வீரவாகுவின் சீற்றம்

bookmark

வடிவேலின் பின்னே சென்ற வீரவாகு அறுமுகப் பெருமானது திருவடியையே தியானித்துக்கொண்டு உவர்க் கடலின் இடையே வீர மகேந்திரம் விளங்கக் கண்டார். "அறப் போர் புரியும் ஆண்மையின்றி அஞ்சிச் சென்று, ஆகாயத்தில் மறைந்து நின்று, வஞ்சனை செய்து மாயப் படையால் நம்மை வென்று பிழைத்திருக்கும் பானு கோபனைக் கொன்றாலன்றி எம்பெருமான் சேவடியைக் கானச் செல்வதில்லை. இந் நகரை இன்னே அழிப்பேன்; சூரன் மைந்தன் வந்து எதிர்த்தால் அவனையும் ஒழிப்பேன். அவ்விதம் செய்யாவிடில் இவ் வுயிர்வாழ்க்கை வேண்டேன்; நான் பிறந்தவனும் அல்லேன் வில்லொடு நானும் தீயில் விழுவேன்” என்று சபதம் செய்தார்.

அவ் வாசகத்தைக் கேட்ட பூதப் படைவீரர் வியந்தனர்; கிளர்ந்து எழுந்தனர். நொடிப் பொழுதில் மகேந்திர நகரின் மேற்றிசை வாயிலை அடைந்தார், வீரவாகு. பெருங்கடல் உடைந்தாற் போலப் பூதகணம் ஆர்த்தது. நெருங்கி நின்ற மாட மாளிகைகளை யெல்லாம் நெடிய பூதர்கள் தம் காலால் இடித்துத் தகர்த்தார்கள்; ஆன்றோர் சாபத்தால் அழிந்தாற் போன்று அவை வீழ்த்தப்பட்டன. அப்போது வீரவாகு தீப்படையையும் காற்றுப் படையையும் எடுத்து வில்லிற்பூட்டி அந் நகரின்மீது விடுத்தார். அப் படைக்கலம் இரண்டும் ஒன்றாய்க் கலந்து ஊழிக்காலம் போல் நகரமெங்கும் விரிந்து வளைந்தன. நெருப்புக் கண்ணராகிய அசுரரும் அஞ்சியோடினர்.

இரணியன் கூறிய கட்டுரை 
அது கண்ட சூரன், "இப்பொழுது நானே போர் செய்து பூத கணங்களைக் கொல்வேன்; வீரர் அனைவரையும் அழிப்பேன்; சிவகுமாரனையும் வெல்வேன்; வருக; தேர் தருக" என்றான். அறிவிழந்த மன்னன் இவ்வாறு தன் தூதரை நோக்கிக் கூறிய மொழிகளைக் கேட்டான், அவன் பெற்ற மைந்தருள் ஒருவனாகிய இரணியன், அவன் ஆயிரம் வேதங்களை உணர்ந்தவன்; செவிச் செல்வம் வாய்ந்தவன்; அறத்தையும் முறையையும் அறிந்தவன்; எனினும் மாயமும் வஞ்சமும் குலவித்தையாகக் கற்றவன்; கொடிய அசுரரது திறமையும் பெற்றவன்; பாதலத்தில் வசிக்கும் அரக்கர்மீது பாய்ந்து வென்று மீண்டவன்; வலிய தலைகள் மூன்றுடையவன். அவன் தந்தையாகிய சூரன் அடிகளில் விழுந்து வணங்கி, "ஐயனே! நாம் செய்யத் தக்கதொரு செயல் உண்டு; அதனைச் சொல்வேன்” என அன்புடன் கூறுவானாயினான்.

"அறுமுகப் பெருமானாகிய பரமனைச் சிறுவன் என்று இகழல் ஆகாது; உருவிலே சிறியவன். ஆயினும் செயற்கரிய செய்யும் பெரியவன் முருகன். ஊழிக்காலத்தில் ஈசனது புன்னகையிலே தோன்றும் சிறு பொறியன்றோ உலகையெல்லாம் அழிப்பது? . வாசவன் துயரமும், பிரமன் துயரமும், கேசவன் துயரமும் நீக்கி அழிவற்ற செல்வத்தை அன்னார்க்கு அருளும் வண்ணம் ஈசனே பாலன் வடிவம் கொண்டு அறுமுகனாய்த் தோன்றியுள்ளார். குமரவேளின் கையிலமைந்த வேற்படை தாரகாசுரனைக் கொன்றது; அவன் மாய மலையைத் தகர்த்தது; நன்னீர்க் கடலுள் நாம் தள்ளிய சேனையை மீட்டது; இத்தகைய ஒப்பற்ற வடிவேலைத் தொழுது, வேலுடைய பாலனைப் பணிவதை விட்டு, அமர் புரியத் துணிதல் அறிவுடையேர் செயலாகுமோ? இன்று வந்து போர் புரிந்தான், வீரனாகிய வீரவாகு, என் தமையன் பானுகோபன் அவன் முன்னே நிற்கமாட்டாமல் தப்பி மறைந்தான்; மாயப்படையை விட்டு, மாற்றார் அறிவை மயக்கிக் கடலிலே தள்ளினான். அன்னார் அனைவரும் அறுமுகன் அருளால் மீண்டும் வந்தார்கள். தலைவனான வீரவணகு வீரமகேந்திரத்தை அழிக்கத் தலைப்பட்டான் என்றால் அவனை யார் தடுக்க வல்லார்? கருணை கொண்ட வள்ளல், முருகவேள், அவர் அளவிறந்த சீற்றம் கொள்வதன் முன்னே வானவரைச் சிறையினின்றும் விடுவித்துச் சுற்றத்தோடு நாமும் விரைந்து சென்று, "குற்றங்களைப் பொறுத்தருள்க" என்ற பணித்து வேண்டினால், அவர் நாம் செய்த தீமையெல்லாம் பொறுப்பார்; அருள் புரிவார்; அழிவற்ற வரங்களை அளிப்பார்; பூதப்படையோடு திரும்பிச் செல்வார்; அதனால் நாமும் பிழைப்போம்; உன் முன்னே இதனைத் துணிந்து கூறினேன்; இது முடிவாக நாம் கொள்ளத் தக்கது" என்று கூறினான், இரணியன்.

இரணியன் பொருது மறைதல் 
இவ்வாறு இரணியன் பரிவுடன் சொல்லியவற்றைக் கேட்டான், சூரன். அவன் வாயினின்றும் புகைப் படலம் எழுந்து பரந்தது. சீற்றக் கனல் பொங்கிற்று; உடலம் வியர்த்தது: பெரு மூச்சுப் பிறந்தது. வாயிதழ் துடித்தது; கண் சிவந்தது. மனம் எரிந்து பதைத்து, இடிபோல் இரு கரங்களையும் கொட்டி இரணியனை நோக்கி, "பேதை மைந்த! மாயவனும், இந்திரனும், ஏனைய வானவரும், அண்டத்தில் உள்ளார் அனைவரும், எல்லார்க்கும் முதல்வனாகிய ஈசன் தானும் என்னை எதிர்த்தால் தோல்வியடைவரேயன்றி வெற்றி பெறுவதுண்டா? யான் பெற்ற வரங்களை அறியாயோ? நீ ஆண்மை இழந்தாய்; நம் குலமுறை பிழைத்தாய், அரசின் பெருமை துறந்தாய்; மாற்றாரைக் கண்டு அஞ்சினாய்; ஆதலால், இவ்வாறு பேசினாய்; இன்னொரு மொழி பேசினால் உன்னை இன்றே எமபுரத்தில் ஏற்றுவேன்” எனக் கொதித்துக் கூறினான், சூரன்.

அது கேட்ட மைந்தன், இக் கொடியவன் என்னுரையைக் கொண்டானல்லன்; இவன் மாண்டுபோதல் திண்ணம்; இவ்வுலகில் விதியின் திறத்தினை யாவரே வெல்ல வல்லார்? வெஞ்சினம் கொண்டு போர் புரிந்து விரைவில் விழுந்துபடுவான் இவன்; யான் அதற்கு முன் இறத்தலே நன்று" எனத் துணிந்து, அவன் அடிகளில் விழுந்து வணங்கி, "ஐயனே! நீ இறுதியாகச் சொல்லிய சபதத்தை நானே முடிப்பேன்" என்றான்.

