மூவகைப் பாகுபாடு

bookmark

தொன்று தொட்டுத், தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளுடையதென்று பலருங் கூறுகின்றனர். அம்மூவகைப் பாகுபாடுகளின் இயல்புகளைக் குறித்துச் சிறிது ஆராய்வாம்.

இயற்றமிழென்பது தமிழர் யாவர்மாட்டும் பொதுமையின் இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமுஞ் செய்யுளுமாகும் நூல்களின் தொகுதியாம். இதன்கண் இலக்கியங்களும் இலக்கணங்களுமாகிய யாவுமடங்குமென்க, எனவே இயற்றமிழ் 'செந்தமிழ், கொடுந்தமிழ்' என்ற வகையிலும் படுதலுமொக்கும். ஒப்பவே," செந்தமிழ் வசனநூல்களும் செந்தமிழ்ச் செய்யுணூல்களும், கொடுந்தமிழ் வசன நூல்களும், கொடுந்தமிழ் செய்யுணூல்களும் இவ்வியற்றமிழின்கண் அடங்குமென்பது தானே விளங்கும். தமிழிற் புலவரும், அல்லாரும் ஒத்தியங்காமையான், இப்பிரிவுக்கு இடமுண்டாயிற்று தமிழ் வழங்கும் நாட்டிற்குளளும் இப்பிரிவு ஏற்படுவதாயிற்று.

" செந்தமிழ் நாடே,
சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனுஞ்
சௌந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ்
சங்கப் புலவருந் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநா டென்ப"

என்ற சூத்திரத்தாற் செந்தமிழ் நாடு இன்னதென்பது அறிக. செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு குறுநிலங்களுங் கொடுநதமிழ் நாட்டின்பாற்பட்டன.

"தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றி யருவா வதன்வடக்கு- ஈன்றாய 
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்"

என்ற பழைய வெண்பாவினாற் கொடுந்தமிழ்நாடு இன்னதென்பது அறிக. இனிச் செந்தமிழ் நாட்டைச் சோணாட்டின்கண் வைத்துச் சூத்திரஞ் செய்தாருமுளர்.

"செந்தமிழ் நாடே,
மன்ற வாணன் மலர்திரு வருளால்
தென்றமிழ் மகிமை சிவணிய செய்த
அடியவர் கூட்டமு மாதிச் சங்கமும்
படியின்மாப் பெருமை பரவுறு சோழனும்
சைவமா தவருந் தழைத்தினி திருக்கும்
மையறு சோழ வளநா டென்ப"

என்பதுங் காண்க. இது தமிழர்கண்மீது சைனர்க்குண்டாகிய பொறாமை காரணமாக யெழுந்ததேயாம்.

முற்காலத்துச் சங்கச் செய்யுட்களும் அவற்றினுரைகளும், இடைக் காலத்துக் 'கம்பராமாயண' மாதிய நூல்களும்அவற்றி னுரைகளும், இக் காலத்து வெளிப்படுஞ் செய்யுணூல்களுமாகிய யாவையும் இயற்றமிழாம். இவ்வியற்றமிழ் இசைத் தமிழ்க்கும் நாடகத் தமிழ்க்கும் முன்னர்த் தோன்றியமை பற்றி அஃது இவ்விரண்டற்கும் முன்வைக்கப் படுவதாயிற்று.அன்றியும் இயற்றமிழே இவ்விரண்டற்கும் உயிரென விளங்குவது. இயற்றமிழின்றி இவ்விரண்டுந் தனித்தியங்குவனவல்ல.

இசைத்தமிழென்பது, பண்ணொடு கலந்துந் தாளத்தொடு கூடியுமியங்குஞ் செந்தமிழ்ப் பாட்டுக்களானுங் கொடுந்தமிழ்ப் பாட்டுக்களானு மியன்ற இலக்கியங்களும் அவற்றினிலக்கணங்களுமாகும் நூல்களின் தொகுதியாம். இதன்கண், கீர்த்தனங்களும், வரிப்பாட்டுக்களும், சிந்து ஆனந்தக்களிப்பு கும்மி தெம்பாங்கு முதலியனவும் அடங்குமென்க. இயற்றமிழின்கண் வழங்குஞ் சொற்களுஞ் சொற்றொடர்களுமின்றி இசைத் தமிழெங்ஙனம் இயங்க முடியுமோ? அன்றியும் இயற்றமிழ்ச் செய்யுட்கள் இசையெடுத்துத் தாளமறுத்துப் பாடப்படின், அவை இசைத்தமிழின் பாற்படும். இராகத்தோடு மட்டில் இயைத்துப் பாடப்படும் பாடல்கள் இயற்றமிழின்பாற் பட்டனவாக மதிக்கப் படுமேயன்றிப் பிறிதில்லை. தாளமும் உடன் கூடிய வழியே இசைத் தமிழின்பாற் படுமென்க. முக்காலத்து வழங்கிய 'பெருநாரை', 'பெருங்குருகு' 'இசைநுணுக்கம்', 'தாளவகையோத்து' முதலியனவும், இடைக்காலத்துத் தோன்றிய 'தேவாரம்' முதலியனவும், இக்காலத்து வெளிப்பட்டுலவுகிற ' கந்த புராண கீர்த்தனை' , ' பெரிய புராண கீர்த்தனை', ' சங்கீத சந்திரிகை' முதலியனவுமாகிய யாவையும் இசைத்தமிழாம். 

