தான் இவ்வுறவு.
தங்கை தன் மகனுக்குப் பெண் கேட்டு வருகிறாள். அவளைவிட அவன் பணக்காரன். பரியம் கொண்டு வந்து பெண் கேட்ட தங்கையின் பேச்சை அவன் காது கொடுத்துக் கேட்கவில்லை. மணமுறை உரிமையால் தன் மகன் அண்ணன் மகளை சிறையெடுத்துச் சென்று விடுவான் என்று தங்கை வஞ்சினம் கூறிச் சென்று விடுகிறாள்.
இது நடக்குமா? சொத்துரிமை மனித உறவு முறைகளை கட்டுப்படுத்தும் சமுதாயத்தில் இரத்த உறவுகளை சமூகம் மதிக்குமா? இரண்டு உறவு முறைகளும் சொத்துரிமையால் ஏற்பட்டவைதாமே.
அண்ணனும் தங்கையும்
பெண்: அண்ணாவே அண்ணாடத்தான்
பெருமாளே
படியளக்கும் அண்ணாடா
நாயகனே
அரிசி நல்லா அண்டைத்தான்
அஞ்சி பொதி
அர்த்த முடன் அண்டைத்தான்
கொண்டு வந்தேன்
காணப் போர
பெண் : கத்திரிக்கா அண்ணாடா
கால்தூக்கு
கணக்குடனே அண்ணாடா
கொண்டு வந்தேன்
உப்பு நல்லா அண்ணாடா
ஒரு பொதி
உணவுடனே அண்ணாடா
கொண்டு வந்தேன்
பட்டுப் பாயி அண்ணாடா
எடுத்துக்கிட்டு
பரியங்களும் அண்ணாடா
கட்ட வந்தேன்
முத்துப் பாயி அண்ணாடா
தூக்கிக்கிட்டு
முகூர்த்தங்களும் அண்ணாடா
பார்க்க வந்தேன்.
ஆண் : இத்தனையும் தங்கையரே
கொண்டு வந்தா
என்ன பலன் தங்கையே நீ
காணப் போர
பெண் : ஆலமரம் அண்ணாடா நான்
சாட்சி வச்சி
அளுது கொண்டு
அண்ணாடா போரேனடா
புளியா மரம் அண்ணாடா நான்
சாட்சி வச்சி
பொங்கிக் கொண்டு
அண்ணா போரேனடா
ஆத்துலே தான் அண்ணாடா
தலை முழுகி
அள்ளி நல்லா அண்ணாடா
சொருகி கிட்டு
குளத்துலே தான் அண்ணாடா
தலை முழுகி
கூட்டி நல்லா அண்ணாடா
எறிஞ்சேனடா
கூடுவாளா அண்ணாடா
உன் மகளும்
கொண்டு செல்ல
அண்ணாடா ஆகுமோடா
சித்தெறும்பா என் மகன்
வேசம் மாறி
சிறை எடுக்க அண்ணாடா
வருவானடா
ஆட்டையும் அண்ணாடா
உன் பட்டியுமே
நாச மத்து அண்ணாடா
போகாதா
பாம்பாக அண்ணாடா
என்மகனும்-உன் மகள்
பஞ்சணைக்கு அண்ணாடா
வருவானடா
வட்டார வழக்கு: நாசமத்து - நாசமாய்.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம் : சேலம் மாவட்டம்
------------