அப்போது சூரன், மைந்தனைத் தழுவினான்; நன்று நன்று என்று மெச்சினான்; "பெருஞ் சேனையோடு போர்க்களம் செல்க” எனப் பணித்தான். இரணியனும் விடை பெற்று எழுந்து தன் மாளிகை அடைந்தான். அறநெறியில் நின்ற அவ் வீரனது நால்வகைப் படையும் எழுந்தது; உள்ளத்தில் துயரமும் , உயர்ந்தெழுந்தது; ஆண்மை நிறைந்த பூதங்கள் ஆரவாரம் செய்து நின்ற அமர்க்களம் புகுந்தான். அவனைக் கண்டு வானவர் நடுங்கினர். இரணியனோடு எழுந்து வந்த சேனைப் பெருங்கடலைக் கண்டார் வீரவாகு; சீற்றம் உற்றார்; வெஞ்சிலையை வளைத்தார்; நல்லறம் ஆனந்த நடனம் புரிந்தது. அவர் விடுத்த அம்புகள், இரணியன் எடுத்த அம்பையும் வில்லையும் ஒடித்தன; அம்பறாத் தூணியை அழித்தன; தேரையும் பாகனையும் தீர்த்தன; அசுரன் மார்பைப் பலவிடங்களில் துளைத்தன. அந் நிலையில் இரணியன், "எனக்கு அந்தம் நேரும் வேளை வந்தது; ஆயினும் என்னோடு நிற்குமோ? என் தந்தையும் இறந்து தீர்வான். அவன் இறக்கும் பொழுது இறுதிக்கடன் செய்வதற்கு யாரும் எஞ்சி நிற்க மாட்டார். சுற்றத்தார் இற்று ஒழிந்தார். மற்றுமுள்ள உறவினரும் இனி இறப்பார். இஃது உண்மை. பிள்ளையைப் பெறுவதும், அன்புடன் போற்றி வளர்ப்பதும், தந்தைக்கு முறைப்படி அந்திக் கடன் செய்வதற்கே யன்றோ? ஆதலால், என்னுயிரைக் காத்தலே கடன்" எனக் கருதி, விரைவில் விண்ணிலே மறைந்தான்; ஒரு மந்திரத்தை மனத்திலே நினைத்தான். அப்போது அவன் உருவம் அருவ மாயிற்று. யாரும் அறியாமல் மீன் வடிவம் கொண்டு கடலினுள்ளே மறைந்தான். அந் நிலையில் வெற்றிச் சங்கம் முழக்கினார், வீரவாகு.

எரிமுகன் போர் புரிந்து இறத்தல் 
எரிமுகன் என்பவன் சூரனுடைய மக்களுள் ஒருவன்; அவனைக் கருவிற் கொண்ட தாயின் உடல் எரிவுற்றது. அப்போது மாயவள் அவ்விடம் போந்து, "இக் கருவில் இருப்பவன் எரிமுகன்” என்றாள். அவன் பிறந்தவுடன் எரிமுகன் என்னும் பெயர் பெற்றான். அவன் தெய்வப்படை தாங்கிய கையன், ஐவர்க்குரிங் இறத்தல் ஆற்றல் உடையவன்; கரிய வஞ்சமும் மாயையும் வல்லவன்; எப் படையையும் அழிக்கும் வீரன், அவன் சூரனிட்ம் சென்று, "ஐயனே! வலிமை சான்ற வீரவாகுவையும், தலைவரையும்,பூதகணங்களையும் நானே வென்று வருவேன்; விடை தருக" என்று வேண்டினான். "நன்று கூறினாய்,வென்று வருக" என்றான் சூரன். குன்று போன்ற தோள்வலி படைத்த எரிமூகன் தந்தையைத் தொழுதான்; சேனையோடு செருக்குற்று எழுந்தான்; "மாற்றாரை ஒரு நாழிகையில் அழிப்பேன்" என்று போர்க்களம் சென்றான். அவன் விளைத்த வீரத்தைக் கண்டு பூதர்கள் வெருவி ஓடினர். "அஞ்சாதீர்"என்று கையமர்த்திக்கொண்டு நொடிப்பொழுதில் தேர்மீது ஏறி வந்தார், வீரவாகு. ஆயிரம் அம்புகளை யாவரும் வியக்கும் வகையில் எரிமுகன்மீது ஒருங்கே விடுத்தார்; அவன் தேரையும் குதிரையையும் வில்லையும் சிதைத்தார்.

இளமையிலேயே காளிதேவியை போற்றி வழிபட்டு ஒரு வரம் பெற்றிருந்தான், எரிமுகன்."போர்க்களத்தில் மாற்றாருடன் பொருது இளைத்த வேளையில் நீ படைத் துணையாக வர வேண்டும்” என்று கேட்டதற்கு இசைந்து வரம் தந்த மகேந்திர நகர்க் காளியை இப்போது தியானித்தான், அவ் வீரன். கருழேகம் போன்ற நிறமும், சூலப்படை தாங்கிய தோளும், குலிங்க வேனியும், கொலைக் கண்ணும் உடைய காளி அமர்க்களத்திலே தோன்றினாள்; எரிமுகன் நிலைமையை நோக்கினாள். "மாற்றார் உயிரை வாங்குவேன்; மயங்காதே" என்று அபயம் அளித்தாள் பத்திரகாளியின் அருள் பெற்ற அக் காளி பூதகணங்களையும் மற்றைழோரையும் அழித்திடும் வண்ணம் ஒரு சூலப்படையை வீசினாள். அதன் வன்மையைக் கண்ட வீரவாகு, "இப் படை பூதகணங்களின் உயிரைப் போக்கிவிடும்; ஆதலால் தடுத்து முரித்திடல் வேண்டும்" என்று கருதிப் பதினான்கு வலிய பாணங்களைக் கணப்பொழுதில் ஏவினார். அதைக் கண்டாள் காளி. விட்ட சூலத்தை இவன் அறுத்தான்; என் ஆற்றல் அறியாது இன்னும் எதிரே நிற்கின்றான். இவன் உயிரை உண்பேன்" என்று எழுந்தாள். அப்பொழுது இடிபோல் அதட்டினார், வீரவாகு காளியின் எட்டுக் கைகளையும் ஒரு கையால் வளைத்துப் பிடித்தர், மற்றொரு கையால் அவள் நெஞ்சில் ஓங்கி அறைந்தார். அவள் கீழே விழுந்து மயக்கமுற்றாள். 

மயக்கம் தெளிந்தவுடன் "அந்தோ! என்ன அறிவற்ற செயல் செய்தேன்! அறுமுகப் பெருமான் ஆணையால் போர் செய்ய வந்த வீரவாகுவை வெல்ல்லாகுமோ? இங்கு வந்தது பேதைமை" என்று கூறி, வீரவாகுவிடம் விடை பெற்றுச் சிங்கத்தின்மீதேறிக் கொடிய படைகளோடு வந்த வழியே போயினாள். காளி சென்றதைக் கண்டான், எரிமுகன் சீற்றம் கொண்டான்; வீறுற்று எழுந்தான்; மேகத்தினிடையே அதிரும் இடிபோல் முழங்கினான். "முன்னே இந் நகரில் வந்து, என் தம்பியின் உயிர் கவர்ந்து சென்ற தூதனாகிய வீரவாகுவின் வலிமையைச் சிதைத்து, அவனுயிரைக் காலனுக்கு விருந்தளிப்பேன். அப்படிச் செய்யாமல் மன்னன் முன்னே செல்வதில்லை" என்று வஞ்சினம் கூறினான். கையில் வில்லெடுத்துப் போர் தொடுத்தான். அவ்வில் ஒடிந்தது. வேறொரு வில்லை வளைத்து, பற்களைக் கடித்து, வீரமொழி பேசி, பிரமாஸ்திரத்தை விடுத்தான். மாற்றான் ஏவிய படைக்கலத்தைக் கண்டார்; வீரவாகு. இப் பிரமாஸ்திரத்திற்கு எதிராக நானும் ஒரு பிரமாஸ்திரத்தை விட்டாற் பயனில்லை என்று எண்ணி, வீரபத்திரப் படையை எடுத்து, மனத் தாற் பூசனை செய்து வேகமாக விடுத்தார். அது பிரமாஸ்திரத்தை அறுத்தெறிந்து, தடையின்றிச் சென்று, எரிமுகாசுரன் தலைகளைப் பறித்து, அவன் உயிரைக் கவர்ந்து மின்னலைப்போல் வீரவாகு விடம் மீண்டது.

மூவாயிரவர் பொருது வீழ்தல் 
போர்க்களத்தின் ஒருசார் நின்று இவற்றையெல்லாம் கண்ட ஒற்றர்கள் சூரனிடம் சென்று எரிமுகன் போர் செய்து இறந்த செய்தியை அறிவித்தார்கள். அப்பொழுது சூரனது மைந்தர் மூவாயிரவரும் நிகழ்ந்ததை அறிந்து, மன்னன் மாளிகையை அடைந்தனர். சூரனைத் தொழுது நின்று, "எம் ஐயனே! எரிமுகன் ஒருவனுக்காக இரங்கலாகுமோ? நாங்கள் மூவாயிரவர் இருக்கின்றோம். இரணியனும் உயிரோடு இருக்கின்றான்; பகலவனைச் சிறைப்படுத்திய பானுகோபன் இருக்கின்றான்; உனக்கு என்ன குறை? பல பல சொல்வதிற் பயன் எனன்? எம்மைப் போர் செய்ய ஏவினால், பூதரையும் வீரரையும் கந்தனையும் பிறரையும் ஒரு கணப் பொழுதில் வென்று வருவோம்” என்று கூறினர். அம் மொழி கேட்ட சூரன் துன்பம் துறந்தான்; "நன்று! மைந்தர்காள், போர் புரியச் செல்க” என்றான். மூவாயிரவரும் தந்தையை வணங்கி விடை பெற்றுச் சென்றனர். போர்க்களம் புகுந்து, தாமரைக் குளத்தைக் கலக்கி, மலர்களைச் சிதைக்கும் மதயானைபோல், மாற்றாரைக் கலக்கினர், மூவாயிரவரும்.