இவ்விசைத்தமிழ், நாடகத் தமிழ்க்கு முன்னர் தோன்றியமைபற்றி் முன் வைக்கப்படுவதாயிற்று. அன்றியும் இவ்விசைத் தமிழே நாடகத்தமிழிற்குச் சிறப்பும் விளக்கமும் தந்து நிற்பதாம். இசைத்தமி ழில்வழி நாடகத் தமிழிற்கு இயக்கமில்லை; ஆடையற்ற நங்கை வெளிப்படாதவாறுபோல, இசையற்ற நாடகத்தமிழும் வெளிப்படுதலின்றி உள்ளடங்கியேயிருத்தல் வேண்டும். எனவே நாடகத் தமிழிற்கு இயற்றமிழும் இசைத் தமிழும் இன்றியமையாச் சிறப்பினவாம். ஏன்? இயற்றமிழும் இசைத் தமிழுங் கூடியவழியே நாடகத்தமிழ் பிறக்குமென்று கூறுதலே அமைவுடைத்தாம்.

அன்றியும் நாமுணர்ந்த பிறபாஷைச் சரித்திரங்களிலும் உற்று நோக்குழி, இயற்றொடர் நிலைச் செய்யுட்களும் இசைத்தொடர் நிலைச்செய்யுட்களுமாகிய பாமுறைகளின் தொடக்கங்கள் ஒருங்கேனும் தனித்தேனும் நாடகக் கலையின் தொடக்கங்களுக்கு முன்னரே யிருந்துளவென்பது மலையிலக்கே. இவ்விரண்டுஞ் சேர்ந்துழியே நாடகமானது நாகரிகமுள்ள நாடுகளத்தினுங் கலைகளுளொன்றெனக் கருதத்தக்கவாறு தோன்றி வளர்கின்றது. இம்முறைக் கிணங்கியே நந்தம் தமிழ்மொழியின் கண்ணும் இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகத்தமிழிற்கு முற்படுவன வாயின. அன்றியும் மேர் கூறியவாற்றான் இயற்றமிழும் இசைத்தமிழுங் கூடியவழியே நாடகத்தமிழ் பிறந்ததென்பதும் பெற்றாம். இதுபற்றியன்றே தமிழ்மொழியை இயலிசை நாடகமென முப்பகுதியாக்கி முறைப்படுத் தோதியதுமென்க" என்ற நாடக வியலுடையவர் கூற்றையயும் உற்று நோக்குக.

இனி இடைக்காலத் தொடக்கத்தில் தோன்றிய, இசைத் தமிழிலக்கிய நூலாகிய மூவர் 'தேவார'ங்களும் தமிழிற்கேயுரிய பண்ணுந்திறமும் பயின்றனவாகி யொளிர்கின்றன. அத்தேவாரங்களுக்குப் பின்னரேற்பட்ட இசைத் தமிழிலக்கிய நூல்களில் வடமொழிபிராகவமைப்புந் தாளவமைப்புங் காணப் படுகின்றன அதன் மேல் இற்றை நாள்களிலுலவுறும் இலக்கியமும், இலக்கணமுமாகிய இசைத்தமிழ் நூல்களெல்லாம் ' மேளகர்த்தா' என்னும வட நூலைத் தழுவியே அமைக்கப்பட்டிருக்கின்றன. சிற்சில நூல்கள் நாட்டியத்திற்குரிய வடமொழிப் பரத தாளங்களிலும் ஏற்பட்டிருக்கின்றன. இசைத் தமிழின்கண் ஏற்பட்ட வடமொழிக்கலப்பு இவ்வளவுதான்.

