மூன்று மீன்கள்

bookmark

ஒரு சிறிய குளத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. முதல் மீன் தனக்குத் துன்பம் வரும் முன்பே தப்பித்துக்கொள்ள விரும்பும். இரண்டாவது மீன் தனக்குத் துன்பம் வரும்போது தப்பித்துக்கொள்ள வழிதேடும். மூன்றாவது மீன் தனக்குத் துன்பம் வந்தால் அந்தத் துன்பத்தை ஏற்றுக்கொள்ளும். இந்த மூன்று மீன்களும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். 
ஒரு நாள் மீனவர்கள் இருவர் குளக்கரைக்கு வந்தனர். குளத்தில் நீர் குறைவாக இருந்ததால் நாளை வந்து குளத்திலுள்ள மீன்களையெல்லாம் பிடித்துச் செல்லலாம் என்று பேசிக்கொண்டனர். அதைக் கேட்டுக் கொண்டிருந்த முதலாவது மீன், ஓடிச்சென்று தன் நண்பர்கள் இருவரிடமும் அதைப் பற்றிக் கூறி எச்சரிக்கை செய்தது. பின்னர், அந்தக் குளத்தை விட்டு ஒரு வாய்க்காலின் வழியே வெளியேறி வேறு இடத்துக்குச் சென்று விட்டது. 

இரண்டாவது மீன், நாளை தானே, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றது. மூன்றாவது மீன், வருவது வரட்டும்! எது நடந்தாலும் அது விதிவசம்தான் என்று சும்மா இருந்தது. 

மறுநாள் மீன் பிடிப்பவர்கள் வந்து குளத்திற்குள் வலையினை வீசினர். இரண்டாவது மீனும் மூன்றாவது மீனும் வலையில் அகப்பட்டன. 
இரண்டாவது மீன் மீனவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தான் இறந்துவிட்டது போல் நடித்தது. அதனைப் பார்த்த மீனவர்கள், இறந்த மீன் நமக்கு எதற்கு? என்று நினைத்து, அதனை வலையிலிருந்து எடுத்து மீண்டும் குளத்திற்குள்ளேயே எறிந்து விட்டனர். அந்த மீன் குளத்திற்குள் ஓடிச்சென்று ஒளிந்துக் கொண்டது. 

மூன்றாவது மீன் வலைக்குள்ளேயே துள்ளிக்கொண்டிருந்தது. அதனை அவர்கள் பிடித்துச் சென்றனர். 

நீதி :  ஒரு சிக்கல் வரும் முன்னர் தப்பித்துக்கொள்பவரும் சிக்கல் வருகின்றபோது தப்பித்துக்கொள்பவரும் எப்போதுமே இன்பமடைவார்கள்