அவர் வில்லாண்மைக்கு ஆற்றாது அவதியுற்ற பூதரைக் கண்டு, அவர்க்குதவியாக நூறாயிரம் வீரருள் ஓராயிரவர் நெருப் பெனச் சீற்றமுற்று எழுந்தனர்; போர் முனையிற் புகுந்தனர். கொடுந்தொழில் புரியும் அசுரரோடு அன்னார் செய்த போரில் விசையன் ஒருவனே எஞ்சி நின்றான்; ஏனையோர் ஆண்மை யிழந்து அழிந்தனர்.

தன்னைச் சேர்ந்த வீரர் அனைவரும் அழிந்தபோது விசையன் சீறினான்; "சூரன் மைந்தர்களாகிய மூவாயிரம் பேரையும் காலன் நகருக்கு அனுப்புவேன்” என்று கடுஞ் சூள் உரைத்தான். வில்லைக் கையில் எடுத்து வளைத்தான்; சரமாரி பொழிந்தான் அவன் விடுத்த கணைகள் அசுர வீரரின் கையையும் தலையையும் தாளையும் தோளையும் அறுத்தன. ஆயினும், அறுந்த உறுப்புகள் உடனே பொருந்திக்கொண்டன. முன்போலவே மூவாயிரவரும் நின்றனர். "இஃது அன்னார் தவத்தினால் பெற்ற பேறு" என்று அறிந்தான், விசையன்; அந்நிலையில் அறுமுகப்பெருமானை யன்றி, வேறு யாரும் துணையில்லை என்றுணர்ந்தான்; அவர் திருவடியைத் தியானித்தான்; அன்பினால் உள்ளம் உருகிக் கண்ண்ணீர் சொரிந்தான்.

அன்பர் எண்ணிய வெல்லாம் எண்ணியபடியே விரைந்து வந்து அளிக்கும் புண்ணிய மூர்த்தியாகிய முருகவேள் விண்ணிலே தோன்றினார்; விசையன் கண்ணெதிரே நின்று, "வீரனே, மாற்றார் பெற்றுள்ள வரத்தை நீ அறிந்தா யில்லை; நெடும்போரில் வெற்றி பெறாது நின்றாய்! ஆயினும் மனந்தளராதே!" என்று சொல்லி வைரவ அம்பை எடுத்து விசையனிடம் அளித்தார்; "மாற்றாரை அழிப்பதற்கு இதனை இப்போதே விடுக” எனப் பணித்து மறைந்தார்.

அவ் வம்பினை விட்டான், விசையன். ஒரு நொடிப் பொழுதிற்கு முன்னே அடலேறு போன்ற அசுரர் மூவாயிரவரும் செருக் களத்தில் இறந்து விழுந்தார்கள். அது கண்ட விசையன் முருகப் பெருமானைப் போற்றி நின்றான். முழுமதியைக் கண்ட கடல் போல் பூதகணம் பொங்கி எழுந்து ஆர்த்தது.

தருமகோபனும் தந்திப் போரும் 
மைந்தர் மூவாயிரவரும் முடிந்தார் என்று அறிந்தபோது துன்புற்றான் சூரன். அப்போது அவன் முன்னே தருமகோபன் என்னும் அமைச்சன் சென்று, அடிபணிந்து, "அரசர்க்கரசே! நீ இவ்வாறு துன்புற்று வருந்தினால் மாற்றார் மகிழ்ச்சியடைவர்; அமரர் சிரிப்பர்; அசுரர் நாணுவர்; உனக்கு அளவிறந்த செல்வம் உண்டு; அழிவற்ற ஆயுள் உண்டு; கணக்கிறந்த வீரம் உண்டு; எங்கும் செல்லும் ஆணை யுண்டு; இந்திர ஞாலத் தேருண்டு; இவையெல்லாம் இருக்க, என் ஐயனே! அறிவற்ற தேவரைப் போல் அரற்றல் ஆகுமோ?” என்று தேற்றினான்.

தருமகோபன் சொல்லிய மொழிகளால் சிறிது துன்பம் நீங்கினான், சூரன்: "யானே சென்று மாற்றாரையெல்லாம் வீட்டுவேன்” என்று வீறுற்று எழுந்து நடந்தான். புறப்பட்ட மன்னன் முன்னே குறுக்கிட்டு விழுந்தான், தருமகோபன். "இன்று யானும் சேனையும் சென்று பகைவரை வளைத்துச் சிதைத்து வெற்றி பெற்றிடுவோம். விடை தருக” என வேண்டினான். அந் நிலையில் திரும்பி அரியாசனத்தில் ஏறி அமர்ந்தான், சூரன்; தருமகோபனுக்கு விடை கொடுத்தான்.

அவன் உடனே புறப்பட்டுப் போர்க்கோலம் கொண்டான். பேர் பெற்ற ஒரு வேழத்தின்மீது ஏறினான்; எல்லையற்ற படைக் கலங்களை ஏந்தினான்; அமைச்சர் பலரும் சூழ்ந்து வர இந்திரன் போலச் சென்றான்; போர்க்களத்தில் நின்ற பூதப்படையின் பெருக்கத்தைக் கண்ணுற்றான்; கருத்திலே கவலை மூண்டது. ஆயினும், "இனி எண்ணி மயங்குதல் வீரர்க்கு அழகன்று நடந்தது நடக்கட்டும்" என்று துணிந்து சென்றான். தரும கோபனுடைய படைக்கலங்களால் நூறாயிர வீரர்களும் நலிந்து நொந்தார். அசுரப் படை வீரர் முன்னேறினர். அது கண்டு வீரவாகு சீற்றங்கொண்டு எதிர்த்தார். அப்போது தருமகோபனது யானை பூதப் படைகளைத் துதிக்கையால் வாரியெடுத்து அறைந்தது; உடலும் உயிரும் சிதற அடித்தது; முனைந்து வந்து, வீரவாகுவின் தேரைத் தன் கொம்புகளால் இடித்தது; போர்க்களத்தில் கிடந்த தடி யொன்றை எடுத்துத் தேர்ப்பாகனை அடித்துக் கொன்றது.

அது கண்ட வீரவாகு நெருப்பெனக் கொதித்தார். தரையில் நின்றுகொண்டு யானையைப் பிடித்து மேலே வீசி எறிந்தார். தரையில் விழுந்த யானை நடுங்கித் துடித்து மயங்கிற்று; அதனருகே சென்ற தருமகோபன் கோபம் கொண்டு தண்டாயுதத்தை எடுத்து, வீரவாகுவின்மீது எறிந்தான். அவ்வீரன் அதனைத் தன் கையிலிருந்த வாளால் வெட்டி முரித்தான். பின்னும் ஒரு வச்சிரப் படையை விட்டான், தருமகோபன்; அப் படையை வீரவாகு கையாற் பிடித்துக் கலைமானை அறையும் புலிபோல் அசுரன் மார்பில் அடித்தார். அறைபட்ட தருமகோபன் அடியற்ற மரம்பேழ் படியில் விழுந்தான்; அவனை ஒரு காலால் உதைத்தார் வீரவகு அந் நிலையில் உயிர் துறந்தான் தருமகோபன். அசுரப்படை சிதறி ஓடிற்று.

மயங்கிக் கிடந்த யானை மெல்லத் தெளிந்து எழுந்தது தருமகோபன் இறந்ததை அறிந்தது; துன்பக் கடலைக் கடந்து கரையேறினாற் போன்று இன்பமுற்றது. மாற்றாரும் போற்றுதற் குரிய வீரவாகுவை நோக்கி, "என் அப்பனே! சிறியேன்மீது சீற்றம் கொள்ளாதே; என் கதையைக் கருணை கூர்ந்து கேட்க வேண்டும். யான் திக்கஜங்களுள் ஒருவன், கயவனாகிய இத் தருமகோபனது கடுஞ் சிறையில் அகப்பட்டு நெடுங்காலம் வருந்தினேன். அறநெறியை வெறுக்கும் தருமகோபனை இன்று நீ அழித்தாய், இனி வானவர் கவலை தீர்ந்தார்; யானும் பிழைத்தேன்; சிறுமை ஒழிந்து சிறப்புற்றேன். இதனினும் சிறந்த ஊதியம் எனக்கு வேறுண்டோ? பழவினைப் பாசத்தினின்று நீங்கி முத்தி பெற்றவரை ஒத்தேன்” என்று கூறி வணங்கிற்று. அதன் வரலாற்றைக் கேட்டு வீரவாகு மகிழ்ச்சியுற்றார்; "இப்பொழுது நின் இருப்பிடம் செல்க” என்று விடை கொடுத்தார். ஆகாய வழியே எழுந்தது, யானை, அசுரரைக் கண்டு அஞ்சாது முன்னிருந்த திசையை அடைந்து இன்பமுற்று வாழ்ந்தது.