பழைய இசைத்தமிழ் நூல்களுட் பெரும்பாலன இறந்துவிட்டன. இரண்டொன்று மட்டில் ஆங்காங்கு காணப்படுகின்றன. அவைதாமுஞ் சின்னாட்களில் வெளியிடப் படாவிடின் அழிந்துபடினும் படும். இவ்வாறு இசைத்தமிழ் நூல்கட்குக் குறைவு நேரக் காரணம் யாது? இடைக் காலத்திலிருந்த மக்களுக்குள் ஒழுக்கச் சீர்திருத்தஞ் செய்யப் புகுந்த போலியா* சில்லோரால் விளைந்த கேடாமிது. இவ்வுலக வாழ்க்கைக்கு அற‌ம் பொருளின்பமென்ற மூன்றுஞ் சிறந்தனவாமென்னு முண்மையை நன்குணராது, அறமே யாவரும் பின்பற்றுதற்குரியது, மற்று இன்பம் கைவிடுதற்குரியது' என்று எண்ணி, இசையினால் இன்பம் மிகுதலின் அதனையுங் கடிய வேண்டுமென்று புகுந்து, ஆரியருஞ் சைனரும் ஒருங்கு சேர்ந்து இசைத் தமிழைப் பெரிதும் அலைத்துத் தொலைக்க முயன்றனர். [இசை நாடகங் காமத்தை விளைக்குமென் றுரைத்தார் உரையாசிரியர்களுள் தலைநின்ற நச்சினார்க்கினியரும்] அம்முயற்சிகளில் அநேக நூல்கள், அந்தோ! அழிந்துபோயின. இப்போழ்து எஞ்சியிருப்பன மிகச்சிலவே. இவற்றை இறைவன் பாதுகாத்த‌ருள்க. மேற்கூறிய மருட்கையுணர்ச்சி இக்காலத்திலும் பலரிடங் குடி கொண்டிருக்கின்றது. இஃதென்னே!

நாடகத் தமிழென்பது, கையில் நூலெடுத்துப் படித்தற்குரிய அவகாச மில்லாத வேலைக்காரர்களுக்கும், படிக்கத் தெரியாதவர்களுக்கும், நல்லறிவு புகட்டும் நோக்கத்தோடு வகுக்கப்பட்டது; அது கேட்போர்க்குங் காண்போர்க்கும் இன்பம் பயவாவிடின், சாமானிய சனங்கள் அதை விரும்பிச் செல்லாராதலின் அஃது இன்பச் சுவையோ டியல்வதாயிற்று. உலகத்தினியல்பினை உள்ளதை யுள்ளவாறே புனைந்து காட்டுவது நாடகத் தமிழேயன்றி வேறில்லை. இயற்றமிழும் இசைத் தமிழுஞ் சேர்ந்தவழியே நாடகத் தமிழ் பிறந்ததெனிலும் நாடகத் தமிழிற்கு வேறு தனிப் பெருஞ் சிறப்புளது. முன்னையன இரண்டும் கேள்வி யின்பம் மட்டிலே பயப்பனவாய் நிற்கின்றன. இவ்விரண்ட னடியாகப் பிறந்த நாடகத் த‌மிழோ கேள்வி யின்பம் பயப்பதேய‌ன்றிக் காட்சியின்பமும் உடன்பயக்கின்றது. இச்சிறப்புப் பற்றியே பிற நாடுகளிலுள்ள பிற பாஷைப் புலவர்கள் நாடகங்களை மிக்க மேன்மை யுடையனவாக மதிக்கின்றனர்.

இத்துணைப் பெருமை வாய்ந்த நாடகத் தமிழின் தோற்றமென்னை? "தமிழ் நாடகம் முதலிலுண்டானது மதவிடயமாகவே யென்பது துணியப்படும்.அது கடவுளர் திருவிழாக் காலங்களில் ஆடல்பாடல்க ளிரண்டையுஞ் சேர நிகழ்த்துவதனின்றும் உண்டாயிற்று. சில காலத்தின் பின்னர் கதை நடையான மனப்பாடங்களும் உடன்கூடின; அதன்மேல் முதலிற் பாடலாயுள்ள‌ சம்பாஷணைகளும் பின்னர் வசனமாயுள்ள சம்பாஷணைகளும் அவற்றுடன் சேர்க்கப்பட்டன. பிற்பாடு நாடகத்தமிழ் 'வேத்தியல், பொதுவியல்' என்ற இருபிரிவினதாகி அரசர்களாலும் ஏனையோராலும் ஆதரித்து வளர்க்கப் பட்டது. கி.மு. மூன்றா நூற்றாண்டினாதல் அல்லாக்கால் அதனிலுஞ் சற்று முற்காலத்தினாதல் நாடகத்தமிழ் உயர்நிலை யுற்றிருந்திருத்தல் வேண்டும். நாமுணர்ந்த பழமையான நாடகத்தமிழ்நூல்கள் அனைத்தும் அக்காலத்தே நின்று நிலவினவாதலினென்க. ஆகவே அது குற்றங்குறைவு இல்லாது உண்டானதொரு தொழிலென்றே ஆதியின் மதிக்கப்பட்டது" என்று 'நாடகவிய'லின் முகவுரைக்கட் கூறிய கூற்றையுங் காண்க. 

