ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்

ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ணரைக் காண நரேன் தட்சனேசுவரம் சென்றான். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு அவனைக் கண்டதில் கொள்ளை மகிழ்ச்சி. உடனேயே உள்ளே சென்று இனிப்புகளைக் கொண்டு வந்து, அவனை ஒரு சிறு குழந்தையாகக் கருதி அவனுக்கு ஊட்ட ஆரம்பித்துவிட்டார். அவன்மீது பேரன்பு கொண்ட அன்னையானார் அவர்.
பிறகு நரேன் தான் இதுவரைப் பல குருமார்களிடம் கேட்ட அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டான்:
`ஐயா, தாங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?`
`ஆம், உண்மையில் தரிசித்திருக்கிறேன்` என்று பதிலளித்தார் ஸ்ரீ ராமகிருஷனர். `உன்னைப் பார்பதைப் போலவே, அவரையும் தெளிவாகப் பார்க்கிறேன். உன்னைக் கண்டு பேசுவது போலவே, ஒருவரால் கடவுளைக் காணவும் பேசவும் முடியும்` என்றும் கூறினார்.
இந்த பதிலைக் கேட்டு நரேன் ஆச்சரியமடைந்தான். அவன் உள்ளம் ஆனந்தத்தால் நிறைந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறிய அனைத்தையும் அவன் கவனமாகக் கேட்டான்.
`நான் தேடிக் கொண்டிருந்த குரு இவரே!` என்று நரேனின் மனம் கூறியது. நரேன் அவருடைய சீடன் ஆனான்.
ஸ்ரீ ராமகிருஷனர் கடவுளைக் கண்டவர் என்று நரேன் அறிந்திருந்தான். இருப்பினும், கேள்விகள் கேட்காமல் எதையும் அவன் ஒப்புக் கொள்வதில்லை. இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணரும் விரும்பினார். தன்னிடம் வந்த இளைஜர்கள் சுயமாக சிந்திப்பதையும், கேள்விகள் கேட்பதையும் அவர் வரவேற்றார்.