கட்டுரை கூறிய பானுகோபனைச் சூரன் கடிதல் 
அன்று போர்க்களத்தில் நிகழ்ந்ததை யெல்லாம் தூதுவர் வாயிலாக அறிந்த பானுகோபன், மன்னனது மாளிகையை அடைந்து, துன்பத்திலே ஆழ்ந்திருந்த தந்தையின் அடிகளைத் தன் முடியிற் சூடி, மெய்யன்போடு அவன் முன்னே நின்று ”ஐயனே! மாயை தந்த படைக்கலத்தால் பகைவரை மயக்கினேன்; நன்னிக் கடலில் அவரைத் தள்ளினேன். அதனைத் தேவர் வாயிலாகத் தெரிந்தான், முருகன்; உடனே தன் வேற்படையை விடுத்து அவர் அனைவரையும் மீட்டுக்கொண்டான். இத் தகைய குமரனை வெல்லுதல் நம்மால் இயலுமோ? அவன் ஆற்றலை நேரில் தெரிந்த உனக்கு மேலும் சொல்லுதல் வேண்டுமோ? முந்தை நாள் நீயே வேலேந்திய கந்தனோடு போர் செய்து வருந்தினாய்! படைத் திறன் இழந்தாய் எளியனாய் நின்றாய்! இங்கு ஓடி வந்தாய்; ஆதலால் உய்ந்தாய். தந்தையே! வெம்போர் செய்ய வல்ல வீரர் கிடைத்தால் நான் மகிழ்வேன். இன்று மாற்றா ரோடு போர் புரிய அஞ்சினேன் என்று மனத்திற் கொள்ளதே. மன்னவா! இன்னும் பல்லாண்டு நீ வாழ்ந்திருத்தல் வேண்டும் என்னும் ஆசையாற் பேசினேன்; அச்சத்தால் உரைத்தேன் அல்லேன்; உனக்கு உறுதி பயக்கும் மொழி யொன்று கூறுவேன். சிறையினின்றும் வானவரை விட்டுவிடு. விட்டால் முருகவேள் சீற்றம் தீர்வான்; வந்த வழியே சென்றிடுவான்; அப்பால் எல்லையற்ற காலம் நின் பெருஞ் செல்வமெல்லாம் நிலைத்து நிற்கும்” என்றான்.

அது கேட்ட சூரன் கோபம் தலைக்கொண்டான். "மைந்தா! என்ன பேச்சுப் பேசினாய்? நீ சொன்னவாறு யான் எளியனாய் இன்று வாணவரைச் சிறையினின்றும் விடுவிப்பேனாயின் மன்னர் மன்னன் என்று என்னை யார் மதிப்பார்? மதிப்பு ஒழிவது மட்டுமா? மாயாப் பழியுமன்றோ வந்தடையும்? பிரமன், மால் முதலிய தலைவரும் தேவரும் மதிக்க நான் அரசு வீற்றிருந்து ஆள்கிறேன்; மூவருக்கும் மேலாகிய முழுமுதற் பெருமானிடம் வரம் பெற்றுள்ளேன். இத்தகைய யான் ஆற்றல் அற்றவர் போல் மாற்றாரைச் சிறையினின்று விடுவேனோ? பேரழகும், இளமையும், பெருந்திருவும், வீரமும், சுற்றமும், யாக்கையும்,மற்று யாவையும் நிலையற்ற இவ்வுலகத்தில் புகழ் என்னும் ஒன்றுதானே அழியாது நிற்பது? ஆதலால்,அமர்க்களத்தில் ஆவியை விட்டாலும் விடுவேன்; அமரரைச் சிறையினின்றும் விடமாட்டேன். சாவு வந்தாலும், சஞ்சலம் வந்தாலும் மானம் துறப்பரோ மாண்புடையோர்? சூரன் என்று பெயர் பெற்ற யான், இரு நாள் சிறந்து இலங்கும் இச் செல்வத்தைப் பெரிதாக மதித்து பிடித்த கொள்கையை விடுத்திடுவேனோ? இன்னும் ஓர் ஊழிக்காலம் யான் வாழ்ந்திருப்பினும் ஒரு நாள் இறந்துதானே ஆக வேண்டும். இவ் வுலகிற் பிறந்தவர் எல்லாம் இறந்தே தீர்வர் என்பது திண்ணம். மின்னல்போல் தோன்றி மறையும் இவ் வாழ்க்கையை ஒரு பொருளாக மதித்து, மாயவனையும் வென்ற யான் விண்ணவர்க்கு எளியனாய் இம் மண்ணுலகில் வாழமாட்டேன். பிள்ளாய்! நீ போருக்கு அஞ்சினைபோலும்! உன் மாளிகையிற் போய் உறங்கு! யான் பெற்ற வரத்திற்கு அழிவில்லை. என் பொருட்டு வருந்தாதே; பகைவர்மீது யானே போர் புரியப் போவேன்” என்று கொதித்துப் பேசினான்.

தந்தை சொல்லிய கடுமொழிகளைக் கேட்டான், பானுகோபன், சிந்தை நொந்தான். "என் ஐயனுக்கு உய்யும் வகை இல்லை போலும்! நான் சொல்லிய மொழிகளின் உண்மைழை உணர்ந்தானல்லன். மெய்யாகிய விதியை வென்றவர் உண்டோ? என்று எண்ணிச் சூரனை நோக்கி, "தந்தாய்! அடியேன் சிறிதும் அறிவில்லாதவன்; பேதைமையாற் பேசிய புன்மொழிகளை மனத்திற் கொள்ளாது பொறுத்தருளல் வேண்டும். சிறியவர் அறியாமல் தீய மொழி பேசினால் பெரியவர் சிரிப்பரேயன்றிச் சீற்றம் கொள்வரோ? என் அத்தனே! நீ சினம் கொள்ளாதே. நமது நகரத்தை அலைக்கும் பூதகணங்களையும், வித்தக வீரனாய் வீர வாகுவையும் கொன்று, உன் சித்தத்தை மகிழ்விப்பேன். எனக்கு விடை தருக” என்று கை குவித்து அடி வணங்கினான்.

அப்போது சூரன் சீற்றம் தீர்ந்தான்; இன்பம் உற்றான்; "மைந்தார் நின் மனம் மீண்டும் போரிலே படிந்தது போலும் நல்லது பகைவரை வெல்லுதற்குப் படையெடுத்துச் செல்க" என்றான்.

பானுகோபன் போர் புரிந்து மடிதல் 
தேர்மேல் ஏறினான் பானுகோபன். சேனை வெள்ளம் கடல் போல் பரந்து நின்றது. தந்தையிடம் கொண்ட தலையாய அன்பும், அவன் முடிந்திடுவானே என்ற துயரமும் உள்ளத்தை அலைக்கப் போர்க்களம் நோக்கிச் சென்றான். ஈசன் அருளால் தோன்றில் நூறாயிரம் வீரருக்கும், ஏனைய மைந்தர் எண்மருக்கும் தலைமை பெற்ற வீரவாகு, பெருந்தேர்மீது ஏறிப் போர் புரிய வந்தார்; சிவகுமாரனாகிய முருகப் பெருமானது சேவடியைச் சிந்தித்து வனங்கினார்; பின்னர், விரைந்து சென்று, பானுகோபனது சேனைப் பெருங்கடல் நடுங்கத் தன் வில்லை வளைத்தார்.

பஞ்சபூதங்களுள் நீரும் நெருப்பும் ஒன்றோடொன்று மாறுபட்டுச் சீற்றமுற்றுப் போர் புரிந்தாற்போல வீரவாகுவும் பானுகோபனும் வெம்போர் நிகழ்த்தினர். ஒரு கணப்பொழுதில் இருவரும் ஏறியிருந்த தேர்கள் பல சாரிகை சுற்றின் வீரவாகு விட்ட பாணங்களைப் பானுகோபன் அழித்தான். பானுகோபன் விடுத்த அம்புகளை வீரவாகு சரமாரியால் ஒழித்தார். அந் நிலையில் சங்கர மூர்த்திபோல் சீற்றமுற்ற வீரவாகு, தம் வாட்படையை எடுத்துக் கறங்குபோற் சுழன்று பானுகோபனை எதிர்த்தார். பானுகோடனும் காற்றுப்போல் விரைந்து வந்து வாட்போர் தொடுத்தான். காலனும் கனலியும் கடும் போர் புரிந்தாற்போல இருவரும் வாட்பேர் செய்தனர். அப்போது பானுகோபன் தான் கற்ற வித்தையின் திறத்தால் வீரவாகுவின் வாட்படையை விலக்கி, அவர் தோளில் வெட்டினான். வெட்டுண்ட தோளினின்றும் குருதி பொங்கி வடிந்தது. அது கண்டு மகிழ்ந்தான், பானுகோபன். 

வீரவாகு தோற்றுவிடுவரோ என்று வானவர் அஞ்சித் தளர்ந்தார்கள். அவ் வேளையில் அறுமுகன் திருவடியைக் கருத்திற் கொண்டார், வீரவாகு, வாட்படையை வீசினார்; பானுகோபனது வலத்தோளை அறுத்தார். அப்போது அசுரன், வலக்கையில் இருந்த வாளை இடக்கையால் எடுத்தான்; பின்னும் பெருஞ்சினமுற்று வாட்போர் புரிந்தான். மாற்றான் முயற்சியைக் கண்ட வீரவாகு, அவன் இடக்கையையும் துணித்தார். அந் நிலையில் மாயப்படை தொடுக்க நினைத்தான், பானு கோபன்,அதை உணர்ந்து அவன் தலையை அறுத்துத் தள்ளினார், வீரவாகு. அவ் வீரன் தலையும், மலை போன்ற தோளும் உடலும் மண்மேல் விழுந்தன; அவனுயிர் கவர்ந்த கூற்றுவன், வீரவாகுவின் திறமையைப் புகழ்ந்து தென்புலம் சேர்ந்தான். முனிவரும் தேவரும் பிறரும் ஆடினர்; பாடினர்; ஆர்த்தனர்; "வீரருள் வீரன் நீயே" என்று வீரவாகுவைப் புகழ்ந்தனர்; அவர்மீது மழை போல் மலர்களைச் சொரிந்தனர். பூதர்களோடும் தம்பியரோடும் பாடி வீட்டை அடைந் தார், வீரவாகு; காதலாகிக் கசிந்து கண்ணி மல்கிக் கந்தவேளின் கமல பாதம் பன்முறை பணிந்தார்.