இவ்வாறு தோன்றிவளர்ந்த நாடகத் தமிழ் வீழ் நிலையடையப் புகுந்தது. அதற்குற்ற காரணம் யாது? ஒழுக்கநிலை வகுக்கப்புகுந்த ஆரியருஞ்சைனரும் நாடகக்காட்சியாற் காமமே அறிவினும் மிகப் பெருகுகின்ற தென்ற‌ போலிக் கொள்கையுடைய‌ராய்த் தமது நூல்களிற் கடியப்படுபவற்றுள் நாடகத்தையுஞ் சேர்த்துக் கூறினர். அக்காலத்திருந்த அரசர்களுக்குந் துர்ப்போதனை செய்து நாடகத் தமிழைத் தலையெழவொட்டாது அடக்கிவந்தனர்.ஔவையாருந் திருவள்ளுவரும் ஒருங்கே புகழ்ந்த இல்லற வாழ்க்கையையே தீவினையச் சத்தின்பாற் படுத்துக் கூறுஞ் சைனர்கள் நாடகத் தமிழைக் கடிந்தது ஓராச்சரிய மன்று. இவ்வளவு கட்டுப்பாட்டுக்கிடையில் நாடகத் த‌மிழ் எவ்வாறு தலையெடுத்து ஓங்கப்போகின்றது? ஆதலின் நாளாவட்டத்தில் அது சிறிது சிறிதாக வீழ்ந்துகொண்டே வாராநின்றது. அதன்மேல் இயற்றமிழ் காப்பியங்கள் நாடெங்கும் மலிந்து சிறந்து நாடகத்தமிழை வளரவொட்டாது தடுப்பனவாயின.

இவ்வாறு நாடகத்திற்கு நாற்புறமும் தடைகள் அமைக்கப்பட்டமையின் அஃது அழிநிலையடையத் தலைப்பட்டது. பண்டிதராயினார் கடிந்து நாடகத் தமிழைக் கைவிடவே, அது பாமரர் கையக‌ப்பட்டு இழிவடைந்து தெருக்கூத்தளவிலே நிற்கின்றது. அக்காலத்துச் சங்கப் புலவர்கள் செய்த 'பரதம்' 'அகத்தியம்' 'முறுவல்' 'சயந்தம்' 'குணநூல்' 'செயிற்றியம்' 'மதிவாணர் நாடகத்தமிழ்நூல்''கூத்த நூல்' 'நூல்' என்ற நாடகத்தமிழ் நூல்களெல்லாம் யாண்டுப்போயொளித்தன? 'சிலப்பதிகாரம்' என்னும் நாடகக் காப்பியமட்டிலே தப்பித் தவறி வெளியேறிவிட்டது. அதனை வெளிப்படுத்திய பண்டித சிகாமணி சாமிநாதையர்க்குத் தமிழுலகஞ் செய்யக்கடவ கைம்மாறென்னே!

இனிப் பரத சாஸ்திரமும் காமக்கணிகையர் வயப்பட்டுத் தாழ்வடைந்து நிற்கின்றது. அதனையும் அறவொழிக்கப் புகுந்து முழங்குகின்றனர் சிலர்.எனினும் கி.பி. பதினேழா நூற்றாண்டினிறுதிதொட்டுக் கூத்து நூல்கள் சில,வேர‌ற்று வீழ்ந்த நாடகத் தமிழினின்றும் கிளைப்பனவாயின. இடையிடையே கவிகூற்றுமேவி, இழிசினர் நடக்கு மியல்பினவாகிக், கூத்தும் பாட்டுங்கொண்டு நடப்பனவெல்லாம் கூத்து நூல்களாம். சீர்காழி அருணாசலக் கவிராயர் செய்த 'இராமநாடக'மும் குமரகுருபரசுவாமிகள் செய்த 'மீ*னாஷியம்மை குற'மும், திரிகூடராசப்பகவிராயர் செய்த 'குற்றாலக் குறவஞ்சி'யும், இக்கூத்து நூலின் பாற் படுவனவாம். 'முக்கூடற்பள்ளு' 'பறாளை விநாயகர் பள்ளு' முதலியனவுங் கூத்து நூல்களேயாம்.இவையெல்லாம் இயற்றமிழ்ப் புலைமை சான்ற பாவல‌ர் இயற்றியனவாம். 'சுத்தாநந்த‌ப் பிரகாசம்' என்றதோர் பரதநூல் இடைக்காலத்தின் தொடக்கத்தி லேற்பட்டுள்ளது வெளிப்படாமலிருக்கின்றது. பின்னர் கி.பி பதினெட்டாநூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த அரபத்தநாவலர் என்பார் 'பரதசாஸ்திரம்' என்றதோர் நூல் செய்தனர்.

