விருந்திட்டவள் விதவையானாள்

bookmark

கணவனை மகிழ்விக்கும் பணிவிடைகளிலும், கடமைகளிலும் ஒன்றாகும், அவனுக்குப் பிடிக்கும் கறி வகைகளை அறிந்து பின் சமையல் செய்து பக்கத்தில் இருந்து பரிமாற கணவன்ருசித்து உண்டு திருப்தியாவதை மனைவி கண்டு களிப்பதாகும். மேற்கூறிய வகையைச் சேர்ந்த ஒரு மனைவி கணவனுக்குச் சமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டி நெல் வருவிப்பது முதல் அதை அரிசியாக்கிப் பின் சாதமாக்கி வைப்பதுடன் அதற்கேற்ற கறிவகைகளையும் வகை வகையாச் செய்து ஊறுகாய்கள் பல விதம் தயார்செய்து பின் கணவனைப் பல் விளக்குவதிலிருந்து வாய் கொப்பளிப்பது முதல் விசேஷ கவனிப்புச் செய்து சிறந்த வாழைகளிலிருந்து தலைவாழையிலை கொண்டு வரச் செய்து இலைமேல் நீர் தெளிப்பதற்கு பதிலாக இளநீரைத் தெளித்து சோற்றைக் கொஞ்சம் வைத்துச் சத்து நிறைந்த காய்கறி வகைகளை அதிகம் வைத்து தன் கணவன் பசியாறி உண்ட களைப்புத் தீர, திண்ணையிலே மெத்தையிலே அமர்ந்து சிரமபரிகாரம் செய்து கொண்ட தன் கணவம் இறந்ததினால் வெறிச் சென்று கிடக்கும் மெத்தையையும் பார்வையில்லாமல் இருக்கும் திண்ணையயும் கண்டு பழைய நினைவுகள் வரப் பெற்று அழுது கொண்டே அவள் கணவனுக்குச் செய்த சேவைகளை வாய் விட்டுக் கூறி அரற்றுகிறாள்.

நெல்லாலே நெல் லெடுப்பேன்
சிறு சம்பா நெல்லெடுப்பேன்
அண்ணடுச்ச நெல்லுயிண்ணா
அவிச லேறிப் போகுமிண்ணு
நேத்தடிச்ச நெல்லுயிண்ணா
நெஞ்சடச்சிப் போகு மிண்ணு
தானா பழுத்த நெல்லே
தருவிச்சேன் கப்பலிலே
உரலுலே குத்துனா
ஒண்ணு ரண்டா போகுமிண்ணு
நெகத் தாலே அரிசி பண்ணி
வெங்கலத்தில் தண்ணி யெடுத்தா
வெங்காரம் அடிக்கு மிண்ணு
புதுப்பானை தண்ணி யெடுத்தா
பொகை யேறிப் போகுமிண்ணு
ஆத்துத் தண்ணி கொண்டு வந்து
ஆக்கினேன் சாதங்கறி
நாகூரு குச் சொடிச்சி
நல்ல வாயி பல் தொலக்கி
தீத்தமலை தீத்தங் கொண்டு
திரு வாயெ கொப்பளிச்சி 
பொன்னு கரண்டியிலே
பொறிச்சேன் நூறு வகை
தங்கக் கரண்டி
தாளிச்சேன் நூறு வகை
உண் ணொரு கரண்டியிலே
ஊறுகா நூறு வகை
வடக்க ரண்டு ஆளனுப்பி
வாளயெலை கொண்டு வந்தேன்
தெற்கே ரெண்டு ஆளனுப்பி
தெய்யலையும் கொண்டு வந்தேன்
எலமேல எலை பதிச்சு
எளநீரை தாந் தெளிச்சு
சோறு யிண்ணா கொஞ்சம் வைப்பேன்
சுத்து கறி ரம்ப வப்பேன்
சாத மிண்ணா கொஞ்ச வப்பேன்
சமைச்ச கறி ரம்ப வைப்பேன்
சாப்பிட்டுப் பசியாறி
சன்னலிலே கை கழுவி
சாந்திருக்கும் திண்ணையிலே-நீங்க
சாந்திருந்த மெத்தை யெல்லாம்
சலிப்படைஞ்சி கிடப்ப தென்ன

வட்டார வழக்கு: அவிச லேறி-தரம் குறைந்து ; வெங்காரம்-நெடி ; உண்ணொரு-இன்னொரு.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-------------