சூரனது கோபமும் தாபமும் 
பானுகோபன் இறந்தான் என்று அறிந்த சூரன் அழுது புலம்பினான்; "மைந்தா! 
மத களிறே! தீவினையேன் உள்ளமே! உள்ளத்தில் அமைந்த தெள்ளமுதே 
என் அப்பனே! உன்னைத் தந்தைக்குத் தந்தையிலான் கொன்றானோ? என் ஐயனே! உன்னை இதற்கே வளர்த்தேன்? அசுரகுல நாயகமே அடைந்தவரை ஆதரிக்கும் அருமனியே! என் செல்வமே தெள்ளமுதே! நீ தனியே போய் எங்கிருந்தாய்? அங்கே நான் வந்தாலும் உன் அமுத மொழி கேட்பேனோ?” என்று சூரன் புலம்பி அழுதான். அப்போது பானுகோபனது உடலை அசுரர்கள் அங்கே எடுத்து வந்தார்கள்.

துண்டமுற்ற மைந்தனது உடலைக் கண்டு துடித்தான், சூரன். அவன் தலையைக் கையிலெடுப்பான்,அதன் அழகைப் பார்ப்பான்; அத் தலையைக் கண்களில் ஒற்றுவான்; முத்தம் தருவான்; பெருமூச்செறிவான்; பூமியில் விழுந்து புரள்வான். அறுபட்ட தலையையும் தோளையும் உடம்பிலே பொருத்திப் பார்ப்பான்; நிலத்தில் விழுந்து அரற்றுவான்; "என் துன்பத்தைக் கண்டும், உயிரே, நீ இன்னும் இருக்கின்றாயே!” என்று ஏங்குவான்.

சொல்லரிய சோகமுற்ற சூரன் எளிய நிலை கண்டு எல்லோரும் ஏங்கி அழுதார்கள். பானுகோபன் தாயாகிய பதுமை, சேடியரோடு சென்று, வெட்டுண்டு கிடந்த மைந்தன்மீது விழுந்தாள்; மயங்கினாள்; "என் மகனே! இது நான் செய்த பாவமோ? வானவர் விடுத்த சாபமோ? மூவர் கோபமோ? மற்று ஏதோ அறியேன்! அந்தோ! வானவர் இந் நகரிலே கந்தனை வருவித்தார்; கடும் போர் மூட்டினார்; என் மைந்தரை யெல்லாம் கொல்வித்தார்; இன்று உன்னையும் வீட்டினாரே, இக் கேடு சூழ்ந்த வானவரின் மாதர் எல்லாம் என்னைப்போல் ஆகுக. ஐயனே! வானவர்க்கு மேன்மேலும் துன்பம் செய்தல் நன்றன்று என்று உன் தந்தையிடம் அன்றே சொன்னேன்; அவர் உணர்ந்தாரில்லை. ஐயோ! இன்று உன்னை இழந்தேனே! இனி மன்னன்தான் உயிர் வைத்திருப்பானோ?” என்று அழுது சோர்ந்தாள்.

அப்பொழுது மன்னன் சோகம் கோபமாக மாறிற்று. பதுமை முதலிய மாதரை மாளிகையின் உள்ளே அனுப்பினான்; அருகே நின்ற அசுரரை நோக்கி, "இன்றே மாற்றார் சேனையை அறுப்பேன்; அவர் குருதியைக் கொண்டு கனல் வேள்வி செய்வேன்; இறந்துபட்ட மகனை எழுப்புவேன். பானுகோபன் உடலைத் தனியிடத்தில் வைத்துப் பாதுகாத்திடுக” எனப் பணித்தான்.

சிங்கமுகன் போர் புரிந்து சாதல் 
அப்போது சூரன் தம்பியாகிய சிங்கமுகாசுரன் மகேந்திர மாளிகையை அடைந்தான். தமையனது பாதம் போர் பணிந்து வணங்கி, "ஐயனே! உன் முகம் வாடியிருக் கின்றதே! என்ன நிகழ்ந்தது? என்று வினவினான். அது கேட்ட சூரன் கூறலுற்றான்: "தம்பி! அன்று நீ சென்றபின், குன்றம் எறிந்த குமரவேள் படையோடு இந் நகரில் வந்து பாசறை கொண்டான். அவன் நிகழ்த்திய போரில் என் பிள்ளைகள் அனைவரும் இறந்தனர்; அமைச்சரும் அழிந்தனர்; படைகளும் பாழ்பட்டன. அரிமுக வீர நிகழ்ந்தது இதுவே. இன்று நீ படையெடுத்துச் சென்று அந்தக் குமரனை வென்று வரல் வேண்டும். அதற்காகவே உன்னை அழைத்தேன்."

சூரன் சொல்லிய செய்தியைக் கேட்ட சிங்கன் மீண்டும் அவனடி பணிந்து, எழுந்து நின்று, "ஐயனே! ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனைப் பாலன் என்று எண்ணினாய்; பழித்துப் பேசினாய். முன்னமே நான் சொல்லிய நன்மொழியும் நஞ்சாயிற்றே! ஊழ்வினையை யாரால் வெல்ல இயலும்? இன்று உன் ஆணைப்படி போர்க்களம் செல்வேன். கந்தனை வெல்லப் பெறுவேனாகில், மீண்டும் வந்து காண்பேன். நான் வெல்லாதொழியின் இங்குள்ளார் எல்லாரும் இறந்துபடுவர். உன் மனத்தில் தோன்றியவாறு செய்க" என்று கை கூப்பி வணங்கினான். பின் நொடிப் பொழுதும் அங்கு நில்லாது விடைகொண்டு வெளியே சென்றான்; சேனைத் தலைவர்களோடு தன் மாளிகையை அடைந்தான்.

பெருஞ்சேனையோடு புறப்பட்டுப் போர்க்களம் புகுந்த சிங்கமுகனைக் கண்ட பூதங்கள் கிளர்ந்து எழுந்தார்கள்; இவனை நாமே வெல்வோம்" என்று மரங்களையும் மலைகளையும் வீசி யெறிந்து போர் புரிந்தார்கள். அகப்பட்ட பூதரை அடுக்கடுக்காக எடுத்து அங்குமிங்கும் எறிந்தான் சிங்கமுகன். மண்ணும் விண்ணும் மற்றைய திசைகளும் பூதமயமாயின. ஐம்பூதங்கள் என்று இது பற்றித்தான் அறிந்தோர் பெயரிட்டனரோ என்று அனைவரும் எண்ணினர்.

நரசிங்க மூர்த்திபோன்ற வீரவாகு அதனைக் கண்டார். "பூதப் படையில் சிங்கமுகன் பாதியைக் கொன்றுவிட்டானே! வில்லா எரும் போரில் அழிந்துவிட்டார்களே! நமது பெரிய சேனை. முற்றும் இன்று சிதைந்துவிடுமே" என்று எண்ணினார்; வில்லை வளைத்துக் கோடி கோடியாக வடிக்கனை தொடுத்தார். எதிரே நின்ற அசுரர்கள் தலையுடைந்து, தோள் அறுந்து தரையில் விழுந்தார்கள்.

இவ் வண்ணம் அசுரப் பெருஞ்சேனை அடிபட்டு அழிந்ததைக் கண்டனர். சிங்கமுகன் மைந்தராகிய நூற்றுவர். அன்னார் வீரவாகுவை வளைந்தனர்; அவர் தோளையும், மார்பையும், கரத்தையும்,கழுத்தையும் இலக்காகக் கொண்டு வாளால் எறிந்தனர். ஆயினும் அவர் உடம்பிற் சிறிதும் வடுப்படவில்லை. அது கண்ட நூற்றுவரும் அவரை வளைத்துப் பிடித்தனர். பற்றிய பகைவரைச் சீறினார், வீரவாகு வாட்படையை வீசினார்; உருத் தெரியாதபடி அவரை அறுத்தெறிந்தார். வாட்போர் முடிந்த பின்பு தமது தேர்மேல் ஏறினார்.

மைந்தர் நூற்றுவரும் ஒருங்கே மடிந்ததறிந்து சிங்கமுகாசுரன் மானமுற்று வருந்தினான். "இறந்தவரை எண்ணி ஏங்கி நின்று வருந்துவதால் பயனுண்டோ? மாற்றார் கூட்டத்தை நொடிப் பொழுதிற் கொன்று, அவரை வாரி வாரித் தின்றாலன்றித் தீருமோ எனது சீற்றம்? மாற்றார் படையை அழித்த பின்னர் அவர் தலைவனாகிய வேலவனையும் வெல்வேன்; வானவர் என்று பேர் பெற்றோரையும் வதைப்பேன்; விரைவில் மூன்றுலகத்தையும் யானே முடிப்பேன்" என்று வஞ்சினம் கூறினான்; தாயாகிய மாயை தந்த கொடும் பாசத்தை எடுத்தான்; அதனை நோக்கி, "மாற்றார் அனைவரையும், ஒரு வழியாகக் கட்டிப் பிடித்து, உதயகிரியில் உய்த்து, அவரை விட்டுப் பிரியாமல் அங்கே காத்துக்கொண்டிரு” என்று சொல்லி வீசினான்.