நாடகசாலையை உலகத்தின் பிரதிவிம்ப மென்றெண்ணி ஆங்கு நடித்துக் காட்டப் படுவவற்றுள் தமக்குவேண்டிய நற்பகுதிகளைமட்டி வேற்றுப் போவதே நன்மக்க ளியல்பு. உழைத்த உள்ளத்திற்கு இன்பந் தந்து ஊக்கம் விளைவிப்பன நாடகங்களே. சிற்சிலர் அறிவுதிரிந்து வேறுபட்டாராயின் அஃது அவரது இயற்கைத் தன்மைகளு ளொன்றாமே யன்றி நாடகத்தால் விளைந்த செயற்கைத் தன்மையன்றாம். தவறுள்ள விடத்திலன்றே திருத்தம் வேண்டும்? புண்ணுள்ள விடத்திலன்றே சிகிச்சை செய்யப்படும்? மக்கள் சிலர் தமது தீக்குணத்தால், நாடகசாலை சென்றும் நாடகங்கள் படித்தும் கெட்டாராக அதனைக் காகதாலியமாய் நாடகத்தில் தலையிலேற்றி, நாடகத்தமிழே தீதென்று கடிதல் எவ்வாறு ஏற்புடையதையாகும்? காரணமொரு புறத்திலிருப்ப, அதனைக்கண்டு பரிகரிக்கமாட்டாது மயங்கிக் காரணமல்லாதவற்றைக் காரணமென்று கூறுதல் தருக்க நூற் குற்றமன்றோ?

"நீயுந் தவறில்லை நின்னைப் புறக்கடைப்
போதர விட்ட *துமருந் தவறிலர்
நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
பறைபறைந் தல்லது செல்லற்க வென்னா
விறையே தவறுடை யான்"

என்று ' குறிஞ்சிக்கவி' யிற் கூறினதை யொக்கும் இவர் செயல்.

இது நிற்க, சென்ற சில்லாண்டுகளாக, நாடகத்தமிழ் அறிவுடையோர் சிலரது உதவிகொண்டு தலையெடுத்து வளரா நின்றது. இதற்கு வடமொழி நாடகப்பயிற்சியும் ஆங்கிலநாடகப் பயிற்சியும் மிகப் பயன்படுவனவாயின. இவ்வாறு புதுவழியிற் புனையப்பட்டு வெளிப்படும் நாடகங்கள் இன்னும் அதிகரித்தல் வேண்டும். இவற்றை யொழுங்கு படுத்துதல் கருதி, யாம் 'நாடகவியல்' என்றோர் இலக்கண நூல் செய்திருக்கின்றனம்.

இனிச்சிலர், 'நாடகம்' என்ற சொல் வடசொல்லாதல் கண்டு, ஆரியரொடு கலந்த பின்னரே தமிழர்களிடத்திற் நாடகத்தமிழ் ஏற்பட்டிருத்தல் வேண்டுமென்கின்றனர். இக்கூற்று வடமொழியில் 'வாய்' என்பதற்குத் தக்க சொல்லில்லாமையால் வடமொழியாளர்க்கு வாயில்லை யென்பது போலும். அஃதன்றியும் 'கூத்து' என்ற சொல்லே ஆதியில் தமிழர்கள் வழங்கியது; கூத்தென்பது பொது; நாடகமென்பது சிறப்பு. கூத்துப் பலவற்றுள், நாடகமென்பது கதை தழுவிவரும் கூத்து, எனவே நாடகமென்ற சொல்வழக்கின் முன்னரே, நாடகத் தொழில் வழக்கும், நாடக நூல் வழக்குந் தமிழர்மாட்டுண்டென்பது பெற்றாம்.

மூவகைப் பாகுபாடு முற்றிற்று