பல்லாயிரக் கணக்கான பூத வீரரும், வில்வீரர் எண்மரும், மற்றைய தலைவரும், வல்லாளனாகிய வீரவாகுவும் அப்பாசத்தில் அகப்பட்டார்கள். இயற்கையறிவை இழந்து, ஆண்மை பழிந்து, சோர்ந்து கிடந்த வீரர் அனைவரையும் ஆகாய வழியே கொண்டு சென்று, மின்னலைப் போல் பல கடல் கடந்து மேருமலை போல் அமைந்த உதயகிரியிற் புகுந்தது, அப் படைக்கலம்.

அதை யறிந்த முருகப்பெருமான் போர்க்கோலம் கொண்டு புறப்பட்டார். "மூவர்க்கும் தலைவனாய முதல்வன் வந்தான். முக்கட் பெருமான் மைந்தனாய முருகன் வந்தான். மாற்றாரைக் கொல்லும் மடங்கல் வந்தான். வேற் படையுடைய வீரன் வந்தான். ஏவரும் அறிய வொண்ணா இறைவன் வந்தான். தேவ தேவனாய செவ்வேள் வந்தான்” என்று ஒலித்தன, சின்னம் எல்லாம்.

அப்போது தீப்பொறி சிந்தும் கண்களோடு நின்ற சிங்கமுகன், "மாற்றானை இன்றே கொன்று சீற்றம் தீர்வேன்” என்று உள்ளத்தில் உறுதி கொண்டு அண்டமும் அகில திக்கும் தானேயாக ஒரு மாயா வடிவம் பூண்டு நின்றான்; முன்னே நின்ற முருகப் பெருமானை நோக்கி, "கடம்பனே! இறைவனிடம் நீ பெற்றுள்ள திடம்படு வேலின் திறமையெல்லாம் அறிவேன். தாரகனைப் போல் போரில் நான் பேதையனல்லேன்; விரைந்து போர் புரிந்து பார் வீரராகிய பூதர் எல்லாம் உயிர் இழந்தார். மற்றையோர் உன் கண்ணெதிரே என் வயிற்றிற் புகுந்து மறைந்தார், தனியனாய் நீ ஒருவன் நின்றாய். இந் நிலையில் போர் கருதி வந்த உன் ஊக்கம் போற்றுதற்குரியதே" என்று சொல்லி முடிக்கும் முன்னே, அறு முகப் பெருமான் குறுநகை செய்து, ஓர் அம்பை வில்லிற் பூட்டி விடுத்தார். அது சிங்கமுகன் மார்பிற்பட்டு ஊடுருவிச் சென்றது.

அந் நிலையில் அறுமுகப் பெருமான் வீரவாகு முதலிய தம்பியரையும், பூத கணங்களையும் வருவிக்கத் திருவுளங்கொண்டு ஓர் அம்பினை ஏவினார். அது, பல கடல்களையும் கடந்து உதய கிரியை அடைந்தது; வீரரைப் பிணித்திருந்த மாயாபாசத்தைத் துணித்தது. கந்தன் திருவருளால் எல்லோரும் மயக்கம் தீர்ந்து எழுந்தார்கள். அப்போது அப் படைக்கலம் பிரமனுக்குரிய புட்பக விமானம்போல் அனைவரையும் தாங்கிக்கொண்டு, ஆகாய வழியே எழுந்து சென்றது: உதயகிரியை விட்டகன்று, எழுகடலும் கடந்து போர்க்களத்தில் நின்ற முருகப்பெருமானது திருவடியில் வீரரை விடுத்து, அவர் தூணியில் முன்போற் சென்று சேர்ந்தது. அப்போது வீரவாகுவும், நூறாயிரவரும், எட்டு வீரரும், அழிவற்ற பூதப்படை களும், கந்தவேள் திருவடியில் விழுந்து வணங்கினார்கள்.

கந்தவேளின் அம்பினால் அடியுண்டு விழுந்த சிங்கமுகன் மயக்கம் தெளிந்து எழுந்தான். தன் படைகளுள் ஒன்றையும் அவன் கண்டானில்லை; கந்தனே அவற்றைக் கொன்று ஒழித்தான் என்று உணர்ந்தான்; உள்ளம் கொதித்தான்; ஆயிரம் வில்லெடுத்துப் போர் புரிய நின்றான்; அட்டகாசம் செய்தான். அப்போது முருகவேள் ஈராயிரம் அம்புகளை விட்டு அவன் எறிந்த மலைகளைத் தகர்த்தார்; அகன்ற தோள்களை அறுத்தார். ஆயினும், அவை விழுவதற்கு முன்னே முளைத்து எழுந்தன. தவத்தினும் சிறந்ததொன்று இவ் வுலகில் உண்டோ?

அந் நிலையில் நான்கு முகங்களையுடைய பிரமனும், தேவரும், பிறரும் அஞ்சி நடுங்க அறுமுகப் பெருமான் சற்றே உங்காரம் செய்தார். சிங்கமுகனிடம் தோன்றிய தலைகளும் தோள்களும் நடுங்கி ஒளித்தன. முருகன் அம்பால் அறுபட்ட தலையும் கையும் முன்போல் முளையாத தன்மையைக் கண்டான் சிங்கமுகன். பல நாள் ஒதியுணர்ந்த நூல்களையெல்லாம் பேசும் மன்றத்திலே மறந்தவனைப்போல்,மானமுற்று நின்றான்; அப்போது முருகப் பெருமானை நோக்கி, "பாலனே! வேல் எறியவும், வில் வளைக்கவுந்தான் பயின்றாயோ?” என்று ஏளனம் பேசி ஒரு தண்டாயுதத்தை வீசியெறிந்தான்.

சிங்கன் பேசிய பேச்சையும் விடுத்த படையையும் சற்றே கருதினார், முருகன். அவ் வஞ்சகன் உயிரைக் கவர்ந்து வருமாறு தம் வச்சிரப்படையை விடுத்தார். அப் படை விரைந்து எழுந்தது; எதிரே வந்த தண்டப்படையை ஒடித்துப் பொடித்தது; மலையின் மேற் பாயும் இடிபோல், சிங்கன் மார்பைத் தாக்கிப் பிளந்தது; அவனுயிரையும் போக்கிற்று; கங்கையாற்றிலே சென்று கறை போகப் படிந்து நீராடிற்று: கற்பகச் சோலையிற் பொருந்திய மணத்திலே தோய்ந்தது; தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவனாகிய கந்தப் பெருமான் கையில் வந்து சிறப்புடன் அமர்ந்தது.

சூரன் சோகம் 
சிங்கமுகன் இறந்த செய்தியை அறிந்த சூரன் கரிய மேகம்போல் தரையிடை வீழ்ந்தான், புரண்டான்;கை யொடு கை யடித்தான்; மயங்கினான். பண்டை வண்மையும் வீரமும் மேன்மையும் இழந்து, பொங்கிய துயர்க்கடலில் மூழ்கிப் புலம்பினான். "ஐயோ! தம்பி! உலகத்தில் போர் மூண்டதென்றால் உள்ளம் களிப்பாயே! உன்னுயிரையும் கொண்டானோ கூற்றுவன்? நீ இறந்தாய் என்று அறிந்தால் மாயவனும் பிரமனும் இந்திரனும் முன்னைப் பெருமையை அடைவரோ அந்தோ! பொன்னைப் பெறலாம்; பூமியைப் பெறலாம்; மாதரைப் பெறலாம். அருமைத் தம்பி! இப் பிறப்பில் இனி உன்னைப் பெறுவேனோ? அப்பா!"என் உயிர் நீயே; உணர்ச்சியும் நீயே; சுற்றமும் நீயே; பெற்ற தந்தையும் நீயே, தம்பியும் நீயே, தவமும் நீயே" என்று நினைத்திருந்தேனே! நீ சற்றும் கருதாமல் என்னைக் கைவிட்டாயே! தனித்திருக்கக் கற்றாயே!” என்று. சூரன் அழுது அரற்றிய பேரோசை அவன் ஆண்ட அண்டமெங்கும் செவிடுபட அதிர்ந்தது; அவ்வோசை கேட்டு மாலும், பிரமனும், இந்திரனும் மனமகிழ்ந்து ஆரவாரித்தனர்.

திருமால் முருகன் திறமுரைத்தல் 
அப்போது சூரன் கோடி கோடியாக வேற்படை தாங்கி நின்ற ஒற்றரை நோக்கி, "என் ஆட்சியில் உள்ள அண்டங்களிற் சென்று, அங்குச் சுற்றிக் கொண்டிருக்கும் சேனைகளை யெல்லாம் அழைத்து வருக”என்றான். திறமுரைத்தல், அசுரர் வரத்திற் பெரியர், மாயத் திறத்திற் பெரியர்; உரத்திற் பெரியர்; ஊக்கத்திற் பெரியர், சிரத்திற் பெரிய சீற்றத்திற் பெரியர்; கரத்திற் பெரியர், காலனிற் கொடியர். இது தகைய சேனைகளைக் கண்டதும் இந்திரனும் வானவரும் அஞ்சி நடுங்கிக் கவலை கொண்டார்கள். இந்திரன் துளபமாலை யணிந்த திருமாலை நோக்கி, "முதல்வனே! வன்மையும் கொடுமையும் வாய்ந்த அசுரராகிய இருள் நீங்கி ஒளி வருவதில்லையோ? வானவர் கடுஞ்சிறையினின்றும் விடுபடுமாறில்லையோ? பெருஞ் செல்வத்தை இழந்த நமது துன்பம் தொலையுமா றில்லையே? திருவாய் மலர்ந்தருள்க" என்று வேண்டினன்.

அப்போது திருமால், வானவர். வேந்தனாகிய இந்திரனது வருத்தத்தை அறிந்து பேசலுற்றான். "வானவர் வேந்தே! கேள்; காலமாகவும் காலம் கடந்தவனாகவும் கருமமாகவும் கருமம் அற்றவனாகவும்,உருவமாகவும் உருவமற்றவனாகவும், குணங்களாகவும் குணங்கள் அற்றவனாகவும், உலகமாகவும் உலக மல்லாதவனாகவும் உள்ள ஆதியற்ற மூலப் பொருளாய வள்ளலே ஆறுமுகங்கொண்டு அருள் புரிய வந்தார். அவரே பிரமனாக நின்று உலகத்தைப் படைப்பார்; என் வடிவத்தில் அமைந்து காப்பார்; சங்கரன் வடிவத்தில் தோன்றி அழிப்பார்; மின்னுருப்போல் வெளிப்படுவார். அவர்தம் திருவுருவத்தை விரித்துரைத்தல் மறைகளுக்கும் அரிது; சூரன் முதலிய அசுரரை அழிக்க நினைத்தால் ஒரு சிரிப்பால் ஒழிப்பார்; சீற்றத்தால் ஒழிப்பார்; திருக்கண் நோக்கால் ஒழிப்பார் என்றால் தமக்குவமை யில்லாத் தலைவராய முருகவேளின் தன்மையை யாவரே மொழிய வல்லார்? பச்சிளம் பாலன் போலத் தோன்றும் முருகவேள் அசுரரையெல்லாம் வேலால் விரைவில் அறுத்து ஒழிப்பார். அப் படையால் சூரனையும் வெல்வார்; இதில் ஐயம் இறையளவுமில்லை” என்று அருளினன், திருமால்.

சூரனும் முருகனும் போர் செய்தல் 
பெருஞ்சேனையோடு சூரன் போர்க்களம் புகுந்ததை அறிந்து முருகவேள் முறுவல் செய்தார்; போர்க்கோலம் கொண்டு எழுந்தார். விண்ணும் மண்ணும் நெருங்கி நின்ற அசுர சேனை ஆரவாரம் செய்து போர் தொடங்கிற்று. அன்னார் செய்த கடும் போருக்கு ஆற்றாது முன்னணியில் நின்ற பூதப் படை பின்னிட்டது; அசுரப் படையின் செயல் கண்டு நெற்றிக் கண்ணுடைய தந்தையைப்போல் சற்றே சிரித்தார், முருகன்; திருக்கரத்திலே வில்லெடுத்து வளைத்தார். தேவரும் அவ்வோசை கேட்டு நடுங்கினர். மன்னுயிர் எல்லாம் மனம் பதைத்தது.

ஆறுமுகமும், பன்னிரு கையும், அரும் படைக்கலமும் நிகரற்ற வீரமும், ஆண்மையும் போர்க்களத்தில் நிலவக் கண்ட சூரன், முன்னாளில் இருந்த தக்கனைப்போல் ஆணவம் கொண்டு பேசலுற்றான். "பாலனே! என் பெரும் சேனையைச் சிதைத்தாய்; இனிச் சிறுவன் என்று உன்னை விடப்போவதில்லை;போரில் புறங்காட்டிப் போனாலும் உன்னை அழிப்பேன்; வானவர்குழுவை யும் கணங்களையும் ஒழிப்பேன்" என்று சொல்லி, மாயையில் வல்ல இந்திர ஞாலம் என்னும் இணையில்லாத் தேர்மேல் நின்று, எண்ணிறந்த உருவம் கொண்டு, சரமாரி பொழிந்தான்.

முருகவேள் அதனைக் கண்டு "நன்று நன்று" என்று நகைத்தார்; ஞானாஸ்திரத்தை எடுத்து விடுத்தார். அப் படை சென்று சூரன் மாயத்தை முற்றும் அறுத்தது. மாய வடிவம் மறைந்த நிலையில் வலிமை யிழந்து, மனம் தளர்ந்த சூரன் தனியனாய்த் தேர்மேல் நின்றான். அந் நிலை கண்ட தேவர் ஆரவாரித்து அறுமுகப் பெருமானைப் போற்றி நறுமலர் தூவினர். அப்போது சூரன் தேரோடு மறைந்தான்; அண்ட கூடத்தின் வாயிலை அடைந்து அறை கூவினான்; அப்பால் அமைந்த அண்டத்திற் புகுந்தான். அது கண்ட முருகவேள் அங்கும் அவனைத் தொடர்ந்து சென்றார். சூரன் அண்டங்கள் தோறும் மின்னல் போற் பாய்ந்தான்; கடும் போர் புரிந்தான்; இளைத்த வேளையிற் கரந்து சென்றான். ஆயினும் அவனை விடாது தொடர்ந்தார், அறுமுகப் பெருமான். அண்டம் எங்கும் சுற்றிய அசுரர் கோமான் மீண்டும் மகேந்திர நகரம் போந்தான். நிழல் போல் அவனை விடாது தொடர்ந்த கந்தவேளும் விரைந்து அவ்விடம் சென்றார். சூரனையும் அவனைத் தொடர்ந்து வந்த வேலனையும் கண்ட அசுரசேனை பொங்கி எழுந்து அறுமுகனைச் சுற்றி ஆரவாரித்தது அதைக் கண்டு சற்றே சிரித்தார், முருகப் பெருமான். முன்னால் ஈசனது சிறு நகையால் எரிந்த திரிபுரம் போல், அசுர சேனை நீறுபட்டு அழிந்தது. தந்தையைப் பின்பற்றுதல் மைந்தர்க்குத் தக்கதன்றோ?

மாயையின் சேவை 
அது கண்ட சூரன், "என் தம்பியரும், மைந்தரும், அமைச்சரும் ஏனைய படைத்-தலைவர்களும் முன்னமே அழிந்தார்கள். அளவிறந்த சேனையையும் இன்று குமரன் கொன்றான். யான் தன்னந் தனியனாய் நின்றேன். இனி, செயற்பாலது யாது?” என்று கருதிப் பெருமூச் செறிந்தான். அன்னையாகிய மாயையை மனத்தில் நினைத்தான். உடனே அவள் வந்து தோன்றினாள். "வீர மைந்தா! இங்குத் தனியனாய் நிற்கின்றாய்! தளர்ந்து தோன்றுகின்றாய்! என்னை நினைத்தாயே! உன் கருத்து என்ன? சொல்லுக”என்றாள்.

அப்போது சூரன் மாயையை நோக்கி, "தாயே! இதுவரை நிகழ்ந்த போரில் என் வீரத் தம்பியர் விழுந்தார். மைந்தர் மாண்டார், அமைச்சரும் அழிந்தார். யான் ஒருவனே எஞ்சி நிற்கின்றேன். இறந்தவர் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று எழுதல் வேண்டும் அதற்கு ஓர் உபாயம் கூறுக" என்று வேண்டினான்.

மாயை அது கேட்டு நகைத்து, "அப்பா சூரனே! பன்னிரு கரங்களோடு விளங்கும் பரமனைப் பாலன் என்று நினையாதே! அவன் வேற்படையால் நீ விரைவில் விழுந்திடுவாய். மாதா வுரையை நீ மனத்திற் கொள்வாயா? தலை விதியைத் தவிர்க்க யாரால் இயலும்? அது நிற்க, உன் மனம் மகிழும் வண்ணம் இறந்தவர் உயிர் பெற்று எழ வேண்டுமாயின், புறக் கடலின் மருங்கே மங்கல மலையொன்று உண்டு. அமுத சீத மந்தர கூடம் என்பது அதன் பெயர், அக் குன்றத்தை இங்கே வரவழைத்து நினைத்த செய்கையை நிறைவேற்றிக்கொள்க" என்று சொல்லிச் சென்றாள்.

அம் மொழி கேட்ட சூரன், "தாய் சொல்லிய சூழ்ச்சியே தக்கது. இறந்தோரை எழுப்பும் வழி இதுவே" என்று மனமகிழ்ந்து, இந்திரஞாலம் என்னும் தேரை நோக்கி, "நீ மனோ வேகமாகச் சென்று, புறக்கடலின் அருகேயுள்ள "அமுத மந்தர மலையைப் பெயர்த்துக் கொண்டு வா” என்றான். உடனே இந்திர ஞாலம் எழுந்தது; ஏழு கடலையும் கடந்தது; புறக்கடலிற் போந்தது; அமுத மந்தர மலையை எடுத்தது; சென்ற வழியே மகேந்திர நகரத்திற்கு விரைந்து வந்தது. அம் மலைக்காற்று அமர்க்களத்தில் வீசிற்று. அன்றுவரை போர் புரிந்து இறந்த வீரர் எல்லோரும் ஒருங்கே உயிர் பெற்று எழுந்தார்கள். சிங்கமுகன் எழுந்தான்; பானுகோடன் எழுந்தான்; இளைய வச்சிரவாகு எழுந்தான்; எரிமுகன் எழுந்தான்; தருமகோபனும் இருபுதல்வரும் எழுந்தனர். மக்கள் மூவாயிர்வளும் எழுந்தனர்.

முருகவேள் சங்காரப் படை விடுதல் 
இவற்றைக் கண்டார், முருகவேள். "சூரன் செய்த சூழ்ச்சியும், மாயை சொல்லிக் கொடுத்த வழியும் மந்தர மலையின் மகிமையும், பகைவர் பிழைத்து எழுந்த வகையும் நன்று நன்று" என்று நகைத்தார். விடுதல் அப்போது அசுரப் பெரும்படை வேகமாக வந்து அறுமுகப் பெருமானை வளைத்தது. அவற்றைத் தொலைக்கக் கருதிய பெருமான் மன்னுயிரையெல்லாம் அழிக்கவல்ல சர்வ சங்காரப் படையை எடுத்தார்; மனத்தினாற் பூசனை புரிந்து அப்படைக் கலத்தை நோக்கி, "போர் முனையில் நிற்கும் அரிமுகன் முதலிய அசுரத் தலைவரையும், அளவிறந்த சேனையையும் அழித்திடுக" என்று கூறி விடுத்தார்.

சங்காரப்படை புறப்பட்டது; சூரன் சேனையை முற்றும சூறையாடிற்று; இந்திரஞாலத் தேரின் மீதிருந்த மந்தர மலையை நொறுக்கி எறிந்தது; கந்தவேள் கையில் மீண்டும் வந்தடைந்தது. அரிமுகனும், பானுகோடனும், எரிமுகனும், வச்சிரவாகுவும் நூற்றிருவரும், மூவாயிரவரும், தருமகோபனும், பெருஞ் சேனையும் பிறரும் மந்தர மலையோடு மடிந்து விழுந்தார்கள் சிவப் படையின் செய்கையைக் கண்டான், சூரன், மனம் தளர்ந்தான்; வன்மை இழந்தான்; வாட்டம் உற்றான்; பெருமூச் செறிந்தான்; முன்னைப்போல் தன்னந் தனியனாய் நின்றான்.

சூரன் தேரும் முருகன் கணையும் 
அந் நிலையில் அவன் உள்ளத்திற் கடுஞ்சினம் மூண்டது. "என் சேனையெல்லாம் சிதைத்த சிறுவனை என்னைப்போல் தனிமை செய்து பின் வெல்வேன் " எனத் துணிந்து இந்திரஞாலத்தை நோக்கி, "நம்ழைப் பகைத்து நிற்கும் பூத கணங்களையும் விற்படை
தாங்கிய வீரரையும் கவர்ந்து சென்று அண்டி முகட்டிற் கொண்டு சேர்த்துக் காவல் செய்திடுக” எனச் சூரன் பணித்தான். அவ் வண்ணமே அத் தேர் கடலபோற் பரந்து நின்ற சேனையின் அறிவை மயக்கிக் கவர்ந்து சென்று, அசுரர்கோன் பணித்தவாறே அண்டத்தின் முகட்டிற் கொண்டு சேர்த்துக் காவல் செய்து நின்றது.

சேனையை இழந்து தனியராக நின்றார், முருகப் பெருமான், அது கண்டு மகிழ்ந்தான், அசுரர் கோமான், தன் தேரின் திறங் கண்டு முக மலர்ந்தான். வானவர் மீண்டும் துன்புற்று மயங்கினர். மாற்றான் நிலையும், தம் நிலையும் கண்டார், முருகவேள்; சீற்றம் கொண்டார்; வில்லை வளைத்தார்; திண்மை வாய்ந்த அம்பினை நோக்கி, "நமது சேனையைக் கவர்ந்து அண்டமுகட்டிற் கொண்டு சேர்த்த வலிய தேரை விரைவிற் கொண்டுவருக" என்று கூறி விடுத்தார். ஒப்பற்ற அம்பு, வேல் போல் ஒளி வீசிச் சென்றது. ஏழுலகங்களையும் கடந்தது; ஏனைய பதங்களையும் நொடிப் பொழுதில் விட்டகன்று அண்ட முகட்டை நாடிச் சென்றது. அங்குப் பெருஞ்சேனையைத் தன்னகத்தே கொண்டு நின்ற தனிப் பெருந் தேரைக் கண்டது; அதன் வலிமையை முரித்தது; சேனையோடு தேரையும் பற்றிக் கொணர்ந்து வெற்றி வேலன் முன்னே விட்டது.

வானவர் போற்றி ஆரவாரம் செய்தனர். வீரவாகுவும் பிறரும் தேரினின்று ஊக்கத்தோடு இறங்கினர். அப்போது முருகவேள் இந்திரஞாலத்தை நோக்கி, "அழகிய நெடுந் தேரே! இனி நீ அச் சூரனிடம் செல்லாதே; அவன் இறத்தல் திண்ணம்; இங்கேயே நில்" என ஆணையிட்டார். அண்டத்தை யடைந்த தேர் அறுமுகன் ஏவிய கணையால் மீண்டு வந்ததைக் கண்டான், சூரன்; பூதப் படைகள் எல்லாம் மீண்டும் போர்க்களம் போந்ததும் அறிந்தான். தனது தேர் தன்னிடம் வராததையும் தெரிந்தான். கடுங்கோபம் கொண்டான்.

சூரப் பறவையும் முருகன் மயிலும் 
மாயையின் திறத்தால் சூரன் கொடியதொரு பறவையின் உருவம் கொண்டான், பெருங்கடல் போல் முழங்கினான்; சிறகு பெற்ற மலைபோல் எழுந்து யூதர்களை அறைந்தான்; கூரிய மூக்காற் குத்தி விழுங்கினான்; அறுமுகப் பெருமான் ஏறியிருந்த தேரையும் சுற்றிச் சுற்றி வந்து அடித்தான்; பரந்த கடல்களின் எல்லையளவும் பறந்து சென்றான்; மீண்டு வந்தான்; நிலவுலகம் முழுவதும் சென்று மீண்டான், நாகலோகமும் சென்று வந்து பூதங்களைப் புடைத் தான்; எங்கும் சுழன்று திரிந்தான்.

இவ்வாறு பறவை வடிவம் பூண்டு போர் புரிந்த சூரனைக் கண்டார், முருகவேள், பறவையைத் தேர்மீது இருந்து போர் செய்து கொல்லுதல் பழியாகும் என நினைத்தார்; இந்திரனை நோக்கினார். கந்தப் பெருமான் கருத்தினையும், தன்பால் அவர் கொண்ட கருணையையும் அறிந்த இந்திரன் அழகிய தோகையையுடைய மயிலாக மாறி வந்தான்; மரகதக் குன்றுபோல் வேலனைப் போற்றி நின்றான்; "ஐயனே! வானவர் எல்லாம் வணங்கி நிற்க எளியனாகிய என்மீது கருணை வைத்தாய்; ஆதலால் புன்மை தீர்ந்தேன்; நன்மையுற்றேன்; பிறப்பெனும் பேதைமையும் போக்கினேன்” என்று இந்திரன் கூறியபொழுது முருகப் பெருமான் தேரினின்றும் இறங்கித் தோகை மயில்மேல் ஏறினார்; சூரனைத் தொடர்ந்து சென்றார். .

தொடர்ந்து வந்து தொல்லை விளைவித்த முருகன் செயல் கண்டு சூரன் மனந்தளர்ந்தான்;துயரடைந்தான்; சீற்றம் கொண்டான்; அவர் கையில் இருந்த வில்லைக் கடித்து முரிக்கக் கருதி வந்தான். அது கண்ட முருகவேள் மற்றொரு கையில் அமைந்த வாட்படையை வீசிப் பறவையின் உடலை இரு கூறாக வெட்டினார். அரி, அயன் முதலிய தேவர்கள் ஆனந்தமுற்று ஆடினர்.

சூரன் மாயையும் முருகன் அம்பும் 
அப்பொழுதும் சூரன் அழிந்தானல்லன். மாய வடிவங்கள் பல எடுத்தான். பேய்போல் வருவான், புகையும் தீப் போல் தோன்றுவான்; சுழல் காற்றெனத் திரிவான், கடலெனப் பரந்து நிற்பான். அம் மாயா வடிவங்களை நோக்கி, முருகவேள், ஆயிரங் கோடி அம்புகளை எடுத்து அவற்றை நோக்கி, "அம்பாகிய அமரரே! நீர் சென்று சூரன் எடுத்துள்ள மாய வடிவங்களை அடியோடு கெடுத்து வருக" என்று விடுத்தார். அவ் வம்புகள் விரைந்து சென்றன; வேகமும் கோபமும் கொண்டன; சூரன் எடுத்த ஓர் உருவத்திற்கு ஏழுருவம் எடுத்தன; எட்டுத் திசையிலும், விண்ணிலும் மண்ணிலும் செறிந்தன; அவன் மாயங்களை யெல்லாம் அழித்தன. மாறுபட்ட சூரன், ஒருவனாய் அப் போர்க் களத்தில் நின்றான். அவன் மாயத்தை ஒழித்த அம்புகள் மீண்டும் சென்று முருகவேள் தூணியிற் புகுந்தன.